Thursday, July 16, 2009

இசை மேதை டி.கே. பட்டம்மாள் மறைந்தார்

கர்நாடக இசையுலகின் இணையற்ற இசை மேதை டி.கே.பட்டம்மாள் மறைந்தார். சங்கீத தேவதையின் சந்நிதியில் இடைவிடாது நாத மயமாய் வர்ஷித்த வீணை ஓய்ந்துவிட்டது. இசையுலகினை வெற்றென்ற அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. யாரும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடம். இசை இலக்கணங்கள் அத்தனையையும் பூரண ஆபரணமாகத் தரித்துப் பொலித்த இப் பெருமாட்டியின் இடத்தை யார் நிரப்ப முடியும்?

காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற கிராமத்தில் 1919-ஆம் ஆண்டு இந்த இசைத் தாரகை உதித்தது. தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர். தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். தாய் ராஜம்மாள் கச்சேரி செய்யும் அளவுக்கு சங்கீதம் அறிந்தவர்தான். ஆனால் அன்றைய வழக்கப்படி குடும்பப் பெண்கள் பாட்டும், நடனமும் கற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வகையில் பார்த்தால் அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி செய்தவர் பட்டம்மாள்தான். அதேபோல முதலில் நாட்டியமேடை ஏறிப் புரட்சி செய்தார் ருக்மணி அருண்டேல். இவர்களது அரங்கப் பிரவேசத்துக்குப் பின்னர்தான் அந்தணர் குலத்திலிருந்து பலர் மேடை ஏறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் என்ற ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகள் பட்டம்மாள். தாயிடம் சிட்சை பெற்ற பட்டம்மாள் 1932-ல் தனது பத்தாவது வயதிலேயே ரசிக ரஞ்சனி சபாவில் மேடையேறி முதல் கச்சேரி செய்து புதிய வரலாறு படைத்தார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், கான சரஸ்வதி மற்றும் சங்கீத நாடக அகாதெமி வழங்கும் விருதுகள் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் டி.கே. பட்டம்மாள்

ஆரம்பத்தில் பட்டம்மாள் திட்டமிட்டு ஸரளி, ஜண்டை வரிசை, கீதம், வர்ணம் என்று வழக்கமான பாணியில் இல்லாமல் சங்கீதத்தைக் கற்றார். ஆரம்பத்தில் அப்பா சொல்லிக் கொடுத்த ஸ்லோகங்களுடன்தான் அவர் சங்கீதப் படிப்பு ஆரம்பித்தது. பின்னாளில் ஆரணியிலிருந்த தெலுங்கு வாத்தியார் ஒருவரிடம் பாட்டு சிட்சை நடந்தது. பின்னாளில் தீட்சிதர் வம்சத்தில் வந்த அம்பி தீட்சிதரிடமே சங்கீதம் கற்றார் பட்டம்மாள். கோடீஸ்வரய்யர், பாபநாசம் சிவன் போன்ற வாக்கேயர்களிடம் நேரடியாகக் கற்கும் பாக்கியம் பெற்றவர் அவர்.

காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையின் பாணியிலிருந்து பல விஷயங்களை நாயனாவின் சீடர் கிருஷ்ணசாமி ஐயங்காரிடமிருந்து பட்டம்மாள் கற்றார். அதன் காரணமாகத்தான் கரணம் தப்பினால் மரணம் என்கிற வகையில் வரும் நிரடான பல்லவிக் கணக்குகளெல்லாம் பட்டம்மாளின் விரல் நுனியில் சேவகம் செய்தன.


லய சாம்ராஜ்யத்தை கட்டி நிர்வகிக்கும் அவரது அபூர்வத் திறமை எவரையும் பிரமிக்க வைப்பது. இந்தத் திறமையால்தான் அன்றைய பெரிய பெரிய சங்கீத ஜாம்பவான்களிடம் பிரம்ம ரிஷிப் பட்டம் பெற்றார். அரியக்குடி பட்டம்மாளின் பாட்டைக் கேட்டு. பட்டம்மாள்... பாட்டம்மாள்... பாடுபட்டம்மாள் என்று பாராட்டினார். எட்டுத் திசையிலும் பட்டம்மாளின் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. புகழின் உச்சிக்குப் போனார். பாமர ரசிகர்களிலிருந்து தேசப் பிதா காந்தி வரை அவரது பாட்டைப் புகழ்ந்தனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று முழுவதும் தமிழக ரேடியோவில் தேசபக்திப் பாடல்களை இடைவிடாமல் பாடும் அளவுக்குப் புகழ் பெற்றார். உள்ளூர் பாராட்டுகள் முதல் சங்கீத கலாநிதி, பத்ம விபூஷண் வரை பல்வேறு விருதுகளையும் பெற்றார். கர்நாடக சங்கீதத்தில் லட்சியம், லட்சணம் என்று இரண்டு அம்சங்களைச் சொல்வார்கள். அப்பழுக்கின்றி இவ்விரு அம்சங்களையும் தம்மிடத்தே கொண்டு ஜொலித்த கலைஞர்கள் மிக அபூர்வம். அப்படி ஜொலித்த ஓர் அபூர்வ தாரகை பட்டம்மாள். வெறும் தாரகை மட்டுமல்ல... அவர் ஒரு மார்க்கதரிசியுமாவார். மறைந்த கலைஞர் டி.கே. ஜெயராமன் தொடங்கி பட்டம்மாள் போட்டுக் கொடுத்த பாதையில் பயணம் செய்த செய்கிற கலைஞர்களை ஒரு பட்டியல் போடலாம். பாடாந்தர சுத்தத்துக்கு இன்னொரு பெயர் பட்டம்மாள்; அழுத்தம், பூரண ராகபாவம்; சாகித்ய பாவம்; அதுவும் சாகித்யத்தை தெள்ளத் தெளிவாய் உச்சரிக்கிற விஷயத்தில் பட்டம்மாவுக்கு நிகர் அவர்தான். வழவழா விவகாரமே அவரிடம் பார்க்க முடியாது.

வராளி ராகத்தில் தியாகராஜரின் "ஏடி ஜென்மமிதி' கிருதியை டி.கே.பி. பாடிக் கேட்டவர்களுக்குத் தெரியும். இந்தக் கிருதியில் ""என்ன ஜென்மமடா இது ராமா'' என்று ஏங்கித் துக்கிக்கிறார் தியாகராஜர். அவரது ஆத்ம வேதனையை வராளியின் ஜீவன் பொங்கி வழியத் தன் இறைஞ்சுகின்ற குரலில் சாகித்ய பாவம் பொலியப் பொலிய டி.கே.பி. பாடுகிறபோது கல் நெஞ்சும் நெகிழ்ந்து கண்ணீர் மல்கும். இனி இந்த சங்கீத ரசவாதத்தை யார் நிகழ்த்துவார்? இனி யார் அப்படிப் பாடிக் கேட்கப் போகிறோம்?

கடந்த நூற்றாண்டில் மூன்று இசைக் குயில்கள் கர்நாடக இசை மேடைகளில் கானமழை பொழிந்தனர். எம்.எஸ். சுப்புலெட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி மற்றும் டி.கே.பட்டம்மாள் ஆகிய மூவரும் எம்.எஸ்., எம்.எஸ்.வி., டி.கே.பி. என்பதுதான் பரவலாக அழைக்கப்பட்டனர். எந்த இசை விழாவாக இருந்தாலும் இவர்கள் மூவரது நிகழ்ச்சியும் இல்லாமல் போனால் அது நிறைவில்லாததாகக் கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. மூவருக்குமே தனி தனி பாணி இருந்தது மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்தது.

"நாம் இருவர்' திரைப்படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளில், சென்னை நகரத் தெருக்களில் நள்ளிரவு நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த அனைவரின் உற்சாகப் பாடலாக இருந்தது என்பார்கள். அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பாரதியாரை மட்டுமா, பட்டம்மாளையும் அல்லவா ஞாபகம் வரும்?

0 பேரு சொன்னாங்க: