Friday, July 31, 2009

என் விடுகதைக்கு விடையை சொன்னா....|பாகம்-2

1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?
6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?
8. கிளை இல்லா மரம் வெட்ட வெட்ட வளரும். அது என்ன?
9. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?
10. ஓட்டுக்குள்ளே வீடு; வீட்டுக்குள்ளே கூடு. அது என்ன?
11. அழுவேன், சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
12. ஆடும் வரை ஆட்டம், ஆடிய பின் ஒட்டம் அது என்ன?
13. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
14. ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன?
15. கொம்பு நிறை கம்பு அது என்ன?
16. தலையை சீவினால் திறப்பான் அவன் அது என்ன?
17. நாலு காலு உண்டு வீச வாலில்லை அது என்ன?
18. பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
19. மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
20. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?

Wednesday, July 29, 2009

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்!

அன்றும் அடைமழை, ஒரு வாரமாக! பெண்ணையாறும், கண்மாயும் நிரம்பி கழனி கொல்லையெல்லாம் தண்ணீரால் நிரம்பி வழிந்தது.

"என்னடா சனியன், ஒண்ணு பேஞ்சு கெடுக்குது; இல்லன்னா காஞ்சு கெடுக்குது”

மயில்சாமி வீட்டுத் திண்ணையில் மழைக்கு ஒதுங்கிய பெரிசுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.

தென்பெண்ணையின் தென்கோடி நன்செய் பூமியில் போன மழைக்கு உழுது விதைக்கப்பட்டு இந்த மழைக்கு அறுவடைக்குத் தயாராகக் காத்துக்கிடந்த அரைக்காணி நிலம், தண்ணீரால் சூழ்ந்து கிடந்தது. வெள்ளையம்மாளின் மொத்த உழைப்புக்கு ஆண்டவன் கொடுத்த நெல் பரிசை வீடு கொண்டு வந்து சேர்க்க முடியாமல் நான்கைந்து நாட்களாக தவியாய் தவிக்கிறாள்.

"ஆளாளுக்கு ஆறுதல் சொல்லியும் தேத்த முடியல இந்த வெள்ளையம்மாள” பாட்டிகளும், கிழவர்களும் கூட பேசிக்கொண்டிருந்தனர். "அழாதேம்மா அந்த ஆண்டவன் நம்மள காப்பாத்துவான்” மகள் வடிவு சொன்னதும்தான் சற்று முகம் கொடுத்து பேசினாள் மற்றவர்களிடம்.

வெள்ளையம்மாள் கடின உழைப்பின் மறுபெயர். காட்டாற்று வெள்ளம்போல் கஷ்டங்கள் கரைபுரண்டு வந்தாலும் கவலைப்படாத நெஞ்சுறுதி. அது அவளது அப்பன் மயில்சாமியிடம் இருந்து வந்தது. இத்தனையும் இருந்ததால்தான் ஒரு சோடி வெள்ளாடும், ஒற்றைக் காறாம் பசுவையும் தகப்பன் கொடுத்த சீதனமாய் வைத்துக்கொண்டு சின்னசாமிக்கு மனைவியாகி இந்தக் கரிசல் பூமியில் காலடி வைத்து வைராக்கியத்தோடு உழைத்து அரைக்காணி நிலம் வாங்கி ஊர் மெச்சும்படி குடியானாள். அப்படிப்பட்ட நெஞ்சுரம் கொண்டவள் தண்ணீரில் கிடக்கும் விளைச்சலைக் கண்டு வெலவெலத்துப் போனாள்.

அடை மழையின் அடிப்படைக்குக் காரணமான கருத்துத் திரண்ட மேகங்கள் எல்லாம் அன்று இரவோடு இரவாகக் காணாமல் போயின. காலைக் கதிரவன் ஒளிக்கீற்றை பூமிக்கு அனுப்பியிருந்தான். புல், பூண்டில் இருந்து தழைச்செடி கொடிகளெல்லாம் மழைநீரால் சிலிர்த்துப் போன காலம் மாறிப்போய் வெய்யிலில் சற்றே உலர்த்திக் கொண்டிருந்தன.

"அம்மா...அம்மா... இங்கே வந்து பாறேன். சூரியன் வந்துடுத்தும்மா மழை நின்னுப்போச்சி” சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் ஆடினாள் வடிவு.

"அட ஆமான்டீ நெசந்தான்! வடிவு, சீக்கிரம் போயி வடமலை அண்ணனைக் கூட்டியா, நானும் போயி கண்ணாயிரம் அண்ணனைக் கூட்டியாறேன்” என்று அவசரமாக மேலத் தெருவுக்குக் கிளம்பினாள்.

வடமலையண்ணனிடமும், கண்ணாயிரம் அண்ணனிடமும் வெள்ளையம்மாள் "அண்ணே நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போயி கம்மாவுக்கு கீழ்பக்கமாக வாய்க்கா தோண்டி தேங்கியிருக்குற தண்ணிய தொறந்துவுடுங்க” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

"அட ஆமாய்யா நல்லா வெயில் காட்டுது வாய்க்காயில் தண்ணி வடிய ஆரம்பிச்சுட்டா போதும் ஆளும் பேருமா சேர்ந்து அறுத்துப் போட்டுடலாம்” என்றனர். "அட இன்னிக்கு ஒரு நாளைக்கு என் வேல கெட்டாலும் பரவால்ல” என்று கூட்டத்தில் படபடத்து சொன்னான் பாண்டி. ஒட்டுமொத்த ஊர்சனமும் வெள்ளையம்மாளுக்கு ஒத்தாசையாக இருந்தனர். இதற்கிடையே பெரிசு பெரியகருப்பு இந்த நேரத்துல அந்தப் பாவிப்பய சின்னச்சாமி இல்லியேய்யா” என்றதும் வடமலைக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "யோவ் பெரிசு வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கமாட்டே வெள்ளையம்மாளே வெலவெலத்து போயிருக்கு” எந்த நேரத்துல என்ன பேசணும்னு உனக்குத் தெரியுதா என்றான். அதற்குப் பெரிசு "நான் சொல்லுறதுல என்னடா தப்பு. இந்த சீமையில இல்லாத வேலையா மெட்ராசுல கெடக்கு. பாவிப்பய போயி ரெண்டு வாரமாச்சு, ஒத்த புள்ளய வச்சுக்கிட்டு ஒண்டியா வயல அறுக்கணும்... அடிக்கணும்னு வெள்ளையம்மாளுக்கு எவ்ளோ வேல, நெனச்சுப் பாத்தானாய்யா” என்று வேகமாகப் பேசினார். பதிலுக்கு கண்ணாயிரம் "யோவ் பெரிசு... நீ போயி அறுத்துப் போட்டிடுவியாக்கும்” என்றான் நக்கலாக.

"ஏண்டா வரமாட்டேனா... வெள்ளையம்மாளுக்காக நானும் வயலுக்கு வாரேண்டா... ஆளோட ஆளா நின்னு அரிபட்டம் போறன்டா” என்றதும் ஒட்டு மொத்த கூட்டமும் திக்குமுக்காடிற்று.

"சரிப்பா, பேசிக்கிட்டே இருந்தா? பொழுது போவுதுல்ல... வெள்ளையம்மா, நீ போயி செட்டியார் கடையில எல்லா ஆளுக்கும் டீ, பன்னு வாங்கியாந்துடு. நானும் வடமலையும் முன்னாடி போயி காவா தோண்டி தண்ணிய வடிய விடுறோம்” என்று சொல்லி மண் வெட்டியோடு சென்றான் கண்ணாயிரம்.

செட்டியார் கடையில் இருந்து டீயோடும், பன்னோடும், ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தாள் வெள்ளையம்மா. குலசாமி அய்யனாரப்பனை வேண்டிக்கொண்டாள். "வெளஞ்ச நெல்லு வீடு வந்து சேர்ந்தா பூ வச்சு பொங்க வச்சு படைக்கிறேன் சாமி. என்ன காப்பாத்து” என்று மனசில் சொல்லிக்கொண்டே வயலை அடைந்தாள். "எல்லாரும் வாங்க மொதல்ல டீயைக் குடிங்க... பன்னு தின்னுங்க” என்றாள். எல்லோரும் கரைக்கு வந்து டீயையும் பன்னையும் சுவைத்தனர். வயலில் மேவாய் தண்ணீர் விறுவிறுவென்று கீழ்நோக்கி வடிய ஆரம்பித்தது.

"ஏன்டா.. ஆளாளுக்கு மோதி அறுக்குற வழிய பாருங்க. சும்மா சொனங்கினா வேலைக்காவாது” என்று உரத்திச் சொன்னான் கண்ணாயிரம்.

"அவன் சொல்றதும் சரிதான். டேய் வடமலை, பெரிய அரிபட்டமா ஈசானி மூலைய பாத்து நீ போ. டேய் காத்தான் அதேமாரி நீயும் பெரிய அரிபட்டமா புடிங்க” என்றார் பெரிசு.

வடமலையும், பாண்டியும், கண்ணாயிரமும் காத்தானும் பெரிய பெரிய அரிபட்டமாக அறுத்துக்கொண்டு போனார்கள். அதைப் பார்த்து சந்தோஷப்பட்டு தானும் கையில் கொண்டு வந்த கருக்கரிவாளோடு வயலில் இறங்கி தனக்கென்று சின்னதாய் ஒரு அரிபட்டம் பிடித்து வெள்ளையம்மாள் அறுத்துச் சென்றாள். மற்ற எல்லோரும் அவளைப் போலவே சின்னச் சின்ன அரிபட்டம் பிடிக்க அறுவடை ஒரு வழியாக அனல் பறந்தது.

அனைவருக்கும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க வியர்வைக் கொத்துக் கொத்தாய் கொட்டித் தீர்த்தது. முக்கால்வாசி வயல் அறுப்பு முடியும் தருவாய் வந்தது. "ஏம்மா வெள்ளையம்மா நீ அறுத்தது போதும். அறுத்த கதிரை அடிக்க களத்துமேட்டுல களம்பாரு. அரசமரத்தடிய கூட்டி சுத்தம் பண்ணு. களம், கல்லு, மண்ணு இல்லாம சுத்தமாக இருக்கணும்” என்றார் பெரிசு பெரிய கருப்பு. "சரிப்பா” என்று சொல்லிக்கொண்டு மகள் வடிவை அழைத்து, "யம்மா வடிவு நீ போயி ரெண்டு முறம், ரெண்டு கூடை, சாக்கு எல்லாம் வீட்டில் இருந்து சீக்கிரம் எடுத்தா” என்று அனுப்பி வைத்தாள்.

"பெரிசு களம் மண்ணு பெரளாம சும்மா கட்டாந்தரையாட்டம் இருந்தாதான் அடிக்கும்போது வேலை குறையும். நீயும் அறுத்தது போதும் வெள்ளையம்மாளுக்கு ஒத்தாசையா வேலைய பாரு” என்றான் பாண்டி. "அதுவும் சரிடா நானும் போறேன்” என்று சொல்லி களம் சுத்தம் செய்ய வெள்ளையம்மாளோடு கிளம்பினார் பெரிசு.

சிட்டாகப் பறந்து சென்று சாக்கு, கூடை, முறங்களோடு அரசமரத்தடிக்கு வந்தாள் வடிவு. வெய்யில் காட்டக் காட்ட உலர்ந்த மண்தரை சற்றே இறுக ஆரம்பித்தது. கோரையும், பொக்கையுமாய் இருந்ததை பெரிசு சரிசெய்ய ஆரம்பித்தார். "வெள்ளையம்மா மொதல்ல மேற்கால பக்கமாய் கூட்ட ஆரம்பிச்சுடு” என்றதும் மேற்கால பக்கமிருந்து கூட்ட ஆரம்பித்து கீழ் பக்கமாய் முடித்தாள் வெள்ளையம்மா.

"களம் இன்னும் கொஞ்சம் காயணும். வெய்யில் படபட சரியாயிடும்” என்றார் பெரிசு. ஒரு வழியாக அனல் பறந்து அறுவடை முடிவுக்கு வந்தது. முகத்தில் வழிந்த வியர்வையைத் தலையில் கட்டியிருந்த துண்டால் துடைத்துக் கொண்டிருந்தனர். வானத்தை அண்ணாந்து பார்த்து "இன்னைக்கு பகல்ல மழை இருக்காது. மப்பு மந்தாரம் இல்லாம சுத்தமா இருக்குது” என்றான் காத்தான். அதற்கு வடமலை "ஏய் வாய வச்சுக்கிட்டு சும்மா இரு. நீ சொன்னாலே மழை வரும்” என்றான். "ஏம்பா நேரம் போய்க்கிட்டே இருக்கு ஆளாளுக்குப் போயி கொஞ்சம் பசி ஆறிட்டு வந்துவிட்டோம்னா ஆவ வேண்டிய வேலைய பாக்கலாம்ல” சற்று படபடப்போடு சொன்னான் பாண்டி. "அவன் சொல்றதும் சரிதான்” என்று சொல்லி அனைவரும் வயலிலிருந்து கிளம்பினார்கள்.

களத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த வெள்ளையம்மாளைப் பார்த்து அனைவரும் "வெள்ளையம்மா அறுவடை முடிஞ்சுது. இனி அடிச்சி களத்த வேண்டியதுதான். எதுக்கும் அறுப்பு வயல நீயும் ஒருமுறை பாரு. சுத்தமா அறுத்துருக்கு. இன்னும் சொல்லப் போனா நாலுவிரல் அளவுலதான் வைக்கோல் அளவிருக்கு” என்றதும் சந்தோஷம் தலை தெறிக்க வேகமாக ஓடினாள் வயலைப் பார்க்க, விதைச்ச அழகும், பயிரான அழகும், கதிர் வந்த அழகும், கதிர் முற்றி விளைஞ்ச அழகும், இப்போது அறுத்து அரிக்கடையாய் கிடந்த அழகையும் பார்க்கும்போது அசந்துபோய் நின்றாள்.

வெள்ளையம்மாவின் வயல் அறுவடையைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊரான அரசூர் அரசினர் விதைப் பண்ணையில் இருந்து வேளாண்மை அதிகாரி இராசப்பன் தன் உதவியாளரோடு அங்கு வந்து சேர்ந்தார். "என்ன வெள்ளையம்மா ஒரு வழியா அறுவடை முடிஞ்சிது. இனி அடிச்சி களத்தில் அளக்க வேண்டியதுதானே” என்றார். அதற்கு வெள்ளையம்மா "ஆமாங்கய்யா எல்லாம் நீங்கள் சொன்ன யோசனைதான். நீங்க மட்டும் அன்னைக்குச் சுத்தமான, தரமான விதை நெல் மூட்டைய குடுக்காம இருந்திருந்தா இன்னைக்கு எந்த ஒரு கலப்பு நெல்லும் இல்லாம சுத்தமாக என்னால விளைய வைக்க முடியாதுங்க” என்றாள்.

"அட, எல்லாம் உன்னோட உழைப்பும், திறமையும்தான்” என்றார். "சரி வெள்ளையம்மா வேலைய பாரு. எனக்கு பக்கத்து ஊருல ஒரு வேலையிருக்கு. முடிச்சிட்டு வரும்போது களத்துக்கு வாரேன். எத்தன மூட்டை காணுங்கிறதுதான் என்னோட ஆர்வம்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்.

ஒரு வழியாகச் சாப்பிட சென்ற ஆட்கள் அனைவரும் சாப்பாடு முடிந்து அரசமரத்தடி களத்தில் ஆஜரானார்கள். வெள்ளையம்மாளுக்கும் வடிவு சாப்பாடு கொண்டு வந்துவிட்டாள்.

"சூரியன் உச்சிய நெருங்குது. கீழ எறங்கிறதுக்குள்ள வேலைய முடிக்கணும்” பெரிசு எல்லோரையும் முடுக்கிவிட்டார். "ஏன்பா பாண்டி நீ ரெண்டு பொம்பள ஆள கூட்டிக்கிட்டுப் போய் கட்டு கட்டிவை. இங்கவாடா இசக்கி, நீயும் காத்தானும் களத்துல நின்னு கட்டுக்கட்டா கதிர அடியுங்க” என்றார் பெரிசு. அவர் சொல்லாமலே வடமலையும், கண்ணாயிரமும் ”நாங்க ரெண்டு பேரும் கட்டுக்கலக்குறோம்” என்றனர். ஒத்தாசைக்கு கூடமாட இடையில நின்னு தூக்குவதற்கு மாடசாமிய வச்சுக்கிறோம் என்றனர். விறுவிறுவென்று கட்டுகள் களத்திற்கு வந்துகொண்டிருந்தன. கட்டுகளை தேங்கவிடாமல் காத்தானும், இசக்கியும் அடித்துப் போட்டனர். "பெருசு பத்துக்கட்டு அடிச்சதும் முறத்தால அள்ளி விசிறி சுத்தம் பண்ணிக்கிட்டேயிரு” என்றான் காத்தான்.

சாப்பிட்டு முடித்த கையோடு சாக்குகளை கொண்டு வந்து சேர்த்தாள் வெள்ளையம்மா. வடிவும் சும்மா இருக்கவில்லை. அவளும் தன் பங்கிற்கு கட்டு கட்டும்போது இறையும் கதிர்களை பொறுக்கிப் போட்டு கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட பாதிக்குமேல் அடித்து முடிக்கப்பட்ட நிலையில் "பெரிசிடம் ரெண்டு மரக்கா வைத்துவிடுவோம். அப்பதான் அளந்துகட்ட சுலுவா இருக்கும்” என்று இசக்கி சொன்னான். அதுவும் நல்ல யோசனைதான் என்று சொல்லி ஒரு களம் தூற்றி முடித்து இரண்டாவது களம் நெல்லை வைத்து தூற்ற ஆரம்பித்தார் பெரிசு.

"வெள்ளையம்மா, நீ பட்ட கஷ்டமெல்லாம் நெல்லா கொட்டிக்கிடக்கு” என்று சொன்னான் காத்தான். இப்படி மாறிமாறி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இலேசான கருமேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வட்டமடித்துக் கொண்டு சூரியனை மறைத்துச் சென்று கொண்டிருந்தது. "மானம் பெரளுதுடா இசக்கி, வேலைய சுருக்கா முடிக்கணும். அடிச்ச நெல்ல அளந்து கட்டி வீடு கொண்டு போய் சேக்கணும். பேச்சைக் குறைச்சிட்டு ஆளாளுக்கு வேலைய பாருங்க” என எச்சரித்தார் பெரிசு. பெரிசு உஷார்படுத்தியதும் களத்தில் இருந்து வாய்வழிச் செய்தி வயலில் கட்டு கட்டுபவர்களுக்கும் கலக்குபவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு ஒட்டுமொத்த வேலையும் முடுக்கிவிடப்பட்டது.

"ஏண்டா காத்தான், ஒரு களம் நெல்ல சாக்குல அளந்துடுவோம்” என்றார் பெரிசு. "ஆமா... ஆமா அதுவும் சரிதான். ஏன் தாயி வெள்ளையம்மா சாக்கையெல்லாம் கொண்டா நெல்ல அளப்போம்” என்ற காத்தான் சொன்னதும் சாக்குகளைக் கொண்டு வந்து கொடுத்தாள். மரக்காலை வெள்ளையம்மாவிடம் கொடுத்து "முதல்ல தண்ணி பங்குக்கு கோயில் குத்தகை நெல்ல அளந்துபோடு. அப்புறமா எல்லாத்தையும் நான் அளந்துபோடுறேன்” என்றான். அதுபோலவே ஒரு மரக்கால் நெல்ல வெள்ளையம்மாள் அளந்து விட்ட பின்பு அளக்கும் வேலையை விறுவிறுப்பாக தொடங்கினான் காத்தான். கிட்டத்தட்ட கட்டு கட்டும் வேலை முடிந்து வயலில் இருந்து ஆட்கள் எல்லோரும் களத்துக்கு வந்துவிட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுழன்று கொண்டிருந்த கருமேகங்கள் ஒன்று திரண்டதைப் பார்த்ததும் அனைவருக்கும் அடிவயிற்றில் சொரசொரத்தது.

"ஈசானி மூலையில மப்பு கட்டி கருமேகம் திரளுது அப்படியும் மழைக்கு தப்பாது” பெரிசு எல்லோரையும் எச்சரித்தார். "ஏ வடமலை இரண்டாவது களத்த நாம அளப்போம்” என்று கண்ணாயிரமும் வேகமானான். முதல் களத்தை அளந்து முடித்து முப்பது மூட்டை கண்டிருக்கு என்று காத்தான் சொன்னதும் வெள்ளையம்மாளுக்குச் சந்தோஷம் களைகட்டியது. வடிவை அழைத்து "யம்மா ஆளுங்க எல்லாம் களைச்சி போற நேரம். செட்டியார் கடைக்குப் போயி எல்லாருக்கும் டீயும், சுண்டலும் அம்மா வாங்கி வர சொல்லுச்சுன்னு சொல்லி சீக்கிரம் வாங்கி வா” என்று அனுப்பி வைத்தாள். ஈசான்யம் கருத்ததின் விளைவாக இலேசான குளிர் காற்று வீசத் தொடங்கியது. ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குப்பை கூளங்கள் காற்றில் பறக்கத் தொடங்கின. மழை வந்துவிடுமோ என்று எல்லோரும் பயந்துபோய் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர். மாட்டு வண்டிய ஓட்டிவர சென்ற மாடசாமி விறுவிறுவென்று வண்டியை கொண்டு வந்து சேர்த்தான். கண்ணாயிரமும், வடமலையும் மளமளவென்று மூட்டைகளை வண்டியில் ஏற்றினார்கள். இலேசாக வீசிய குளிர்காற்று சற்று வேகத்தைக் கூட்டியது. காத்தானும், பாண்டியும் இரண்டாவது களத்தின் மூட்டைகளை வண்டியில் ஏற்றத் தொடங்கினார்கள். வெள்ளையம்மாளைப் பார்த்து "ரெண்டாவது களத்துல இருபது மூட்டை அளந்திருக்கு ஆக மொத்தம் அம்பது மூட்டை” என்று சொல்லியதும் வெள்ளையம்மாள் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஒட்டுமொத்த மூட்டைகளும் வண்டியில் ஏற்றப்பட்டன. "வெள்ளையம்மா, மழைக்கு முன்னாடி வீடு போயி சேருவோம். கூலியெல்லாம் வீடு வந்த பிறகு வாங்கிக்கிறோம்” பெரிசு சொன்னார். கூடை முறங்களை எல்லாம் வண்டியில் வைத்துவிட்டு கிளம்ப தயாராகும்போது டீ, சுண்டலோடு வந்து சேர்ந்தாள் வடிவு. அந்தச் சுண்டலையும் சுவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வெள்ளையம்மாளைப் பார்த்து பெரிசு சொன்னார். "என்னோட நாற்பது வருஷ விவசாய வாழ்க்கையில அரைக்காணிக்கு அம்பது மூட்டை நெல்லு வெளஞ்சி நான் பார்த்ததில்லை. உன்னோட உழைப்புக்கும், நீ பட்ட கஷ்டத்துக்கும் அந்த ஆண்டவன் கொடுத்தது” என்று சொன்னார். சற்று நேரத்துக்கெல்லாம் விவசாய அதிகாரியும் அவரது உதவியாளரும் வந்தனர். அவர்களிடம் பெரிசு சொன்னார். "ஐயா அரைக்காணில அம்பது மூட்டை நெல் விளைஞ்சிருக்கு” என்றார். அவரிடம் அதிகாரி ஆச்சரியத்துடன் பேசினார். நம்ம ஒண்றியத்துல இருபது ஊர்களிலும் இதுபோன்ற விளைச்சல யாருமே பார்த்ததில்லை. இதுக்காக வெள்ளையம்மாளுக்குப் பாராட்டும் பரிசும் மேல் அதிகாரிக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்வதாய் சொல்லி வெள்ளையம்மாளுக்கு பாராட்டு தெரிவித்து கிளம்பினார்.

Monday, July 27, 2009

என்னது! உனக்கும் வாயு தொல்லையா?

இரண்டு வகையில் மனிதர்களுக்கு உடலில் வாயு அதிகரிக்கக்கூடும். அதிக நடை, சைக்கிள் சவாரி, அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தல் போன்ற காரணங்களால் அதிகரிக்கும் வாயுவானது, மற்ற தோஷங்களின் சேர்க்கை இல்லாமல் தானாகவே கூடுகிறது. அதுபோன்ற நிலைகளில் தசைப் பிடிப்பு, தசை இறுக்கம், உட்கார்ந்தால் நிம்மதி போன்ற அறிகுறிகளைக் காண்பிக்கும். ஆனால் சிலருக்கு ஒரே இடத்தில் அதுவும் முக்கியமாகத் தரையில் அமர்ந்திருந்து எழ முயலும்போது அதிகரிக்கும் வாயுவானது, "ஆவரண வாயு' என்று அழைக்கப்படுகிறது. அதாவது வாயுவின் சுதந்திரமான நடைக்கு உடலிலுள்ள தசைகளாலும், தசைநார்களாலும் ஏற்படும் தடை, அதன் சீற்றத்திற்குக் காரணமாகிறது. உங்களுக்கு ஆவரண வாயுவினால் வலி ஏற்படுகிறது.

இதில் முதலாவதாகக் கூறிய தனி வாயுவின் சீற்றத்தில் மூலிகைத் தைலங்களைத் தடவிவிடுவதால் குணம் கிடைக்கும். ஆனால் இரண்டாவதாகக் கூறிய ஆவரண வாயுவில் மூலிகைத் தைலத்தைத் தடவினால் வலி மேலும் கூடிவிடும். வாயுவிற்கு ஏற்பட்டுள்ள தடையை முதலில் நீக்க வேண்டும். அதற்கு குதிரை சாணகம், யானையின் சாணகம் போன்றவற்றில் ஒன்றை எடுத்து பசுவின் சிறுநீர் கலந்து உருண்டை பிடித்து நிழலில் காய வைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த சாணகத்தை உதிர்த்து, துணியில் மூட்டைகட்டி, இரும்புச் சட்டியில் சூடாக்கி சுமார் 10 - 12 நாட்கள் இடுப்பில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். காலையில் மலம், சிறுநீர் ஆகியவற்றைக் கழித்த பிறகு, வெறும் வயிற்றில் அதாவது உணவிற்கு முன்பாக இந்த ஒத்தடத்தைக் கொடுக்க வேண்டும். ஒத்தடத்தின் மூலம் இடுப்பில் கிடைக்கும் வெதுவெதுப்பான சூட்டைத் தக்க வைத்துக் கொள்ள, ஒரு துணியால் இடுப்பைக் கட்டிக் கொள்ள வேண்டும். காலையில் குளிக்கக் கூடாது. மாலையில் குளிக்கலாம்.

இப்படி 10 - 12 நாட்கள் கொடுத்த ஒத்தடத்தின் விளைவாக, வாயுவின் சுதந்திரமான நடைக்கு ஏற்பட்ட தடை நீங்கிவிடும். ஆனால் அது இடுப்பில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறையாது. வாயு விட்டுச் சென்ற தாக்கத்தைக் குணப்படுத்த, மூலிகைத் தைலங்களை இடுப்பில் ஊறவிடுதல், தேய்த்து விடுதல் ஆகியவற்றைச் செய்ய, இடுப்புப் பகுதியிலுள்ள எலும்புகளும் தசை நார்களும் நரம்புகளும் வலுப்படும்.

குடலில் வாயுவின் சஞ்சாரமும், மலச்சிக்கலும் தங்களுக்கு இருந்தால், மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பலன்களைத் தராது. அதனால் குடல்வாயுவை அதிகரிக்கச் செய்யும் பருப்புகள், கடலை வகையறாக்கள், குளிர்ச்சியான உணவு வகைகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். குடல் பகுதி சுத்தமாக இருக்கவும், இடுப்புவலிக்குச் சிறந்த நிவாரணியாகவும் உள்ள கந்தர்வஹஸ்தாதி விளக்கெண்ணெய் மருந்தை 10-15 மி.லி. காலை மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிட, குடல் வாயு மட்டுப்பட்டு மலச்சிக்கல் ஏதும் இல்லாமல் இருப்பதால் முன் குறிப்பிட்ட ஒத்தடம் மற்றும் எண்ணெய்த் தேய்ப்பு முறைகள் உங்களுக்கு விரைவில் நல்ல பலனைத் தரும்.

செயல்முறை தவறுகளாகிய குளிர்ந்த தரையில் மல்லாக்கப்படுத்தல், ஒரே நிலையில் நெடுநேரம் அமர்ந்திருத்தல், குனிந்த நிலையில் அதிக வேலை, குளிர்ந்த நீரைக் குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

Sunday, July 26, 2009

நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க வேண்டுமானால்...

மனம், உடல் சோர்வில் இருந்து விடுபட மனிதனுக்கு தூக்கம் என்ற ஒன்று அவசியமாகிறது. நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க வேண்டுமானால் இரவில், நமக்கு நல்ல தூக்கம் தேவை.

அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் பொதுவானதாக இருந்தாலும், மனிதன் மட்டும்தான் இயற்கையிலிருந்து மாறுபட்டு தனது தேவைக்கேற்ப தூங்கும் நேரத்தை மாற்றிக் கொண்டு பின்னாளில் நோயுற்று அவதிப்படுகிறான்.

இரவில் நன்றாகத் தூங்கினால்தான் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்ற நிலையில், இன்றைய காலகட்டத்தில் 30 சத மக்கள் தூக்கம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர் என்கிறது மருத்துவக் குழுவினர் நடத்திய ஓர் ஆய்வு. நோயாளிகளில் 50 சதவீதப் பேருக்கு தூக்கமின்மை நோய் உள்ளது என்றும் மருத்துவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சரியான தூக்கமின்மைக்கு சுற்றுப்புறச் சூழல், பதற்ற நிலை, கவலை, நடுக்கம் போன்ற பல பொதுவான காரணங்கள் உள்ளன. ரத்த அழுத்தம், இருமல், மனச் சோர்வு முதலியவற்றுக்காகப் பயன்படுத்தும் மருந்துகளால்கூட தூக்கமின்மை ஏற்படலாம்.

உலக மக்களையே மிரட்டிய ஹிட்லர் போர்க்காலத்தில் தூக்கம் வராமல் தடுக்க ஒருவகை மருந்தை கண்களில் ஊற்றி வந்ததாகவும், பின்னாளில் அந்த மருந்தால் அவருக்கு பல நோய்கள் ஏற்பட்டதாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரின் உறக்கம் கண் அசைவுள்ள தூக்கம், கண் அசைவற்ற தூக்கம் என்ற இரண்டு வகையான தூங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒருவர் தூங்கத் தொடங்கியவுடன் முதல் 90 முதல் 100 நிமிஷங்களுக்கு கண் அசைவு தூக்கம் ஏற்படுகிறது. பின்னர், கண் அசைவற்ற தூக்கம் பல நிலைகளில் ஏற்படுகிறது.

மொத்த தூக்கத்தில் கண் அசைவு தூக்கம் 20 சதமும், கண் அசைவற்ற தூக்கம் 80 சதமும் நிகழ்கின்றன. மூளைத் தண்டின் பான்ஸ் பகுதி சல்லடை நரம்பு இழைகள் தூக்கத்தைச் சீர்செய்வதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக, தூங்கும் அறையில் அதிக வெளிச்சமோ, அதிக சப்தமோ வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகைபிடித்தல் மற்றும் இதர நிக்கோடின் பொருள்களை படுக்கைக்குப் போகும் முன்பு அல்லது இரவின் நடுவே, தூக்கத்திலிருந்து விழித்திடும்போது பயன்படுத்தக் கூடாது.

இரவில் அதிகமான உணவை உள்கொள்வதால் தூக்கம் பாதிக்கப்படலாம். தூங்கச் செல்வதற்கு முன்பு காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுக்காக எந்நேரமும் தூங்கி வழிங்சி சோம்பேறினு பேர் எடுத்துராதீங்க! ஹி ஹி ஹி

என் விடுகதைக்கு விடையை சொன்னா....

1. காலில்லாத பந்தலைக் காணக் காண விநோதம். அது என்ன?

2. கரையும் உப்பு அல்ல; தண்ணீரில் குளிப்பான் மனிதனும் அல்ல. அது என்ன?

3. கண் உண்டு பார்க்காது; கால் உண்டு நடக்காது. அது என்ன?

4. இரைச்சலோடு செல்லும் விமானம் அல்ல; இடியோசை தரும் வானமும் அல்ல. அது என்ன?

5. இதயம் போல் துடிப்பிருக்கும்; இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?

6. இனிப்புக்கு எதிரி; இதழுக்கு உவமை. அது என்ன?

7. அறைகள் அறநூறு; அத்தனையும் ஓர் அளவு. அது என்ன?

8. அகன்ற வாய் உடையவன்; திறந்த வாய் மூடாதவன். அது என்ன?

9. அடித்தால் விலகாது; அணைத்தால் நிற்காது. அது என்ன?

10. அந்தரத்திலே பறக்கும் பறவையும் அல்ல; அழகான வாலுண்டு குரங்கும் அல்ல. அது என்ன?

11. அம்பலத்தில் ஆடும் அழகு தேவதைக்கு அங்கம் முழுவதும் தங்கக் கண்ணாடி. அது என்ன?

12. அன்றாடம் வீதியில் மலரும்; அனைவரையும் கவரும். அது என்ன?

13. காய்க்கும் பூக்கும் கலகலக்கும்; ஆனால், காக்காய் உட்கார இடமில்லை. அது என்ன?

14. சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது. அது என்ன?

15. செங்கல் கட்டடம்; அதற்குள் பொன் கட்டடம்; அதற்குள்ளே வெள்ளிக் கட்டடம்; அதற்குள் திருக்குளம். அது என்ன?

சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ...

உலகில் மக்கள் சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ ஏற்ற நாடு எது? இதைக் கண்டுபிடிக்க சந்தோஷமான பூமி என ஒரு புதிய பட்டியலைத் தயாரித்துள்ளனர். அதன்படி 143 நாடுகளைப் பட்டியலிட்டு அதில் மக்கள் சந்தோஷமாக வாழத் தகுந்த நாடு என சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளனர்.

1. கோஸ்டா ரிகா

இங்குதான் மக்கள் அதிகபட்ச சந்தோஷம், நிம்மதியான வாழ்க்கை மற்றும் அதிக ஆயுளுடன் வசிப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள இதன் தலைநகர் சான் ஜோஸ்.

2. டொமினிக்கன் குடியரசு

உலகில் மக்கள் அதிக சந்தோஷத்துடன் வாழும் இரண்டாவது நாடு டொமினிக்கன் குடியரசு. கரீபிய தீவுக்கூட்டங்களைச் சேர்ந்தது. தலைநகர் சாண்டோ டொமினிகா.

3.ஜமைக்கா

இன்னமும் பிரிட்டிஷ் அரசியின் தலமையில் இயங்கும் நாடுகளில் ஒன்று ஜமைக்கா. உலகில் அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்து ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடு. மக்கள் மிகுந்த சந்தோஷமாகவும், பிரச்சினைகள் பெரிதாக இல்லாமலும் வாழ்கிறார்களாம். தலைநகர் கிங்ஸ்டன். பொழுதுபோக்கு, மீன்பிடிப்பது, குடிப்பது, கிரிக்கெட் பார்ப்பது!

4.கவுதிமாலா

இது ஒரு மத்திய அமெரிக்க நாடு. தலைநகர் கவுதிமாலா சிட்டியைத் தவிர, பிற பகுதிகளில் பெரிதாக போக்குவரத்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் மக்கள் நீண்ட ஆயுள் மற்றும் நிம்மதியுடன் வாழ்கிறார்களாம்.

5.வியட்நாம்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 13 வது நாடு. ஆசியாவின் முக்கிய நாடுகளுள் ஒன்று. பெயரளவுக்கு கம்யூனிஸ நாடாக இருந்தாலும், இன்றைக்கு ஆசிய அளவில் திறந்தவெளிச் சந்தைக் கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு இதுதான்.

விவசாயம்தான் மெயின்... அதனால் நல்ல சாப்பாடு, தரமான உணவுப்பொருட்கள், நிமதியான வாழ்க்கை என மக்கள் நிதானத்துடன் இருக்கிறாகள்.

6. கொலம்பியா

லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்று. கொலம்பஸ் கண்டுபிடித்த நாடுகளில் ஒன்றான இங்கு சர்வதேச சந்தைப் பொருளாதாரம் எவ்வளவுதான் சுரண்டினாலும், நிம்மதியும் சந்தோஷமும் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லையாம். இதன் தலைநகர் பகோடா.

7.க்யூபா

உண்மையிலேயே உலகை ஆச்சரியப்பட வைத்துள்ள நாடு இது. எத்தனையோ சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், முன்பு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, இப்போது அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தலைமையில் வெற்றிநடைபோடும் நாடு இது.

இந்நாட்டு மக்களின் சராசரி வயது 78.3 ஆண்டுகள். உலகிலேயே அருமையான மருத்துவ வசதிகள் நிறைந்த நாடு. தலைநகர் ஹவானா.

8. எல் சால்வடார்

மத்திய அமெரிக்காவில் உள்ள இந்த நாடு, அப்பகுதியின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளுள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நிச்சயம் இந்நாட்டு மக்கள் நிம்மதியாகத்தான் இருப்பார்கள். காரணம் உலகிலேயே அதிக வரிகள் இல்லாத ஒரே நாடு எல் சால்வடார்தான். தலை நகர் சான் சால்வடார்.

9. பிரேஸில்

ஜி 20 அமைப்பின் முக்கிய அங்கம். உலகின் பெரிய நாடுகளுள் ஒன்று. எல்லா வளங்களும் நிறைந்த மிகச் சிறந்த நாடான பிரேஸில், உலக அளவில் 10வது சக்தி வாய்ந்த பொருளாதாரமாகத் திகழ்கிறது. தலைநகர்: ரியோடி ஜெனிரோ

10. ஹோண்டுராஸ்

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுதான் இதுவும். நாளுக்கு நாள் இதன் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பேராசை கொள்ளாத, குற்றங்கள் செய்யாத மக்கள் என்பதால் இந்த டாப் டென்னில் அமெரிக்காவுக்குக் கூட கிடைக்காத இடம் ஹோண்டுராஜுக்குக் கிடைத்துள்ளது. தலைநகர்: டெகுசிகல்பா

இந்த முதல் பத்து சந்தோஷமான, நிம்மதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவோ உலக வல்லரசுகள் எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவோ இல்லை!

ஊர் சுற்றலாம் வாங்க - மேட்டூர் அணை

மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது.



1801 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கிழக்கிந்திய சபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது; அப்பொழுது மைசூர் சமஸ்தானம் ஆட்சேபணைகள் எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் என்ற பொறியாளரைத் திரும்பவும் அணை கட்டுவதற்கு சம்மதம் பெற மைசூருக்கு ஆங்கிலஅரசு அனுப்பிவைத்தது. மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

1923ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் எடுத்து விளக்கினர். அவர் மைசூர் சமஸ்தானத்தாரை அணுகி திவான்பகதூர் விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். அம் முயற்சிக்குக் காரணமும் உண்டு சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும் ஆட்சேபணைத் தெரிவிக்கவே, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் ரூ.30,00,000/- நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன் படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது ) வருடாவருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும் , மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.

அணை குறித்த திட்ட ஆய்வு பணி 1905ல் துவங்கி 1910 வரை நடந்தது. இறுதியில் மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்து, 1924 மார்ச் 31ம் தேதி இந்திய அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, டிச.11ம் தேதி அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, 1925 ஜூலை 20ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு என்ஜினியர் எல்லீஸ், நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையர், முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்க்ஸ் தலைமையில் 24 என்ஜினியர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.

மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 1934ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது. அணையைக் கட்டி முடிக்க அப்போது ஆன செலவு ரூ.4.80 கோடியாகும். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஜான் பெடரிக் ஸ்டான்லி, 1934ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என வைத்தனர்.

Saturday, July 25, 2009

ஊர் சுற்றலாம் வாங்க - கோடிக்கரை

தமிழ்நாட்டில் உள்ள இந்த சரணாலயம் வன விலங்குகள் சரணாலயம், பறவைகள் சரணாலயம், இரண்டுமே ஒன்றிணைந்ததாக உள்ளது. இதன் அருகே அமைந்துள்ள விமான நிலையமான திருச்சி விமான நிலையம் இங்கிருந்து 232 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோடிக்கரை ரயில் நிலையத்திலிருந்து மேற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கே 17 சதுர கிலோ மீட்டர் பரப்பு தான் வன விலங்குகள் சரணாலயப் பகுதியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கு மேற்கே 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராஜாமடம் வரை சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இந்தக் காடுகள் இரண்டு இடங்களில் உப்பங்கழிகளாக கடல் நீர் புகுந்து உப்பு ஏரியாக 30 கிலோ மீட்டர் நீளம் 5 கிலோ மீட்டர் அகலத்துக்கு நிற்கின்றது.

இந்த உப்பு ஏரிகளில் முத்துப்பேட்டை, திருத்துறை பூண்டி மற்றும் மேல்மருதூர் பகுதியிலிருந்து மூன்று நதிகள் சங்கமம் ஆகின்றன. ஆகவே இந்த உப்பேரியில் நிற்கும் தண்ணீர் கடல் நீர் அளவு உப்பாக இல்லை. இந்த ஏரி அதிக ஆழம் இல்லை. இந்த ஏரி நீரில் உள்ள மீன்கள் ஏராளம். இதோடு கடல் நீர் உயர் அலையின் போது நிலப்பகுதியில் ஏறி வரும். பிறகு வடியும். இப்படி வடியும் போது பள்ளப் பகுதியில் ஏறி வந்த நீர் கடலுக்குத் திரும்பிப் போகாது. பள்ளங்களில் அப்படியே தேங்கிவிடும். இப்படித் தேங்கும் நீரில் சிக்கிக் கொண்ட மீன்கள் கடலுக்குத் திரும்பிப் போக இயலாது தவித்து நிற்கும். இப்படித் தவித்து நிற்கும் மீன்கள் பறவைகளுக்கு நல்ல விருந்தாகும். ஆகவே தங்களுக்கு எளிதாக உணவு கிடைக்கும் இந்த இடத்தை நீர்ப்பறவைகள் மிகுதியாக விரும்பி இங்கே வந்து குவிகின்றன. மரங்களில் கூடுகள் அமைத்துக் கொண்டு வாழுகின்றன.

ராஜஹம்சம் (ஹம்சம் - அன்னம்) மரங்களில் கூடுகட்டி வாழக் கூடியது அல்ல. அது பகல் இரவு எந்த நேரமும் தண்ணீரில் இருக்கக் கூடியது. தண்ணீரிலேயே தூங்கவும் கூடியது. இதன் பிரதான ஆகாரம் மீன். இதற்கு தங்குவதற்கான நீர் வசதியும் மீனும் இங்கே கிடைப்பதால் அவையும் இங்கே தேடி வருகின்றன. குஜராத்தில் கட்ச் பகுதியிலிருந்து அக்டோபரில் ராஜஹம்சங்கள் இங்கு வரத் தொடங்குகின்றன. நான்கு மாதங்கள் இங்கு வசிக்கின்றன. பிறகு ஜனவரி பிப்ரவரியில் திரும்பிப் போய் விடுகின்றன. நெடுந்தூரம் பறந்து செல்லும் சக்தியை இழந்த நிலையில் உள்ள அன்னங்கள் மட்டும் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன. வயோதிக நிலையில் இவை இருப்பதால் இங்கு அவை முட்டையிடுவதும் இல்லை, குஞ்சு பொரிப்பதும் இல்லை. வருடம் சுமார் 40 ஆயிரம் ராஜஹம்சங்கள் இங்கே வந்து போகின்றன.

நீர் வாத்துக்களும் இந்த இடத்தை விரும்பி வருகின்றன. வருடம் சுமார் இரண்டாயிரம் நீர் வாத்துக்கள் பருவ காலத்தில் இங்கு வந்து போகின்றன. இங்கே உள்ள வன விலங்குச் சரணாலயத்தில் பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன. பருவகாலம் ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை.

பி.கு: பொன்னியின் செல்வனில் திரு.கல்கி அவர்கள் கோடிக்கரையின் கடற்கரை பகுதிகளை சுவைபட விவரித்திருப்பார்.

Wednesday, July 22, 2009

அதிமுக-வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு பொறுப்பான எதிர்க்கட்சியின் கடமையா?

அடுத்த மாதம் தேதி நடைபெற இருக்கும் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. தேர்தல் புறக்கணிப்புக்கு, ஆளும் கட்சியின் அராஜகம், வாக்குப் பதிவில் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம், வாக்காளர்கள் பணத்தால் விலைபேசப்படுவது என்று பல காரணங்கள் அதிமுக செயற்குழுவால் கூறப்பட்டுள்ளது.

மக்களாட்சியில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் கடமையே, இதுபோன்ற ஜனநாயக விரோதச் செயல்களைத் தட்டிக் கேட்பதும் தடுப்பதும்தானே? ஆளும் கட்சியின் தவறுகளை மக்கள்மன்றத்தில் எடுத்துக்கூறி, அவர்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டி, தேர்தல் தில்லுமுல்லுகள் நடைபெறுவதைத் தனது தொண்டர் பலத்தால் தடுத்து, ஜனநாயகத்தைப் பேணிக் காக்க வேண்டிய கடமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. தவறு நடக்கிறது, நடக்கப் போகிறது என்று காரணம் காட்டி தேர்தலைப் புறக்கணிப்பது என்பது புறமுதுகு காட்டி ஓடுவதற்கு ஒப்பான விஷயமல்லவா?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக கூட்டணி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. மொத்த வாக்குகளை எடுத்துக்கொண்டால் ஆளும் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்குமான வாக்கு வித்தியாசம் 2009 மக்களவைத் தேர்தலில் 16 லட்சம் மட்டுமே. அதிமுக கூட்டணியில் தொண்டர்கள் பல இடங்களில் விலைபோகாமல் இருந்திருந்தால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக இருந்திருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளரே பொதுக்குழுவில் கூறியிருப்பதையும் இங்கே நினைவுகூராமல் இருக்க முடியவில்லை.

இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மதிமுகவையும் விடுதலைச் சிறுத்தைகளையும் தனது தோழமைக் கட்சிகளாகக் கொண்டிருந்த அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற இடங்கள். இளையான்குடி தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் இப்போது அதிமுகவில் இணைந்துவிட்டிருக்கிறார். காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்த ஸ்ரீவைகுண்டம் தவிர, ஏனைய நான்கு தொகுதிகளிலும் அதிமுக அணி வெற்றி பெற எல்லா சாத்தியங்களும் இருந்தும் தேர்தலைப் புறக்கணிப்பது என்று அதிமுக முடிவெடுத்திருப்பதும், அதை அந்த அணியிலுள்ள ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொண்டிருப்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் மக்களின் அதிருப்தி உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது. அரிசி விலை மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப் பொருள்கள் எல்லாம் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரம்பை மீறி கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கும் நிலைமை.

இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கி, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து மக்கள் மன்றத்தில் ஆதரவு கோர வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, தேர்தல் தில்லுமுல்லுகள், வாக்குகள் விலை பேசப்படுதல் போன்றவற்றை மக்கள் ஆதரவுடனும், தொண்டர்களின் ஆதரவுடனும் தடுத்து நிறுத்தும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய எதிர்க்கட்சியான அதிமுக, போட்டிக்கு முன்பே பந்தயத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, அந்தக் கட்சி செயலிழந்துவிட்டதைக் காட்டுகிறதா இல்லை கட்சித் தலைமையின் அசிரத்தையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.

தேர்தலில் போட்டியிடாமல் போனால் தொண்டர்களும் சோர்வடைந்து விடுவார்கள், மக்களும் மறந்து விடுவார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு பொறுப்பான எதிர்க்கட்சிக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல! அதிமுக தலைமை தனது முடிவை மறுபரிசீலனை செய்வது அந்தக் கட்சிக்கும் நல்லது, ஜனநாயகத்துக்கும் நல்லது.

வன்முறை, அராஜகம் போன்றவற்றைக் காரணம் காட்டி சென்னை மாநகராட்சித் தேர்தலை அதிமுக புறக்கணித்ததால் யாருக்கு என்ன லாபம் ஏற்பட்டது? தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் இதுபோன்ற அமைப்புகளில் என்ன நடக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வளர்ச்சிக்கு சென்னை மாநகராட்சித் தேர்தல் உதவியது என்றால், அந்தக் கட்சியை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்த இப்போதைய தேர்தல் புறக்கணிப்பு உதவும் என்பதில் என்ன சந்தேகம்? தேமுதிகவை அரவணைத்து வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமைப்பது அல்லவா அதிமுகவின் ராஜதந்திரமாக இருந்திருக்க வேண்டும்?

தேர்தலை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாவிட்டால், மதிமுகவுக்கு அவர்கள் வென்ற தொண்டமுத்தூர் மற்றும் கம்பம் தொகுதிகளில் போட்டியிட்டுத் தங்கள் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பையாவது அதிமுக தந்திருக்க வேண்டும். பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று தனது மக்களவைத் தேர்தல் தோல்வியை ஈடுகட்ட பாமக தயாராக இருந்திருக்கும். இளையான்குடியில் கண்ணப்பன் மீண்டும் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. இதையெல்லாம் சிந்திக்காமல் புறக்கணிக்கிறோம் என்று பின்வாங்கினால், மக்கள் அதிமுகவைப் புறக்கணித்துவிட மாட்டார்களா?

அப்பாவிற்கு ஓர் கடிதம்!

தந்தை என்பவர் ஒரு நபர் அல்ல. அந்த வார்த்தை பலவற்றை குறிக்கும் ஒரு குறியீடு. அன்பு, பாசம், ஆதிக்கம், கண்டிப்பு, பாதுகாப்பு, அறிவுரை, தண்டனை என்ற முரண்பட்ட பலவற்றின் ஒருங்கிணைந்த குறியீடாகவும், இன்னமும் விரிவு படுத்தினால், அறிவு, சிந்தனை, மேலும் விரித்துக் கூறினால் சமூகம், பண்பாடு, மதம், நாடு என்று இதன் அர்த்த தளங்களை நாம் விரித்துக் கொண்டே செல்லலாம். இன்னும் கூறவேண்டுமென்றால் படைப்பவர். இந்து புராணிக மரபில் பிரம்மா, அதாவது படப்போன்.

இப்படி தத்துவ, இறையியல், சமூக, பண்பாட்டுத் தளங்களில் அதன் அர்த்த தளங்கள் விரிவு படுத்தப்படலாம். கண்டிப்பான தந்தையிடமும், தண்டிக்கும் தந்தையிடமும் வளர்பவர்கள் நட்பு ரீதியான மற்றொரு நபரை தங்களின் பதிலித் தந்தையாக தேடுவர், தந்தையை எதிர்த்து சித்தம் போக்கு சிவம் போக்கு என்று வளரும் நபர்கள், ஒரு குறிப்பிட்ட வயதில் குற்ற உணர்வினால் வேறு ஒரு கண்டிப்பான நபரை, உதாரணமாக ஒரு அரசியல் தலைவரையோ, மதத் தலைவரையோ, அல்லது ஏதாவது சாமியாரையோ, இழந்த கண்டிப்பை தன் மனதிற்குள் மீண்டும் நுழைத்துக் கொள்ள, தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள, தேடிச்செல்வார்கள். இப்போது தந்தை என்ற சொல் "ஒழுங்கு" என்ற ஒரு புதிய அர்த்த தளத்தை எட்டுகிறது.

மேற்கூறிய வகைப்பாட்டில் கண்டிப்பான தனது தந்தையை புகழ்வது போல் பழித்தும், பழிப்பது போல் புகழ்ந்தும் ஜெர்மானிய இலக்கிய மேதை பிரான்ஸ் காஃப்கா தன் தந்தைக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன் சில பகுதிகளை தமிழில் படியுங்கள்.

அன்புள்ள அப்பா,

நீங்கள் சமீபத்தில் கேட்டிருந்தீர்கள், நான் ஏன் உங்களைக் கண்டு பயப்படுபவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று. எப்போதும் போலவே என்னால் இதற்கான விடையை யோசிக்கமுடியவில்லை. ஏனெனில் உங்களிடம் உள்ள பயமே கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் நான் பேசும்போது தோராயமாக நினைவில் வைத்திருந்த அனைத்தை விடவும், இந்த பயத்திற்கான காரணங்களின் அடிப்படைகளை விளக்கும்போது விவரங்களின் ஆழங்களுக்கு செல்ல நேரிடலாம். இப்போழுது நான் உங்களுக்கு எழுத்தில் பதில் அளித்தாலும் இதுவும் ஒரு நிறைவை அடையாது போகும். ஏனெனில் எழுதும்போது கூட பயமும் அதன் விளைவுகளும் உங்களுடனான உறவை தடுக்கும். மேலும் இந்தப் பிரச்சனையின் பரிமாணம் என்னுடைய ஞாபகம், தர்க்க எல்லைகளையும் கடந்ததாய் உள்ளது.

குறைந்தது என்னிடம் நீங்கள் என் முன்னிலையிலும் பாகுபாடின்றி எல்லோர் முன்னிலையிலும் பேசியதை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு விஷயங்கள் அனைத்தும் சுலபமாக உள்ளது. நீங்கள் எதுபோன்று பேசுவீர்கள் என்றால்..

அது இப்படித்தான் இருக்கும்: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடுமையாக உழைத்தீர்கள், குழந்தைகளுக்காக தியாகங்கள் பல செய்துள்ளீர்கள், அனைவருக்கும் மேலாக எனக்காக அதிகம் தியாகம் செய்துள்ளீர்கள் அதன் விளைவாக நான் உயரிய, அழகான வாழ்வை வாழ்ந்தேன், நான் அனைத்தையும் கற்றுக்கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றேன், பொருளாதாரக் கவலைகள் இன்றி சுகமாக வாழ்ந்தேன், அதாவது கவலைகள் என்றால் எந்த ஒரு கவலையுமின்றி... இதற்காக நீங்கள் எந்த விதமான நன்றியையும் எதிர்பார்க்கவில்லை, "குழந்தைகள் நன்றி" எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்துள்ளீர்கள், ஆனால் ஒரு சிறிய பணிவிரக்கம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், அதாவது ஒரு விதமான கருணையை எதிர்பார்க்கிறீர்கள்.

மாறாக நான் உங்களிடமிருந்து மறைந்தே இருந்திருக்கிறேன், என்னுடைய அறைக்குள், என்னுடைய புத்த்கங்களுக்குள், பைத்தியக்கார நண்பர்களுக்குள் அல்லது கிறுக்குத் தனமான கருத்துகளுக்குள். நான் உங்களிடம் வெளிப்படையாக பேசியதில்லை, நீங்கள் வழிபாட்டுத் தலத்தில் இருந்த போது நான் உங்களை வந்து பார்க்கவில்லை அல்லது எந்த ஒரு குடும்ப உணர்வையும் கொண்டிருக்கவில்லை; நான் உங்கள் தொழில் நலத்திலோ அல்லது உங்களது பிற நலத்திலோ அக்கறை காட்டவில்லை. தொழிற்சாலைக்கு உங்களை சுமந்து சென்று பிறகு நான் பாட்டுக்கு சென்று விட்டேன். ஓட்லா பிடிவாதம் பிடித்தபோது அவளை ஊக்குவித்தேன்.

உங்களுக்காக என் விரலைக் கூட நான் தூக்கியதில்லை (ஒரு தியேட்டர் டிக்கெட் கூட வாங்கித் தரவில்லை), ஆனால் நான் என் நண்பர்களுக்காக அனைத்தையும் செய்தேன். என்னைப் பற்றிய உங்கள் தீர்ப்பை தொகுத்து நீங்கள் கூறினால், அதாவது நீங்கள் என்னைப்பற்றி ஒட்டுமொத்தமாக முறை கேடானவன் என்றோ, தீமையானவன் (அதாவது எனது சமீபத்திய திருமணத் திட்டம் நீங்கலாக) என்றோ கூறமாட்டீர்கள், ஆனால் அலட்சியம், அன்னியமாக இருத்தல், நன்றிகெட்டத் தனம் என்று நீங்கள் கூறலாம். மேலும் என்னவேண்டும், இவ்வாறு நீங்கள் என்னைப்பற்றி கூறும் விதம் நான்தான் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமான காரணம் என்பது போல் இருக்கும், ஏதோ ஒரு சக்கரத்தைத் தொட்டு திருப்புவது போல் என்னால் அனைத்தையும் வித்தியாசமாக செய்திருக்க முடியும் என்றும், எனக்கு ஒன்று நன்மையாக முடிந்திருந்தாலே தவிர, உங்களைக் கொஞ்சம் கூட குற்றம் கூற முடியாது., இவ்வாறுதான் நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

இப்படித்தான் நீங்கள் வழக்கமாக இதைக் கூறுவீர்கள். நமக்குள் இருக்கும் இடைவெளியைப் பொறுத்தவரை உங்களது இந்த கூற்றுகளை நான் ஏற்கவேண்டுமெனில் நீங்கள் முழுதும் குற்றமற்றவர் என்று நான் முழுதும் நம்பவேண்டும். ஆனால் நானும் உங்களைப்போலவே முழுதும் குற்றமற்றவன்தான். இதனை நான் உங்களை ஒப்புக் கொள்ள வைக்கவேண்டுமெனில்... நான் நினைக்கிறேன்... ஒரு புது வாழ்வு பிறக்கும் என்ற நம்பிக்கையில்லை- நாம் இருவருமே அதற்கான வயதை கடந்து விட்டவர்கள்-ஆனால் ஒரு வகையான அமைதியான உறவு சாத்தியம். முற்றிலும் தவிர்த்தல் அல்ல. ஆனாலும் உங்களது நிறுத்த முடியாத வசைகளை குறைக்கலாம்...

எனக்கு சரியாக நினைவில் இருக்கும் ஒரு சம்பவம், உங்களுக்கும் கூட அது நினைவிருக்கலாம். ஒரு நாள் இரவு நான் தாகம் எடுத்து தண்ணீருக்காக தேம்பி அழுதேன், நான் தாகமாக இருந்தேன் என்பதால் மட்டுமல்ல கொஞ்சம் என்னை வேடிக்கைக்காகவும், கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தவும் கூட அந்த அழுகை வந்திருக்கலாம். பல விதமாக நீங்கள் என்னை மிரட்டிய பிறகு, பயனில்லாமல் போகவே என்னை படுக்கையிலிருந்து தூக்கிச் சென்று பலகணியில் கொண்டு தனியாக நிறுத்தினீர்கள். அது என்று நான் கூறப்போவதில்லை- அன்றைய இரவில் அமைதியைப்பெற இதைத் தவிர வேறு வழியில்லை என்பது என்பதும் உண்மையே. நான் இதனை கூறுகிறேன் என்றால் குழந்தை வளர்ப்பில் உங்களது முறை அதுவாகவே இருந்தது. அதன் பிறகு நான் கீழ் படிந்து நடக்கத் தொடங்கினேன் என்பது உண்மைதான். ஆனால் எனக்கு உள் மனதில் காயம் ஏற்பட்டதும் உண்மை. ஒன்றுமே இல்லாத ஒரு செயலுக்கு வெளியில் கொண்டு தனியாக நிறுத்தி வைக்கும் அசாதாரண பயங்கரம் என்பதே எனக்கு விஷயம்.

இது சிறு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நான் எனது தந்தையின் அடக்கு முறைக்கு முன் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு என்னை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது (இந்த உணர்வு, வேறு ஒரு விதத்தில் புனிதமானதும், பலன் மிக்கதும் கூட). எனக்கு என்ன தேவைப்பட்டிருக்கும் என்றால் சிறு ஊக்குவிப்பு, சிறு நட்புறவு, என்னுடைய பாதையை லேசாக திறந்து விடுதல் அவ்வளவே....

நான் நினைக்கிறேன்... குழந்தை வளர்ப்பு உங்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ளது. உங்களைப் போன்ற மனிதர்களிடத்தில் உங்களது வளர்ப்பு முறைகள் உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கிறேன்... ஆனால் என்னைப்போன்ற சிறுவன் என்ற வகையில், நீங்கள் எனக்கு பிறப்பித்த ஆணைகள் எல்லாம் சொர்கத்திலிருந்து வரும் கட்டளையே. அதை என்னால் மறக்க முடியாது. உலகத்தை பற்றிய முக்கியமான தீர்ப்பை வடிவமைத்துக் கொள்ள ஒரு முக்கியமான வழிமுறையாக அவை அமைந்தது. அனைத்திற்கும் மேலாக உங்களைப் பற்றிய தீர்ப்பையும் நீங்களே அறியச் செய்வது. ஆனால் இந்த விஷயத்தில் நீங்கள் முழுதும் தோல்வி அடைந்தீர்கள். குழந்தைப் பருவம் முதலே நான் உங்களுடன் சேர்ந்து இருக்கும் தருணம் உணவு மேசையில்தான். அப்போதெல்லாம் மேஜை நாகரீகம் பற்றி நீங்கள் அறிவுரை வழங்குவீர்கள். மேஜைக்கு என்ன வருகிறதோ அதைத் தின்ன வேண்டும், உணவின் தரத்தைப் பற்றி மூச்சு விடக்கூடாது. ஆனால் பல முறை உணவின் தரம் பற்றி நீங்கள் குறை கூறியுள்ளீர்கள்.... எப்போதுமே உங்களைப் போல் குழந்தைகளும் வேகமாக சாப்பிடவேண்டும். "முதலில் சாப்பிடு அப்புறம் பேசலாம்" "வேகம், வேகம் வேகம்... இதோ பார் நான் பல யுகங்களுக்கு முன்னரே முடித்து விட்டேன். ரொட்டியை வெட்டும்போது ஒரு துளியும் வேஸ்ட் ஆகக் கூடாது. ஆனால் மேஜையில் உனது இருக்கைக்கு கீழ்தான் அனைத்து வேஸ்ட்களும் இருப்பது வழக்கமாக இருந்தது...

இவ்வாறாக உங்கள் போதனைகளை நீங்களே மீறுவீர்கள்... இதனால் உலகம் எனக்கு 3 பிரிவுகளாக பிரிந்து போனது: ஒன்று, நான் ஒரு அடிமை, எனக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட விதிமுறைகளின்படி நான் வாழவேண்டும். இரண்டாவதாக, இது என்னிலிருந்து எல்லையற்று விலகிச்சென்ற ஒரு உலகம், இதில் நீங்கள் மட்டுமே இருந்தீர்கள், ஆட்சி செய்வதில் மட்டுமே கவலை, உத்தரவுகளை பிறப்பிக்கிறீர்கள், அதற்கு கீழ்படியாமையால் ஏற்படும் ஆத்திரம் என்ற இந்த 2-வது உலகம். பிறகு 3-வது உலகம் இதில் யாரும் யாருக்கும் கீழ்படிவதில்லை, எல்லோரும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

அதிர்ஷ்ட வசமாக இது அனைத்திற்கும் விதிவிலக்குகளும் இருக்கின்றன. குறிப்பாக நீங்கள் அமைதியான முறையில் துன்புறும்போது, அன்பும், பாசமும் அனைத்து தடைகளையும் உடைக்கும்போது அந்தத் தருணங்கள் நெகிழ்வானவை. இது மிகவும் அரிதே என்றாலும், அது அபாரமானது. உதாரணமாக ஆரம்பக் காலங்களில், கடும் கோடைக் காலங்களில், மதிய உணவிற்குப் பிறகு நீங்கள் களைப்பாக இருக்கும்போது, அலுவலகத்தில் மேஜையில் முழங்கையை ஊன்றி சிறு உறக்கம் கொள்ளும்போது அல்லது அம்மா நோய் வாய்ப்பட்டிருந்தபோது... குலுங்கிக் குலுங்கி நீங்கள் அழும்போது அல்லது கோடை விடுமுறையில் எங்களுடன் நீங்கள் கிராமத்திற்கு விடுமுறையை கழிக்க வரும்போது, ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்களைப்பிலிருந்து திரும்பும்போது; அனைத்திற்கும் மேலாக, நான் கடைசியாக உடம்பு சரியில்லாமல் இருந்தபோது, ஓட்லாவின் அறைக்கு வந்து நீங்கள் என்னைப் பார்த்தீர்கள், வாசற்படியில் நின்று கழுத்தை எக்கி அறைக்குள்ளே என்னைப் பார்த்தீர்கள், ஒரு கரிசனையில் நீங்கள் எனக்கு கையை அசைத்தீர்கள். இது போன்ற தருணங்களில் மகிழ்ச்சியால் ஒருவர் அழவேண்டும். ஒருவர் இப்போதும் அழுகிறார், இதை எழுதும்போது...

உங்களிடம் அரிதான, குறிப்பாக அழகான, சகஜ பாவனையான புன்னகை உண்டு. யாரை நோக்கி இந்த புன்னகை வீசப்படுகிறதோ அந்த நபருக்கு அது முழுதும் மகிழ்ச்சியை மட்டுமே அளிக்க முடியும்... ஆனால் இது போன்ற நட்புணர்வு கூட கால ஓட்டத்தில் அதிகப்படியான குற்ற உணர்வையும், உலகம் மேலும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது என்பதையுமே எனக்கு அறிவித்தது....

உங்களுடைய செல்வாக்கினால்தான் நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ அவ்வாறு ஆனேன் என்று நான் கூற மாட்டேன். ஏனெனில் அது மிகையான கூற்று (ஆனால் இந்த மிகையான கூற்றை நான் பற்றுகிறேன்). உங்களுடைய செல்வாக்கின்றியே நான் வளர்ந்து விட்டேன், இன்னமும் உங்கள் இதயத்தை பின் தொடர முடியாத மனிதனாக இருக்கிறேன்... உங்களை என் நண்பனாக ஏற்பதில் மகிழ்கிறேன், ஏன் எனது முதலாளியாக, எனது மாமாவாக, எனது தாத்தாவாகக் கூட ஏற்பதில் மகிழ்வேன். ஆனால் ஒரு தந்தையாக நீங்கள் எனக்கு மிகவும் பலம் வாய்ந்தவராக இருக்கிறீர்கள்.

Saturday, July 18, 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு! - அச்சமின்றிப் பார்க்கலாம் | திரைவிமர்சனம்

முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் படம் பிடிக்கப்பட்ட படம். அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி நகரில் வசித்து வருகிறார் கணினிப் பொறியாளாரான பிரசன்னா; அவரின் மனைவி சினேகா இவர்களுக்கு அக்சயா என்ற எட்டு வயதுப் பெண் குழந்தையும் உண்டு.

இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு வண்ணப் பூச்சு (பெயின்ட்) அடிப்பதற்காக அமெரிக்க வன்ணம் தீட்டும் நபரை அழைக்கிறார்கள். அவரும் வண்ணம் தீட்ட ஒப்புக்கொள்கிறார். அவ்வாறு வரும் அந்த நபர், சிறுவர்களைக் கடத்திக் கற்பழித்துக் கொல்லும் சைக்கோ குணம் படைத்தவன். இவனது சைக்கோ பார்வை, சினேகா - பிரசன்னா இவர்களின் எட்டு வயதுப் பெண் குழந்தையின் மீதும் விழுகிறது. பிறகு அக்குழந்தையைக் கடத்த அவன் போடும் திட்டம் என்ன? அதை எப்படி பிரசன்னாவும் சினேகாவும் முறியடித்தார்கள் என்பதை அச்சமில்லாமல் 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன்.படப்பிடிப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டதுடன் படமே அமெரிக்க பாணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் எந்தச் சாயலும் இல்லாமல் இயல்பாக இருக்கிறது திரைக்கதை.

முதல் முறையாக ரெட் ஒன் எனப்படும் கேமராவில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை போல பல தமிழ்ப் படங்களில் இக்கேமராவைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்குப் படத்தின் காட்சிகள் ஒரு அழகான ஆல்பம் பார்த்த அனுபவத்தை ஏற்படுத்துகின்றன. இதற்காக ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கிரிஸ் பிரெய்லிச்சுக்கு ஒரு பாராட்டு.

பிரசன்னா - சினேகா இவர்களுக்கு அப்படி ஒரு பொருத்தம். நிஜமான கணவன் - மனைவியாக வாழ்ந்து இருக்கிறார்கள். பிரசன்னாவின் அமைதியான நடிப்பும் சினேகாவின் அழகான நடிப்பும் படத்திற்கு ஆரோக்கியமாக உள்ளது. படத்தில் உள்ள முத்தக் காட்சிகளில் கூட இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

பிரசன்னா - சினேகாவின் குழந்தையாக நடித்திருக்கும் அக்சயாவின் நடிப்பும் ஓகே தான். பிரசன்னா - சினேகா இருவரைத் தவிர படத்தில் வரும் அத்தனை முகங்களும் தமிழ்த் திரையில் பார்த்திராத முகங்களாக இருந்தாலும் எந்த ஒரு பதற்றத்தையும் வெளிப்படுத்தாமல் நடித்திருக்கிறாகள்.

கார்த்திக் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் உள்ளன. இரண்டுமே இனிமை. பின்னணி இசையிலும் பின்னியிருக்கிறார் இந்த இளைய ஞானி.

'அச்சமுண்டு! அச்சமுண்டு!' என்று தலைப்பு இருந்தாலும் படத்தை அச்சமின்றிப் பார்க்கலாம். படம் பார்ப்பவரை அச்சப்பட வைப்பதற்காக இயக்குநர் முயன்றிருப்பது, சில காட்சிகளில் தெரிகிறது. எந்த ஒரு காட்சியையும் நீளமாகச் சொல்லாமல் சுருக்கமாகச் சொல்லியிருக்கும் இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு ஒரு சபாஷ் சொல்வேன்.

Friday, July 17, 2009

ஊர் சுற்றலாம் வாங்க - குற்றாலம்

உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அருவிகளைப் பார்க்கலாம். ஆனால் குற்றால அருவிகளுக்கு இணையான அருவி ஒன்றைக் காண்பது அபூர்வம். குற்றாலம் பேரருவியாக இருந்தாலும், அதன் மேல் பகுதியிலுள்ள செண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைய குற்றாலம் ஆனாலும், இந்த அருவிகள் எதுவும் பெரும் உயரத்தில் இருந்து ஒரு தூண் போல தண்ணீரைக் கொட்டி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தவில்லை.

நயாகராவைப் போல அச்சமூட்டும் அளவிற்கோ அல்லது கேரளத்தில் சாலக்குடி ஆற்றின் போக்கிலுள்ள அதிரம் பள்ளி போன்று ஒரு அழகிய இயற்கை சூழலில் உள்ளதோ அல்ல குற்றால அருவிகள். ஆயினும் குற்றால அருவியை இவ்வளவு சிறப்புடன் போற்றப்படுவதற்கு காரணம்: அதன் அருவி நீர் உடலிற்கு நன்மை பயப்பது, குற்றாலச் சூழல் மனதிற்கு இதமளிப்பது. இதனால்தான் குற்றாலத்தில் குளித்து ஊறியவர்கள் எவரும், வேறு எந்த அருவியிலும் குளிக்க முற்படுவதும் இல்லை, போற்றுவதும் இல்லை.

தமிழர் பாரம்பரியத்திலும், வரலாற்றிலும், இலக்கியத்திலும் போற்றப்படும் பொதிகை மலையைத் தழுவி ஓடிவரும் குற்றால அருவி நீர், அதன் வழியிலுள்ள பல மூலிகைச் செடிகளைத் தழுவி ஓடி வருவதால்தான் அதற்கு இந்த தனித்த மகிமை இருப்பதாகக் கூறுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவராயினும் குற்றால அருவிகளில் குளித்து குறை கூறியவர் எவருமில்லை! மழை பொய்த்துப் போகும் காலங்களில் போதுமான அளவிற்கு அருவியில் நீர் கொட்டவில்லையே என்று ஒரு குறைபாடல் தவிர, குற்றால அருவிகளை கொஞ்சாதவர்களை காண்பதரிது.

அப்படியென்ன குற்றால அருவிகளுக்கு சிறப்பு என்று இதற்கு மேலும் கேட்பவர்கள், ஒரு முறை குற்றாலத்திற்குச் சென்று அங்குள்ள அருவிகளில் குளித்து நீராடிவிட்டு, அன்றோ அல்லது மறுநாளோ செங்கோட்டைக்கு அப்பால் தமிழ்நாடு எல்லையைத் தாண்டிசென்று கேரளத்திலுள்ள பாலாறு அருவியில் குளித்துவிட்டு வாருங்கள், அந்த வேறுபாடு தெரியும்.

குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.

குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.

தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.
2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.
3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.
6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.
7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.
8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.
9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

படகு குழாம் : குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.

மீன் காட்சியகம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சித்திர சபை : தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குற்றாலம் சித்தர சபையாகும். இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆய்வகம் : பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கோவில்கள் : குற்றாலத்திற்கு உல்லாசப் பயணம் வரும் பயணிகள் தரிசனம் செய்ய பிரசித்த பெற்ற குற்றால நாதர் கோவில், இலஞ்சிகுமாரர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், பண்பொழி திருமலை கோவில், புளியரை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவில், செங்கோட்டை ஆஞ்சநேயர் கோவில், ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் கோவில், அச்சன்கோவில், மற்றும் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

விடுதிகள்: அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) மற்றும் தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.

Thursday, July 16, 2009

இசை மேதை டி.கே. பட்டம்மாள் மறைந்தார்

கர்நாடக இசையுலகின் இணையற்ற இசை மேதை டி.கே.பட்டம்மாள் மறைந்தார். சங்கீத தேவதையின் சந்நிதியில் இடைவிடாது நாத மயமாய் வர்ஷித்த வீணை ஓய்ந்துவிட்டது. இசையுலகினை வெற்றென்ற அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. யாரும் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடம். இசை இலக்கணங்கள் அத்தனையையும் பூரண ஆபரணமாகத் தரித்துப் பொலித்த இப் பெருமாட்டியின் இடத்தை யார் நிரப்ப முடியும்?

காஞ்சிபுரம் அருகே தாமல் என்ற கிராமத்தில் 1919-ஆம் ஆண்டு இந்த இசைத் தாரகை உதித்தது. தந்தை கிருஷ்ணசாமி தீட்சிதர். தாய் ராஜம்மாள். இருவருமே சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள். தாய் ராஜம்மாள் கச்சேரி செய்யும் அளவுக்கு சங்கீதம் அறிந்தவர்தான். ஆனால் அன்றைய வழக்கப்படி குடும்பப் பெண்கள் பாட்டும், நடனமும் கற்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வகையில் பார்த்தால் அந்தணர் குலத்தில் பிறந்து முதலில் இசை மேடை ஏறிப் புரட்சி செய்தவர் பட்டம்மாள்தான். அதேபோல முதலில் நாட்டியமேடை ஏறிப் புரட்சி செய்தார் ருக்மணி அருண்டேல். இவர்களது அரங்கப் பிரவேசத்துக்குப் பின்னர்தான் அந்தணர் குலத்திலிருந்து பலர் மேடை ஏறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் என்ற ஊரைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகள் பட்டம்மாள். தாயிடம் சிட்சை பெற்ற பட்டம்மாள் 1932-ல் தனது பத்தாவது வயதிலேயே ரசிக ரஞ்சனி சபாவில் மேடையேறி முதல் கச்சேரி செய்து புதிய வரலாறு படைத்தார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், கான சரஸ்வதி மற்றும் சங்கீத நாடக அகாதெமி வழங்கும் விருதுகள் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் டி.கே. பட்டம்மாள்

ஆரம்பத்தில் பட்டம்மாள் திட்டமிட்டு ஸரளி, ஜண்டை வரிசை, கீதம், வர்ணம் என்று வழக்கமான பாணியில் இல்லாமல் சங்கீதத்தைக் கற்றார். ஆரம்பத்தில் அப்பா சொல்லிக் கொடுத்த ஸ்லோகங்களுடன்தான் அவர் சங்கீதப் படிப்பு ஆரம்பித்தது. பின்னாளில் ஆரணியிலிருந்த தெலுங்கு வாத்தியார் ஒருவரிடம் பாட்டு சிட்சை நடந்தது. பின்னாளில் தீட்சிதர் வம்சத்தில் வந்த அம்பி தீட்சிதரிடமே சங்கீதம் கற்றார் பட்டம்மாள். கோடீஸ்வரய்யர், பாபநாசம் சிவன் போன்ற வாக்கேயர்களிடம் நேரடியாகக் கற்கும் பாக்கியம் பெற்றவர் அவர்.

காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையின் பாணியிலிருந்து பல விஷயங்களை நாயனாவின் சீடர் கிருஷ்ணசாமி ஐயங்காரிடமிருந்து பட்டம்மாள் கற்றார். அதன் காரணமாகத்தான் கரணம் தப்பினால் மரணம் என்கிற வகையில் வரும் நிரடான பல்லவிக் கணக்குகளெல்லாம் பட்டம்மாளின் விரல் நுனியில் சேவகம் செய்தன.


லய சாம்ராஜ்யத்தை கட்டி நிர்வகிக்கும் அவரது அபூர்வத் திறமை எவரையும் பிரமிக்க வைப்பது. இந்தத் திறமையால்தான் அன்றைய பெரிய பெரிய சங்கீத ஜாம்பவான்களிடம் பிரம்ம ரிஷிப் பட்டம் பெற்றார். அரியக்குடி பட்டம்மாளின் பாட்டைக் கேட்டு. பட்டம்மாள்... பாட்டம்மாள்... பாடுபட்டம்மாள் என்று பாராட்டினார். எட்டுத் திசையிலும் பட்டம்மாளின் கொடி பட்டொளி வீசிப் பறந்தது. புகழின் உச்சிக்குப் போனார். பாமர ரசிகர்களிலிருந்து தேசப் பிதா காந்தி வரை அவரது பாட்டைப் புகழ்ந்தனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று முழுவதும் தமிழக ரேடியோவில் தேசபக்திப் பாடல்களை இடைவிடாமல் பாடும் அளவுக்குப் புகழ் பெற்றார். உள்ளூர் பாராட்டுகள் முதல் சங்கீத கலாநிதி, பத்ம விபூஷண் வரை பல்வேறு விருதுகளையும் பெற்றார். கர்நாடக சங்கீதத்தில் லட்சியம், லட்சணம் என்று இரண்டு அம்சங்களைச் சொல்வார்கள். அப்பழுக்கின்றி இவ்விரு அம்சங்களையும் தம்மிடத்தே கொண்டு ஜொலித்த கலைஞர்கள் மிக அபூர்வம். அப்படி ஜொலித்த ஓர் அபூர்வ தாரகை பட்டம்மாள். வெறும் தாரகை மட்டுமல்ல... அவர் ஒரு மார்க்கதரிசியுமாவார். மறைந்த கலைஞர் டி.கே. ஜெயராமன் தொடங்கி பட்டம்மாள் போட்டுக் கொடுத்த பாதையில் பயணம் செய்த செய்கிற கலைஞர்களை ஒரு பட்டியல் போடலாம். பாடாந்தர சுத்தத்துக்கு இன்னொரு பெயர் பட்டம்மாள்; அழுத்தம், பூரண ராகபாவம்; சாகித்ய பாவம்; அதுவும் சாகித்யத்தை தெள்ளத் தெளிவாய் உச்சரிக்கிற விஷயத்தில் பட்டம்மாவுக்கு நிகர் அவர்தான். வழவழா விவகாரமே அவரிடம் பார்க்க முடியாது.

வராளி ராகத்தில் தியாகராஜரின் "ஏடி ஜென்மமிதி' கிருதியை டி.கே.பி. பாடிக் கேட்டவர்களுக்குத் தெரியும். இந்தக் கிருதியில் ""என்ன ஜென்மமடா இது ராமா'' என்று ஏங்கித் துக்கிக்கிறார் தியாகராஜர். அவரது ஆத்ம வேதனையை வராளியின் ஜீவன் பொங்கி வழியத் தன் இறைஞ்சுகின்ற குரலில் சாகித்ய பாவம் பொலியப் பொலிய டி.கே.பி. பாடுகிறபோது கல் நெஞ்சும் நெகிழ்ந்து கண்ணீர் மல்கும். இனி இந்த சங்கீத ரசவாதத்தை யார் நிகழ்த்துவார்? இனி யார் அப்படிப் பாடிக் கேட்கப் போகிறோம்?

கடந்த நூற்றாண்டில் மூன்று இசைக் குயில்கள் கர்நாடக இசை மேடைகளில் கானமழை பொழிந்தனர். எம்.எஸ். சுப்புலெட்சுமி, எம்.எல். வசந்தகுமாரி மற்றும் டி.கே.பட்டம்மாள் ஆகிய மூவரும் எம்.எஸ்., எம்.எஸ்.வி., டி.கே.பி. என்பதுதான் பரவலாக அழைக்கப்பட்டனர். எந்த இசை விழாவாக இருந்தாலும் இவர்கள் மூவரது நிகழ்ச்சியும் இல்லாமல் போனால் அது நிறைவில்லாததாகக் கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. மூவருக்குமே தனி தனி பாணி இருந்தது மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்தது.

"நாம் இருவர்' திரைப்படத்தில் டி.கே. பட்டம்மாள் பாடிய "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே' பாடல்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த நன்னாளில், சென்னை நகரத் தெருக்களில் நள்ளிரவு நேரத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த அனைவரின் உற்சாகப் பாடலாக இருந்தது என்பார்கள். அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் பாரதியாரை மட்டுமா, பட்டம்மாளையும் அல்லவா ஞாபகம் வரும்?

ஊர் சுற்றலாம் வாங்க - ஏலகிரி

ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் "ஏழைகளின் ஊட்டி'யாக ஏலகிரி திகழ்கிறது.

வெயிலூராக மாறிவிட்ட வேலூர் மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1410.60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கோடையில் இதமான, மிதமான வெப்பநிலையில் தென்றல் வீசுவது சிறப்பு.

திருப்பத்தூரில் இருந்து 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஏலகிரிக்கு பஸ் வசதி உள்ளது. திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் பொன்னேரி கூட்டுச் சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏலகிரி 14 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் பொன்னேரி கூட்டுச் சாலை உள்ளதால் ரயில் மூலமும் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரிக்கு வர முடியும்.

மலைக்கு வாகனங்கள் செல்லும் பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஒவ்வொரு வளைவிலும் தரைப் பகுதியைக் காணும் பார்வை மையங்கள் உள்ளன. மலையின் உச்சியில் இருந்து தொலைதூர இயற்கைக் காட்சிகளைக் காண வனத் துறை பராமரிப்பில் தொலைநோக்கி பார்வை மையம் உள்ளது.

ஏலகிரி 28.2 சதுர கி.மீட்டர் பரப்பில் 14 குக்கிராமங்களைக் கொண்டது. மலையில் புங்கனூர் ஏரிப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு நுழைவுக் கட்டணம் ரூ.3.

இதன் அருகில் சிறார்களைக் கவரும் வகையில் மான்கள், முதலைகள், மலைப் பாம்புகள் மற்றும் பறவைகள் அடங்கிய உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. தற்போது இப்பூங்கா அகற்றப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது.

புங்கனூர் ஏரியில் ஆண்டு முழுதும் நீர் உள்ளது. இதில் பயணிகள் படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது.

படகு சவாரிக்காக பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை சீர்கெட்டுள்ளது. ஏரியின் நடுவில் உள்ள நீரூற்று பழுதடைந்துள்ளது. ஏரியின் கரைகளைச் சுற்றி பார்த்தீனியம் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. சுற்றுச் சாலைப் பகுதி பராமரிப்பின்றி உள்ளது.

ஏலகிரியில் பொதுப் பணித் துறை, வனத்துறை பராமரிப்பில் சுற்றுலா மாளிகைகள், தமிழ்நாடு கட்டட மையத்தின் விருந்தினர் மாளிகை ஆகியன உள்ளன. ஓட்டல் ஹில்ஸ், ஓ நிலா, தாஜ் கார்டன், ஓட்டல் நீலகிரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளும் உள்ளன.

அத்தனாவூர் முருகன் கோயில், பழப் பண்ணை, தாமரைக்குளம் அம்மன் கோயில், தாயலூர் பட்டுப் பூச்சிப் பண்ணை, புங்கனூர் ஏரி அருகே வனத்துறையின் மூலிகைப் பண்ணை, சுவாமிமலை சிவன் ஆலயம் உள்ளிட்டவை பயணிகளைக் கவரும் இடங்கள்.

மலையில் நிலாவூரில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இவ்வழியாகச் செல்ல பாதை இல்லை. இதைக் காண விரும்பும் பயணிகள் திருப்பத்தூர் வழியாக 37 கி.மீட்டர் சுற்றி வரும் நிலை உள்ளது. இதனால் நிலாவூர்-ஜலகம்பாறைக்கு பாதை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பம்.

மலையில் பெரிய மடுவு என்ற இடத்தில் மற்றொரு நீர்வீழ்ச்சி உள்ளது.

மே மாதத்தில் பெங்களூர், ஆந்திரம், கேரளம், புதுவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். மே இறுதியில் அரசு இப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தி வருகிறது.

அடுத்தப் பதிவில் குற்றாலமலையைப் பற்றி எழுதறேன்.

ஊர் சுற்றலாம் வாங்க - கொல்லிமலை

கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன. இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களை காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும், அதற்கிணங்கி கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் பல கதைகள் கூறப்படுகின்றன. கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது. கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

அறப்பளீஸ்வரர் கோவில்

சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாதலின் இதற்குச் 'சதுரகிரி' என்ற பெயர் வந்தது. இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் இறைவியார் தாயம்மை என்றும் அழைக்கப்படுகிறார்கள். அறை = சிறிய மலை. மலைமேல் உள்ள கோயில் = அறைப்பள்ளி. இறைவன் அறைப்பள்ளி ஈஸ்வரர். இப்பெயர் மருவி அறப்பளீஸ்வரர் என்றாயிற்று. இக்கோயிலுக்குப் பக்கத்தில் "மீன்பள்ளி" ஆறு ஓடுகிறது. இம்மீன்பள்ளியாற்றில், இறைவன் மீன்களின் வடிவில் விளங்குவதாக ஐதீகம். இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது. எனவே மீன்களுக்கு பழம், தேங்காய் வைத்துப் படைத்து, அவற்றுக்கு உணவு தரும் பழக்கம் பண்டை நாளில் இருந்து வந்துள்ளது. இதன் பின்னரே அறைப்பள்ளிநாதருக்கு பூசை நிகழுகிறது. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். மேற்சுவரில் மகா மேருவும் சுற்றிலும் அஷ்டலட்சுமி உருவங்களும் கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலை வல்வில் ஓரி கட்டியதாக கூறப்படுகிறது. உறையூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் திரு. அருணாசல முதலியார் என்பவர், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளார். கொல்லி மலையில் (சதுரகிரியில்) எழுந்தருளியுள்ள அறப்பளீசுவரப் பெருமான் மீது, அம்பலவாண கவிராயர் என்பவர் "அறப்பளீசுர சதகம்" என்னும் அருமையான நூலைப் பாடியுள்ளார். அதன் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே' என்றமைத்துப் பாடியுள்ளமை சிறப்பிலும் சிறப்பு. இம் மலைக்கோயிலில் (அறை = மலை; பள்ளி = கோயில்) 19 கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 12 சோழர் காலத்தியவை.

ஆகாய கங்கை அருவி

கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாகவுள்ளது.

முருகன் கோவில்
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.

வியூ பாயிண்ட்
சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வல்வில் ஓரி விழா
செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

வாசலூர்பட்டி படகுத் துறை

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும். அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.

அடுத்தப் பதிவில் ஏலகிரியைப் பற்றி பார்ப்போம்.

Wednesday, July 15, 2009

செந்தழல் ரவி சொல்வது சரியா?

செந்தழல் ரவியின் கூகிள் க்ரோம் OS. மைக்ரோசாப்ட்டுக்கு ஆப்பு... எனும் பதிவைப் படித்தேன், பின்னூட்டமாய் என் கருத்தை சொல்லுவதைவிட தனியா ஒரு போஸ்ட் போட்டுடலாமேனுதான்! பின்ன என்னங்க, நாமளும் எப்போதான் பிரபலமாகுறது? சரி, சரி மேட்டருக்கு வருவோம்...

மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு போட்டியாக குரோம் என்ற பிரவுசரை கடந்த ஆண்டு கூகுள் வெளியிட்டது, வழக்கம்போல் இலவசமாக. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மோசில்லா பிரவுசர்களுடன் போட்டியிடும் அளவுக்கு குரோம் இன்னும் வளரவில்லை. கூகுளின் இதர இணையப் பயன்பாடுகளில் மட்டுமே குரோம் பிரவுசர் நன்றாகச் செயல்படுவதாக ஒரு கருத்து இணையத்தை மேய்பவர்கள் மத்தியிலும் உருவாகிவிட்டது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு நீண்ட புகழ்மிக்க வரலாறு உண்டு. பலவகையிலும், கணினி உலகத்தை அந்த நிறுவனம்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தனிக்கணினிகளில் 90 சதவீதத்தை மைக்ரோசாஃப்ட் மென்பொருள்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இணையத்திலும் இவர்களின் ஆதிக்கம்தான். மைக்ரோசாஃப்டின் தனி ஆவர்த்தனத்துக்கு முதல் போட்டியாக வந்தது யாகூ, அப்புறம் கூகுள்.

கூகுளைத் தெரியாதவர்களுக்கு இணையத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் கூற வேண்டும். தேடுபொறிச் சந்தையை முழுமையாகக் கைப்பற்றிவிட்ட கூகுள், யாகூவை போட்டியிலிருந்து எப்போதோ வெளியேற்றிவிட்டது. கூகுளின் அடுத்த இலக்கு மைக்ரோசாஃப்ட். மைக்ரோசாஃப் டின் சந்தையைக் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிப்பதுதான் கூகுளின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒரு கணினியில் விண்டோஸ் நிறுவப்படுவது, மைக்ரோசாஃப்டின் ஆபீஸ் போன்ற மற்ற மென்பொருள்களின் விற்பனைக்கு அடிப்படை. குரோம் இயக்க அமைப்பு மூலம் இந்த அடிப்படையை ஆட்டிப் பார்க்க கூகுள் முயற்சிக்கிறது. அதென்ன அவ்வளவு எளிதா? அதற்கும் ஏற்கெனவே ஒரு வெள்ளோட்டம் விட்டுப் பார்த்திருக்கிறது கூகுள். ஸ்மார்ட்போன்களில் பயன்படும்வகையில் ஆந்த்ராய்ட் என்ற இயக்க அமைப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆச்சரியப்படத்தக்க அளவில், பயனாளர்கள் மத்தியில் மைக்ராசாஃப்டின் ஸ்மார்ட்போன் இயக்க அமைப்பைவிட நல்ல பெயர் எடுத்திருக்கிறது. அந்த உற்சாகத்தில்தான் இந்த குரோம் முயற்சி. குரோம் பிரவுசரின் மேம்படுத்தப் பட்ட நீட்சிதான் இந்த குரோம் இயக்க அமைப்பு எனலாம். வேகம், எளிமை, பாதுகாப்பு ஆகியவையே இதன் தாரக மந்திரங்கள்.

உண்மையை மறைக்காமல் சொல்வதென்றால் பிரவுசர் விஷயத்தில் கூகுளுக்கு முழுத் தோல்விதான் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதையெல்லாம் இப்போதே தீர்மானித்து விடாதீர்கள் என்கிறது கூகுள். அங்கு தொட்டு, இங்கு தொட்டு இப்போது மைக்ரோசாஃப்டின் தலையிலேயே கைவைத்திருக்கிறது கூகுள். மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க அமைப்புக்கு (ஆப ரேட்டிங் சிஸ்டம்) போட்டியாக குரோம் என்கிற புதிய இயக்க அமைப்பை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக கூகுள் அறிவித்திருக்கிறது. நிச்சயமாக மைக்ரோசாஃப்டின் அடிமடியில் கைவைக்கும் சமாசாரம் தான். மைக்ரோசாஃப்டின் எல்லா முன்னேற் றங்களுக்கும் பின்னால் விண்டோஸ் இயக்க அமைப்புத்தான் இருக்கிறது. உலகின் 90 சத வீத தனிக்கணினிகளில் விண்டோஸ் நிறுவப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இப்போதிருக்கும் இயக்க அமைப்புகளெல்லாம் இணையம் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்டவை. அந்த அடிப்படையையே திரும்பத் திரும்பப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மற்ற இயக்க அமைப்புகளைப் பார்த்து நையாண்டி செய் திருக்கிறது கூகுள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களாம் என்று கேட்டால், "அடிப்படையை மாற்றப் போகிறோம்' என்கிறார்கள். இணையத்தை மையமாகக் கொண்டு இயக்க அமைப்பை உருவாக்குவதுதான் அந்த மாற்றமாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே விண் டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவுக்கு மாற்றாக விண்டோஸ் 7 பதிப்பை வெளியிட மைக்ரோசாஃப்ட் முடிவெடுத்திருக்கும் வேளையில், குரோம் அறிவிப்பு அந்த நிறுவனத்துக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருந்தாக வேண்டும். ஆனால், குரோம் இயக்க அமைப்பைத் தாங்கள் ஓர் அச்சுறுத்தலாகக் கருதவில்லை என்கி றது மைக்ரோசாஃப்ட். தனிக் கணினிகளுக்கான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்குவது மிகச் சிக்கலான வேலை என்பதை கூகுள் விரைவிலேயே புரிந்து கொள்ளும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படி என்ன சிக்கல் இருக்கிறது என்கிறீர்களா?

இயக்க அமைப்பை(OS) ஒரு தனிப்பட்ட மென்பொருளாகக் கருத முடியாது. அதில் இயங்கும் மென்பொருள்களும் இயக்க அமைப்பின் பயன்பாட்டைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில், விண்டோஸ் இயக்க அமைப்பில் செயல்படும் வகையில் ஆயிரக்கணக்கான மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கோரல், அடோப் போன்ற பல்வேறு பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்கூட விண்டோஸுக்கான மென்பொருள் பதிப்புகளை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக வெற்றிகரமாக வெளியிட்டு வருகின்றன.

குரோம் இயக்க அமைப்பில் செயல்படும் வகையிலான மென்பொருள்களை இந்த நிறுவனங்களெல்லாம் வெளியிடுமா என்பது சந்தேகமே. இவற்றையெல்லாம் கூகுளே தயாரிப்பதும் சாத்தியமில்லை. அப்படியே தயாரிக்க முடிந்தாலும் மைக்ரோசாஃப்ட் அளவுக்கு பிரபலமாவதும் கஷ்டம்தான். உதாரணத்துக்கு எம்எஸ் ஆபீஸ். எத்தனையோ இலவச வேர்ட் பிராசசர்களும், ஸ்பிரட் ஷீட்களும் வந்த பிறகும் எம்எஸ் வேர்டையும் எக்ஸல்லையும் அடித்துக் கொள்ள முடியவில்லையே! சாதிக்கப் போகிறதோ இல்லையோ, பெரிய எதிர்பார்ப்பை கூகுள் கிளப்பி விட்டிருக்கிறது. தேடுபொறி சந்தையைக் கைப்பற்றியதைப் போன்று சாதனை செய்யுமா அல்லது பிரவுசர் வெளியிட்டது போல மண்ணைக் கவ்வுமா என்பது குரோம் சந்தைக்கு வந்த பிறகே தெரியும் இல்லையா?

கத்தரிக்காய் முற்றட்டும், கடைத்தெருவில் பார்க்கலாம்! சரிதானே? க க க போ :-)

ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா

இலங்கை, மலேசியா உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படும் போது சுனாமி முதலான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எண் கணித மேதை நம்புங்கள் நாராயணன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

கிரகணங்களால் ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்கள் பற்றி எண் கணித ஜோதிடர் நம்புங்கள் நாராயணன் தெரிவிக்கையில்,

கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் ராசிக்கு ஏற்ப கிரகணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அமையும். 9 கிரகங்களும், 12 ராசிகளும் சுற்றி வருவதால் பலவித மாற்றங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் காணலாம். எதிர்வரும் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 15ஆம் திகதி பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இது காலை 11.25 மணிக்கு ஆரம்பமாகி 3.15 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த கிரகணம் உத்தராடம் நட்சத்திரத்தில் தனு ராசியில் சம்பவிக்கிறது.

கிரகணங்கள் ஏற்படும் நேரம், நட்சத்திரம், ராசிக்கு ஏற்ப அதன் தாக்கம் 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகள் வரையிலிருக்கும். இம்மாதம் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் காலை 5.29 மணிக்கு ஆரம்பித்து 7.18 மணி வரையில் நீடிக்கும். கிரகணம் பூச நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இது உகந்த காலமாக அமையவில்லை.

எனவே, பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். சூரிய கிரகண காலத்தில் சந்திரன் பூமியில் உள்ள கிரகண பாதையில் பூமிக்கு அடியில் இருக்கும் "டெட்டானிக் பிளேட்"டின் ஆகர்ஷன சக்தியினால் பூகம்பம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்பு இருக்கும். அரசியல் குழப்பமும் நிகழலாம். மலேசியா, சிங்கப்பூர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் சூரிய கிரகணத்தினால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிரித்தால் ரசிப்பேன் = வயிறு குலுங்க சிரிக்க | திரைவிமர்சனம்

பண்ணையார் மகளை காதலித்து மணக்க போராடும் இளைஞன் கதை...பண்ணை குடும்பத்து பெரியவர் எம்.எஸ். பாஸ்கர். தங்கையை மந்திரவாதி தியாகு காதலித்து கடத்தி போய் மணந்ததால் காதலையே வெறுக்கிறார்.

எம்.எஸ். பாஸ்கர் மகள் சுனுலட்சுமிக்கு தனது மகன் சத்யனை மணமுடித்து சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறார் தியாகு. ஆனால் சுனுலட்சுமிக்கு வீட்டு மானேஜர் மனோபாலா மகன் சத்யா மேல் காதல். ராத்திரிகளில் சந்தித்து ரகசியமாக காதலை வளர்க்கின்றனர்.

ஒரு கட்டத்தில் காதல் விவகாரம் எம்.எஸ். பாஸ்கருக்கு தெரிய ஆவேசம். சத்யாவை விரட்டியடிக்கின்றனர். சுனுலட்சுமிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணத்தை தடுத்து தன் மகனுடன் சுனுவை சேர்க்க தியாகு அடியாட்களுடன் வருகிறார். சத்யாவும் அனுவை கடத்தி போய் திருமணம் செய்ய வியூகம் வகிக்கிறார். அனுவை யார் மணந்தார் என்பது கிளைமாக்ஸ்...

முழுநீள காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம். பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கி சிரிப்பு தோரணம் கட்டுகின்றனர்.

இறுக்கத்துடன் துப்பாக்கியும் கையுமாய் திரியும் எம்.எஸ். பாஸ்கர்... மகாநதி சங்கரின் அடிதடி கோஷ்டி செய்யும் கோமளித்தன கலாட்டாக்கள், தியாகு, ஊர்வசி, சத்யன் கூட்டணியின் மந்திர, தந்திர ரவுசுகள் என காமெடி தர்பாரே நடத்துகின்றனர். சத்யா காதல் காட்சிகளில் பளிச்சிடுகிறார். சுனுலட்சுமி அகலமான கண்கள், வசீகர புன்னகையில் கவர்கிறார். சண்முகராஜன், மனோபாலா, கல்பனா, மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோரும் உள்ளனர்.

தியாகுவின் நிர்வாண வசிய யோசனையும் அதை கேட்டு சத்யன் செய்யும் கூத்தும் முகம் சுளிக்க வைக்கின்றனர். இயனியனின் இசையில் பாடல்கள் இனிமை. ரமேஷ் அழகிரியின் ஒளிப்பதிவும் அருமை. காமெடி பட இயக்குனர் வரிசையில் அழுத்தமாக தன்னை பதிவு செய்துள்ளார் வி. சந்திரசேகரன்.

Tuesday, July 14, 2009

நஷ்டகணக்கு | பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்றா?

மக்களவைத் தேர்தலின் போது, தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது என்கிற அளவுக்கு மாற்றம் இருந்தது. தேர்தல் முடிந்தது. மின்வெட்டு தொடங்கிவிட்டது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக, அறிவிக்கப்படாத மின்வெட்டு மெல்ல மெல்ல இருள் பரவுவதைப்போல ஆரம்பமாகிவிட்டது.இது முடிவே இல்லாத துயரம் என்பதாகவும், முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் மின்வாரியம் என்பதையும்தான் உணர்த்துகின்றன மின்வாரிய அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சட்டப்பேரவையில் அளித்த தகவல்கள்.

நடப்பு ஆண்டு வருவாய் ரூ. 19,508 கோடி, செலவு ரூ. 26,612 கோடி, நஷ்டம் ரூ. 7,104 கோடி என்கிறார். அதேநேரத்தில், மின்வாரியத்தில் 40 சதவீதம் ஊதிய உயர்வு, 9,600 பேருக்கு பணிநிரந்தரம் என்றும் அறிவிக்கிறார். மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்காது என்பதால்தான் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம், தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது என்கிறார். அதே சமயம் மின்வாரியம் தனியார்மயம் இல்லை என்றும் சொல்கிறார்.

தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறை தற்போது 1232 மெகாவாட். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2013-ம் ஆண்டில் 1875 மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை உயரும் என்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட அரசின் மின்சாரக் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், ""தமிழ்நாட்டில் 46 சதவீத மின்சாரம் இலவச திட்டங்களுக்குப் போகிறது. 54 சதவீத மின்சாரத்தை மட்டுமே விற்பனை செய்கிறோம்'' என்கிறார் அமைச்சர். அவரது பேச்சிலேயே மின்வாரியத்தின் நஷ்டத்துக்கான காரணங்களும் எரியும் மின்விளக்கைப்போல பளிச் என்று இருக்கிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மின்பற்றாக்குறை அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை என்பதை அரசின் கொள்கை குறிப்பே சொல்கிறது. அப்படியானால் மின்வாரியத்துக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவது உறுதி. இது மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதும் உறுதி.

300 சதவீதம் லாபம் ஈட்டிய கணினி நிறுவனங்கள்கூட, தொழிலில் இலேசான சரிவுக்கே ஆள்குறைப்பு சம்பளக் குறைப்பு செய்கின்றன. ஏர் இந்தியா நிறுவனம் தனது அதிகாரிகளை ஒரு மாத சம்பளத்தை விட்டுக்கொடுக்கும்படி கேட்கிறது. நஷ்டத்தில் இருக்கும் நிறுவனங்கள் இவ்வாறாக ஆள்குறைப்பு சம்பள குறைப்பு பற்றி யோசிக்கும்போது, ஆண்டுக்கு ரூ. 7,200 கோடி நஷ்டமடையும் தமிழ்நாடு மின்வாரியம் மட்டும் 40 சதவீத சம்பள உயர்வு, 9600 பேருக்கு பணி நிரந்தரம் என்பது ஆச்சரியம் தருகிறது.

நஷ்டத்தைப் போக்க, அல்லது குறைக்க வேண்டும் என்றால், செலவுகளைக் குறைக்க வேண்டும். செலவுகளைக் குறைக்கவும் மனமில்லை. வருவாயைப் பெருக்க வேண்டும் என்றால் ஒன்று, கட்டணங்களை உயர்த்தியாக வேண்டும். செயல்திறனை மேம்படுத்த வேண்டும். அல்லது சம்பளக் குறைப்பு செய்ய வேண்டும். அல்லது 46 சதவீத இலவச மின்விநியோக அளவைக் குறைக்க வேண்டும். இதில் எதையும் செய்வதற்கு அரசு தயாராக இல்லை. இதில் எந்த இடத்தில் கை வைத்தாலும், வாக்குவங்கியில் பலத்த அடிவிழும் என்பதால் அரசு தயங்குகிறது.

தமிழ்நாடு மட்டுமன்றி, எல்லா மாநில அரசு மின்வாரியங்களிலும் நஷ்டம் ஏற்பட முக்கியக் காரணம் மின்பகிர்மானத்தில் நடைபெறும் முறைகேடுகள்தான் என்று மத்திய மின்வாரிய ஒழுங்காற்று ஆணையம் கருதுகிறது. அது உண்மையும்கூட. டிரான்ஸ்பார்மர் ஆயில் முதல் அனைத்து தளவாடப் பொருள் வாங்குவதிலும் மாபெரும் ஊழல் நடைபெறுவதால் பகிர்மான மின்இழப்பு (டிரான்ஸ்மிஷன் லாஸ்) அளவுக்கு அதிகமாக இருக்கிறது. மின்திருட்டும் 15 சதவீதம் இருக்கிறது. இந்த மின்திருட்டை, பகிர்மான இழப்பு என்று கணக்கு காட்டும் ஊழலும் நடைபெறவே செய்கிறது - எல்லா மாநிலங்களிலும். ஆகவேதான் மின்பகிர்மானத்தை, முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததைப்போல, தனியாரிடம் கொடுத்துவிட மின்வாரிய ஒழுங்காற்று ஆணையம் தீர்மானித்தது. இதைச் செய்து முடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் காலஅவகாசமும் அளித்தது.

"தமிழ்நாடு மின்பகிர்மான வாரியத்தை தனியாக உருவாக்கியிருக்கிறோமே தவிர, தனியார்மயம் செய்யமாட்டோம்'' என்று அமைச்சர் இப்போது சொன்னாலும்கூட, ஒரே நாளில் அதனை தனியாருக்கு கொடுத்துவிட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை மத்திய அரசு ஏற்படுத்தவே செய்யும்.

ஒரு யூனிட் ரூ.8 முதல் ரூ.11 என்று கூடுதல் விலைகொடுத்து ரூ. 14,000 கோடி அளவுக்கு மின்சாரத்தை வாங்குவதால்தான் இந்த நஷ்டம் என்று அமைச்சர் சொல்கிறார். இந்த அளவுக்கு பற்றாக்குறையும், நெருக்கடியும் இருக்கும்போது ஏன் இலவச மின்சாரத்தின் அளவைக் குறைக்கக்கூடாது? இந்த இலவச மின்சாரம் ஏழை விவசாயிகளை விட, வசதிபடைத்தவர்களுக்கும், அடிப்படைத் தேவையை மீறி பொழுதுபோக்கு கேளிக்கைக்காகவும் வீணாவது ஏற்புடையதா?

நடப்பாண்டில் மின்வாரியத்தின் நஷ்டம் ரூ. 7,200 கோடி என்றால், இந்த நஷ்டத்தை ஈடு செய்யப்போவது தமிழக அரசுதான். தமிழக மக்கள் பணத்தைக் கொண்டுதான் நஷ்டத்தை தமிழக அரசு சரி செய்ய வேண்டும். 54 சதவீத மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்தும் அந்த பாவப்பட்ட மக்கள் மீதுதான் வாகனங்களுக்கான சாலைப் பாதுகாப்பு வரி என்பனபோன்ற வேறு தலைப்புகளில் சுமையாக வந்து விழப்போகிறது.

46 சதவீத மின்சாரத்தை இலவசமாகக் கொடுத்து, அந்த நஷ்டத்தை அரசு ஏற்கும் என்றால், மீதமுள்ள 54 சதவீத மின்சாரத்தையும் இலவசமாகக் கொடுத்தால் என்ன? என்று கேட்பது பாமரத்தனமாக இருக்கக்கூடும் என்றாலும், கேட்கத் தோன்றுகிறது. இருளோடு இருள் கலந்தாற்போல, நஷ்டத்தோடு இன்னும் கொஞ்சம் நஷ்டம். அவ்வளவுதானே!

எல்லா குடும்ப அட்டைகளுக்கும் இலவச கலர் டிவி எல்லா குடும்ப அட்டைகளுக்கும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. இதேபோல, எல்லா குடும்பங்களுக்கும் இலவச மின்சாரம் என்றால் இன்பமாக இருக்காதா? அட, எல்லா குடும்பங்களுக்கும் "முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம்' என்றாவது அறிவிக்கலாமே!

வாமனன் = காலடிக்குள் பூமி சிக்கவில்லை | திரைவிமர்சனம்

மாடல் லஷ்மிராய் நீச்சல் உடையில் வலம் வருவதை படம் பிடித்துக் கொண்டிருக்கும் கேமரா பொருந்திய ஹெலிகாப்டர் பழுதடைவதால் தனது கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மாட்டிக் கொள்கிறது. அதன் அருகே முதல்வராக பதவியேற்கவிருக்கும் டெல்லிகணேஷை சம்பத் கொலை செய்கிறார். இந்த காட்சி கேமராவில் பதவி செய்யப்படுகிறது. அந்த வீடியோ டேப் லஷ்மிராய் மற்றும் அவருடைய நண்பரிடம் அறிந்த சம்பத்தின் ஆட்களும், போலீசும் துரத்துகின்றன.


லஷ்மிராயும், அவரது நண்பரும் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கிடையில் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் ஜெய், இந்த கொலை வழக்கில் மாட்டிக் கொள்கிறார். போலீஸ் ஜெய்-ஐ துரத்த ஓடி..... ஓடி........ ஓய்ந்து போன நிலையில், தம்மை இக்கொலை வழக்கில் திட்டமிட்டு சிக்கவைத்துள்ளார்கள் என்பதை அறிந்து, அவற்றிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்பது தான் கதை.


கதை ஆரம்பிதிலிருந்தே லஷ்மிராயை சுற்றித்தான் நடக்கிறது. ஜெய் பாட்டின் மூலம் அறிமுகமாகி சுற்றிக் கொண்டிருக்கிறார். ஜெய்-ஐ கதைக்குள் கொண்டுவர இயக்குனர் பயன்படுத்தி ரகுமான் கதாபாத்திரம் படத்திற்கு ப்ளஸ்ஸாக இருந்தாலும், தாமதமாக செய்ததினால் அதை பொறுத்துக் கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை. அதுவரை ஆர்டியன்ஸை காமெடி காட்சிகளில் கவர் பண்ணலாம் என்று நினைத்த இயக்குனருக்கு தோல்வி தான். சந்தானம் ஜெய் முதல் பாதியில் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதனுடைய பயன் சந்தானம் ஊர்வசியுடன் சேர்ந்து சமையல் செய்யும் காட்சியில் மட்டும் தான் கிடைக்கிறது. ஜெய் தனது இரண்டு படங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர். இப்படத்தில் தனக்கென்று ஒரு ஸ்டைலை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பாவம் நடிகர் விஜய்-யையே அவரது நடிப்பு ஞாபகப்படுத்துகிறது.


லஷ்மிராய் முதல் காட்சியிலேயே பிகினி நீச்சல் உடையில் தோன்றி ஆர்டியன்ஸை நிமிரச் செய்ய வைக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துவிட்டு இறந்துவிடுகிறார். புதுமுகம் ப்ரியா, தனக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை, ஜெய்க்கும் தனக்கும் தான் சம்பந்தம் என்பது போல இரண்டு பாடல்கள் ஜெய்யுடன் நடப்பது என சில காட்சிகளில் தோன்றுகிறார்.


ஊர்வசி எப்பவும் போல வெகுளித்தனமான அம்மாவாக வந்து வெறுப்பேற்றுகிறார். சந்தானம் தலைவாசல் விஜய், ரோகினி என நடிகர் பட்டாளம் ஒருபுறம் இருக்க, ரகுமானின் என்ட்ரி படத்தில் கொஞ்சம் விறுவிறுப்பை சேர்க்கிறது. ரகுமான் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


யுவன்சங்கர் ராஜா அண்மையில் வெளிவந்த தமது படங்களைக் காட்டிலும், பரவாயில்லை என்னும் அளவிற்கு இப்படத்தில் மெட்டுக்கள் போட்டிருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பலம். டாப் ஆங்கில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.


இயக்குனர் அகமது, வாமனனை படத்தின் இடைவேளைக்கு பின்புதான் காண்பிக்கிறார். அதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பீகார் கடத்தில் கும்பலை மாட்டிவிட்டு, ஜெய் தப்பிப்பது நாயகிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் மணல் ஓவியம் போன்றவை இயக்குனரின் அனுபவத்தை காட்டுகிறது. ரகுமானின் கதாபாத்திரத்தில் உள்ள விறுவிறுப்பு போன்றவை படத்தின் காட்சிகளில் இல்லாமல் போயிற்று. ஜெய் தாம் நடிக்கும் படங்களிலேயே வாமனன் தான் 100 நாட்களை தாண்டும் என்ற நம்பிக்கை வைத்திருந்தார். வாமனன் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது.

தலைமை‌ச் செயல‌கம் மு‌ன்பு ம‌றிய‌ல்: மாணவ‌ர்க‌ள் ‌மீது காவ‌ல்துறை தடியடி!

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் செ‌ன்னை தலைமை‌ச் செயல‌க‌ம் முன்பு தடையை மீறி மறியல் செய்ய முயன்ற மாணவ‌ர்க‌ள் ‌மீது கா‌வ‌ல்துறை‌யின‌ர் தடியடி நட‌த்‌தின‌ர். இதில் 10 மாணவ‌ர்க‌ள் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர். 100 மாணவர்கள் கைது செய்யப்பட்டு‌ள்ளன‌ர்.

சமச்சீர் கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரியும், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் செ‌ன்னை தலைமை‌ச் செயல‌க‌ம் மு‌ன்பு மறியல் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவ‌ல்துறை‌யின‌ர் இத‌ற்கு அனுமதி மறுத்து ‌வி‌ட்டன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து மாணவர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செல்வா, செயலர் கனகராஜ் ஆகியோர் தலைமையில் 10 பெண்கள் உள்பட 100 மாணவர்கள் தடையை மீறி தலைமை‌ச் செயலக‌ம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஊர்வலமாக வந்த மாண‌வர்களை கா‌வ‌ல்துறை‌யின‌ர் தடுத்து நிறுத்தின‌ர். அதையும் மீறி மாணவர்கள் செல்ல முயன்றபோது காவ‌ல்துறை‌யின‌ர் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இத‌ி‌ல் 10 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஒரு மாணவருடைய காது அறுந்து விழுந்தது. கா‌வ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய தடியடி‌யி‌ல் அந்த இடமே போ‌ர்க்களம் போ‌ல் காட்சி அளித்தது. காயம் அடைந்தவர்க‌ள் செ‌ன்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இத‌னிடையே மறியல் செய்ய முயன்ற 100 மாணவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர். மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Monday, July 13, 2009

வாங்க ஆளில்லாமல் ‘ஹெச்-1-பி’ விசா!

சர்வதேச பொருளாதாரச் சரிவின் காரணமாக அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு செல்வதற்காக பெறப்படும் ‘ஹெ-1-பி’ விசா மீதான இந்தியர்களின் மோகம் குறைந்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் அக்டோபர் முதல் துவங்கும் 2010ஆம் நிதியாண்டில் அமெரிக்கா வருவதற்கான விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏற்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க அரசு நிர்ணயித்தபடி 65,000 இந்தியர்களுக்கு ‘ஹெச்-1-பி’ விசா வழங்கப்படும் என்றாலும், தற்போது வரை 45,500 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த 5 வேலை நாட்களில் மட்டும் 42 ஆயிரம் இந்தியர்கள் ஹெச்-1-பி விசா கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் கடந்த ஒன்றரை மாதங்களாக 3,500 விண்ணப்பங்கள் மட்டுமே அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மையத்திற்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவற்றில் சரியாக 20 ஆயிரம் விண்ணப்பங்கள் அமெரிக்காவில் மேற்படிப்பு பயில விரும்பும் இந்தியர்களால் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. போறப் போக்க பார்த்தா அமெரிக்கனுங்க நம்மூருக்கு வேலை தேடி விசா கேட்பானுங்க போல! அந்த நாளும் வரும்.

Sunday, July 12, 2009

சீனாக்காரன் வைக்கப் போறான் ஆப்பு!

இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது:

ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன.

இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது.

இவை மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிராக சீனாவின் வலது கரம் போல செயல்பட்டு வந்த பாகிஸ்தான் உள்நாட்டுச் சண்டையில் மூழ்கியுள்ளது. இது, இந்தியாவுக்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு ஊக்கம் அளித்து வந்த சீனாவுக்கு எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.

இத்துடன், அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருக்கம் அதிகமாவதும் சீனாவுக்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. அமெரிக்க கூட்டுறவால் தொழில்நுட்ப அளவில் இந்தியா தன்னை மிஞ்சிவிடும் என சீனா அஞ்சத் தொடங்கியுள்ளது.

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள் மீது போர் தொடுப்பது விவேகமானதாக இருக்காது. ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது போல, பொருளாதார தேக்கம், வேலையின்மை போன்றவற்றில் இருந்து மக்களை திசைதிருப்பவும், ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டவும், மென்மையான இலக்கான இந்தியா மீது போர் தொடுத்து இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களைக் கைப்பற்றுவதே சீனாவின் திட்டம்.

இதை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளதா? பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து ஊடுருவல்காரர்கள் மூலம் இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதுடன் நேரடியாக இரு நாடுகளும் போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதா என கேள்வி எழுப்பினால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

நிர்வாகத் துறைக்கு ராணுவ சிந்தனையை அளித்து போருக்குத் தேவையான நிதி மற்றும் ஆதாரப் பொருள்களைத் திரட்டுவதே சீனா மற்றும் பாகிஸ்தானின் சவாலை எதிர்கொள்வதற்கான தீர்வாக அமையும் என பரத் வர்மா கூறியுள்ளார்.

10 பேருக்கு அறிவியலறிஞர் விருதுகள் - தமிழக அரசின் உருப்படியான காரியம்!

தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 10 வல்லுநர்கள், தமிழக அறிவியலறிஞர் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரூ.10,000/- பணமுடிப்பு அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் முனைவர் ச. வின்சென்ட் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (Tamilnadu State Council for Science and Technology) தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம். இதன் நோக்கம் நமது மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இதன் பயன்களை மக்களுக்கு சென்றடையச் செய்வது முதலியன ஆகும். இதற்காக பல்வேறு அறிவியல் தொழில்நுட்பத் திட்டங்களைத் தமிழக அரசு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் ஒன்று “தமிழக அறிவியலறிஞர் விருது” வழங்கும் திட்டம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்து, தமது துறையில் (Discipline) சிறந்து விளங்கும் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். இந்த விருதுகள் கீழ்காணும் துறைகளில் வழங்கப்படுகிறது.

1) வேளாண்மையியல்
2) உயிரியல்
3) வேதியியல்
4) சுற்றுச் சூழலியல்
5) பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
6) கணிதவியல்
7) மருத்துவம்
8) இயற்பியல்
9) கால்நடை அறிவியல்
10) சமூகவியல்.

இந்த விருதுகள் வருடந்தோறும் வழங்கப்படுகின்றன. இதன்படி 2008ஆம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறும் சாதனையாளர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. வேளாண்மையியல் - முனைவர் பி. மீனா

உதவிப் பேராசிரியர்,
தென்னை ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
ஆழியார்நகர் 642 101.

2. உயிரியல் - முனைவர் ஏ.சேட் சாகுல் அமீது

ரீடர், விலங்கியல் துறை,
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி,
மேல்விசாரம் 632 509.

3. வேதியியல் - முனைவர் ஆ. சாமிநாதன்

பேராசிரியர், வேதியியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர் 608 002.

4. சுற்றுச் சூழலியல் - முனைவர் சு பாபு ராசேந்திரன்

ரீடர்,
சுற்றுச் சூழல் உயிர் தொழில்நுட்பவியல் துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி 620 024.

5. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் - முனைவர் சு. நாராயணசாமி
பேராசிரியர்,
உற்பத்தி நுட்பவியல் துறை,
தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (NIT),
திருச்சி 620 015.

6. கணிதவியல் - முனைவர் ஆ லெலிஸ் திவாகர்

ரீடர், கணிதவியல் துறை,
அருள் ஆனந்தர் கல்லூரி,
மதுரை 625 514.

7. மருத்துவம் - முனைவர் பி. ராசேந்திரன்

பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை,
Dr. ALMPGIBMS,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை 600 113.

8. மருத்துவம் - முனைவர் எஸ். செயசந்திரன்

பேராசிரியர், பல் மருத்துவம் மற்றும் கதிரியல் துறை,
தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரி,
சென்னை 600 003

9. இயற்பியல் - முனைவர் C.K. மகாதேவன்

ரீடர், இயற்பியல் துறை,
S.T. இந்து கல்லூரி,
நாகர்கோவில் 629 002.

10 . கால்நடை அறிவியல் - முனைவர் ஆ திருநாவுக்கரசு

பேராசிரியர், புள்ளியில் மற்றும் கணிப்பொறியியல் துறை,
சென்னை கால்நடைக் கல்லூரி,
சென்னை 600 007.

2008ஆம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறும் மேற்கண்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் ரூ.10,000/- பணமுடிப்பு கொடுப்பதுடன் இவர்களது சாதனைகள் பற்றிய விளக்கக் குறிப்பும் (Citation) வழங்கப்படும்.

Saturday, July 11, 2009

ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும் - திருமதி.துணைமுதல்வர் புகழாரம்

மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவதி ஸ்டாலினைச் தினமணி நாளிதழார் சந்தித்து உரையாடியதிலிருந்து...


உங்கள் ஊர், குடும்பம் பற்றி...

என் சொந்த ஊர் நாகை மாவட்டம், திருவெண்காடு. அப்பா ஜெயராமன், ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா சுசீலா, இல்லத்தரசி. எனக்கு ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளும் உண்டு.


உங்கள் திருமணம் பற்றி?

எங்கள் திருமணம் பெரியவர்களால், பார்த்து முடிவு செய்யப்பட்டது. என்னைப் பெண் பார்க்க காரணமாக இருந்தவர் முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன்.


அரசியல் பின்னணி உண்டா?

பின்னணியெல்லாம் கிடையாது. ஆனால் என் அப்பா, குடும்பத்தார் அனைவருக்கும் அந்தக் காலத்திலேயே திராவிட கழகம், கலைஞர் என்றால் மிகவும் பிடிக்கும்.

"துர்காவதி', "சாந்தா'வாக மாறிய ரகசியம் என்ன?

நான் எப்பொழுதும் துர்காவதி தான். என் மாமனார்தான் என்னை சாந்தா என அழைப்பார். என் மாமனார், மாமியார் அவர்களின் வட்டத்துக்குதான் நான் சாந்தா. மற்றபடி, கையெழுத்து உள்ளிட்ட அனைத்திலும் துர்காவதி என்ற பெயரைத்தான் உபயோகிக்கிறேன். என் கணவர் இன்றளவும் என்னை துர்கா என்றுதான் அழைக்கிறார்.


கடவுள் பக்தி உண்டா?

ஆம். நான் தவறாமல் கோயில்களுக்குச் செல்வதுண்டு. வெள்ளிக்கிழமை பிறந்ததினால், என் ஊரில் உள்ள அம்மனின் பெயர்தான் எனக்கு வைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் யாரும் என்னை எதுவும் சொல்வதில்லை. என்னைத் தவிர என் கணவர், மகன், மகள் என யாரும் கோயில்களுக்கு செல்வது கிடையாது. வீட்டில் கூட ஒரு சிறிய பூஜை அறை உள்ளது!

ஸ்டாலின் அவர்களை ஒரு முறை உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிச் சென்றதாக செய்திகள் வந்ததே?

ஆம். நாங்கள் ஒரு முறை அந்த வழியாகச் செல்லும்போது, நான் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டேன், அப்போது அங்கிருந்த பூசாரி, என் கணவரை அழைத்து வரும்படி வற்புறுத்தினார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே, என் கணவரை வரச் சொன்னேன். அவரும் அங்கு கொடுத்த மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்.

தொண்டர்கள் யார் அழைத்தாலும், மறுக்காமல் கோயிலுக்குச் சென்று, அங்கு வழங்கப்படும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் என் கணவர்.

உங்களுக்குத் திருமணம் முடிந்த 5 மாதத்திலேயே மிசாவில் உங்கள் கணவர் கைது செய்யப்பட்டார். அப்போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?

மிகவும் கவலையடைந்தேன். அப்போது கூட்டுக் குடும்பமாக இருந்ததால் எனக்கு ஆறுதல் கூற நிறையப் பேர் இருந்தனர்.

என் மாமியாரிடம் அப்போது கழகத் தொண்டர்களின் வீட்டுப் பெண்களில் சிலர் அவர்களின் கணவர்களை மிசாவில் கைது செய்யப்பட்டுவிட்டதைக் கூறி அழுதால், திருமணமாகி 5 மாதங்கள் ஆன என் மருமகளைப் பாருங்கள்... அவள் எவ்வளவு தைரியமாக இருக்கிறாள் என்று என்னை எடுத்துக்காட்டாக கூறி, வந்தவர்களைச் சமாதானப்படுத்துவார்.

சட்டசபையில் ஸ்டாலின் அவர்களின் உரையைக் கேட்கும்போது உங்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

என்ன திட்டங்கள் அறிவிக்கப் போகிறார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.


உங்களிடம் புதிய திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிப்பது உண்டா?

இல்லை. வீட்டில் அரசியல் இல்லை. நான் என்ன திட்டங்கள் அறிவிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டாலும், நாளைக்கு நேரில் வந்து பார் அல்லது செய்தித்தாளைப் பார்த்து தெரிந்து கொள் எனக் கூறி விடுவார்.


பெண்களுக்கு ஏதாவது திட்டங்கள் அறிவிக்க பரிந்துரைப்பீர்களா?

நான் பரிந்துரைக்காமலேயே அவர் நிறைய செய்தும், செய்து கொண்டும் இருக்கிறார். யாராவது என்னை வெளியிலோ அல்லது வீட்டிலோ சந்தித்து கோரிக்கைகள் கொடுத்தால், அதை உரிய நேரத்தில் அவரிடம் சேர்த்துவிடுவேன். எதையும் தவற விடமாட்டேன்.


திமுகவின் அனைத்து மாநாடுகளிலும் உங்களைப் பார்க்க முடிகிறதே?

ஆம். எல்லா மாநாடுகளிலும் தவறாமல் கலந்து கொள்வேன். கடலூரில் நடந்த மகளிர் மாநாட்டில் மட்டும் கலந்து கொள்ளவில்லை. காரணம் நாங்கள் அப்போது உடல் பரிசோதனைக்காக லண்டன் சென்றிருந்தோம்.

மாநாடு என்றில்லாமல், மனிதச் சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களில் வீட்டில் உள்ள பெண்கள் கலந்து கொள்வதுண்டு. ஒரு முறை உண்ணாவிரதத்தில் கூட கலந்து கொண்டிருக்கிறேன்.


கணவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டவுடன் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினீர்களாமே?

இது எங்களின் குடும்ப வழக்கம். தஞ்சாவூர் பக்கத்தில் வீட்டிற்கு வெளிமாடத்திலிருக்கும் விளக்கை ஏற்றியபின்தான் வீட்டிற்குள் விளக்கேற்றுவார்கள். எங்கள் வீட்டு வாசலில் எப்போதுமே ஒரு காமாட்சி விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அதை தினமும் ஏற்றுவது வழக்கம். அன்றைக்குதான் ஏற்றினேன் என்று கூறுவது உண்மையல்ல.


கணவரைப் பார்த்து வியந்த குணம் எது?

கடின உழைப்பு. வேலை என்று வந்து விட்டால் உணவு,

உறக்கம் இல்லாமல் முழு மூச்சாக உழைப்பார். ஆட்சியில் இல்லாத சமயங்களிலும், கட்சி வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

மருமகளாகவும், மாமியாராகவும் உங்கள் பங்கு என்ன?

முந்தைய கால கட்டங்களைப் போல தற்போது இல்லை. அப்போதெல்லாம் ஏதாவது செய்தாலும், எங்காவது சென்றாலும், மாமியாரிடம் சொல்லிவிட்டு, அனுமதி வாங்கித்தான் செல்ல வேண்டும். ஒரு பயம் கலந்த மரியாதை இருக்கும். இப்போது அந்த இறுக்கம் சற்று தளர்ந்து இருவரும் நண்பர்கள் போல பழகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


உங்கள் மாமியாரிடம் உங்களுக்குப் பிடித்தது?

அவரின் எளிமை!


கணவன், மனைவி இருவரின் இளமையின் ரகசியம் என்ன?

சாப்பாடு விஷயத்தில் இருவருமே கவனமாக இருப்போம். கணவர் காலையில் நடைபயிற்சி, யோகா மேற்கொள்வார். நான் மாலை ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வேன்.


சினிமா, சீரியல்களில் ஆர்வம் உண்டா?

நல்ல படங்கள் என்றால் தியேட்டரில் சென்று பார்ப்போம். கடைசியாக "யாவரும் நலம்' பார்த்தோம். சீரியல்களில் ஆர்வம் கிடையாது. என் கணவர் நடித்த சீரியல்களைக் கூட நான் சரியாகப் பார்த்தது கிடையாது. நானே சீரியல்களில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

என் மகன் உதயநிதி ஸ்டாலின் படம் தயாரிப்பதில் கூட எனக்கு அவ்வளவாக விருப்பமில்லைதான். இருப்பினும் மகனின் விருப்பத்துக்கு தடை போடுவதில்லை.


சமையலில் நீங்கள் எப்படி?

வேறு யாரையும் சமையல் அறைக்குள் அனுமதிப்பதில்லை. நானே நின்று செய்தால்தான் எனக்கு திருப்தி. நான் வைக்கும் மீன் குழம்பு கணவருக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். வேறு யாராவது மீன் குழம்பு செய்தாலும் அதை உடனே கண்டு பிடித்துவிடுவார்கள்.


இனி... உங்கள் கணவர் அடைய வேண்டிய இலக்கு என எதைக் கூறுவீர்கள்?

மக்களின் எதிர்பார்ப்பை குறைவில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். அவர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் உள்ளது.


ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்தது?

அவரின் தைரியம்! தவறோ, சரியோ தைரியமாய் ஒரே ஆளாய் முடிவெடுப்பது பிடிக்கும்.



மனைவி, மருமகள், மாமியார், பாட்டி என நீங்கள் ஏற்றுள்ள நான்கு கதாபாத்திரங்களில் உங்களுக்குப் பிடித்தது?

பாட்டிதான். நமது குழந்தைகளைப் பார்ப்பதே சந்தோஷம். குழந்தைகளின் குழந்தையைப் பார்ப்பது அதைவிடச் சந்தோஷம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். தற்போது பாட்டிதான்!

நன்றி: தினமணி

அரசு ஒதுக்கீடு காசாகிறது: உச்ச நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் சுய நிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடுகள் நிரப்பப்படாமல், அவைகளை கல்லூரி நிர்வாகமே நிரப்புக் கொள்ள மறைமுகமாக அரசு உதவி வருகிறது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக குற்றம் சாற்றியுள்ளது.

உமயாள் ஆச்சி செவிலியர் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 65 விழுக்காடு இடங்களுக்கு எந்த மாணவரையும் இதுவரை தமிழக அரசு பரிந்துரை செய்யாததால், அதனை நிர்வாகமே நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அக்கல்லூரி நிர்வாகம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் முக்குல் ரோஹடாகி விடுத்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

இவ்வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “தகுதி வாய்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் அனுமதி பெறும் வாய்ப்பை நீங்கள் (தமிழக அரசு) பறித்துவிடுகிறீர்கள். சுய நிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டை நிரப்பாமல் விடுவதன் மூலம் அந்த இடங்களை பெரும் தொகையை பெற்றுக் கொண்டு மற்ற மாணவர்களுக்கு ஒதுக்க உங்கள் (தமிழக அரசின்) அலுவலர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். உங்கள் அலுவலர்களுக்கு எல்லாம் தெரியும், ஆயினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பதற்கு காரணம், அவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதுதான்” என்று கடுமையாக தமிழக அரசு மீது குற்றம் சாற்றியது.

தமிழ்நாட்டில் உள்ள சுய நிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் பெரும் நன்கொடை வாங்கிக் கொண்டு நிரப்பப்படுவதாக பொதுமக்களும் மாணவர்களும் கூறிவரும் குற்றச் சாற்றை இன்று உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் மருத்துவ கல்வி இடங்களை ரூ.20 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை பெற்றுக் கொண்டு மாணவர்களைப் பரிந்துரை செய்கிறார் என்ற குற்றச்சாற்று நிலவிவரும் வேளையில் உச்ச நீதிமன்றமும் குற்றம் சாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திரவிழா=கவர்ச்சி + காமெடி | திரைவிமர்சனம்

டிவி- சேனலில் பணிபுரியும் ஸ்ரீகாந்த், தனது சேனலில் ஒளிபரப்பாகும் கோமாளி நம்பர்-ஒன் என்ற நிகழ்ச்சிகாக ஹேமமாலினியை இரண்டு முறை ஏமாற்றுகிறார். மூன்றாவது முறையாக ஹேமமாலினியின் திருமணத்திலும் போலி மாப்பிள்ளையை செட்டப் செய்து கோமாளியாக்குகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் ஹேமமாலினியின் தந்தை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகுகிறார். தன்னால் ஏற்பட்ட இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டதுடன், ஹேமமாலினியை மணந்தும் கொள்கிறார் ஸ்ரீகாந்த். (காதல் காட்சிகள் இன்றி காதலியை கைப்பிடிக்கிறார்)


இதற்கிடையில், சேனலின் முதலாளியான நாசரின் மனைவியாக வருகிறார் நமீதா. நமீதாவை பார்த்து அதிர்ச்சியாகும் ஸ்ரீகாந்த், நமீதாவால் பலமுறை அவமானப்படுத்தப்படுகிறார். (ஏன் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக்) ஐந்து வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்தும், நமீதாவும் மலேஷியாவில் சந்தித்து கொள்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே நமீதாவிடம் சருக்கிய ஸ்ரீகாந்த், நமீதாவை காதலிக்க தொடங்குகிறார்.


நமீதா ஸ்ரீகாந்துடன் அவருடைய பணத்தையும் காதலிக்கிறார். பணத்திற்காக எதையும் செய்யும் நமீதாவின் சுயரூபம் அறியும் ஸ்ரீகாந்த், அவரை விட்டு பிரிகிறார். இப்படி பிரிந்த தனது முன்னால் காதலி, தனது முதலாளியின் மனைவி என்பதால் அவமானங்களை பொறுத்துக் கொண்டு அவரின் கீழ் பணிபுரிந்து வரும் ஸ்ரீகாந்தை தாம் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அழைக்கிறார் நமீதா. அங்கு வரும் ஸ்ரீகாந்திடம் தனது காதல் நினைவுகளை பகிர்ந்து கொள்ள நினைக்கும் நமீதாவிற்கு ' நோ ' சொல்லி நோஸ்கட் கொடுக்கிறார். கோபம் கொள்ளும் நமீதா, ஸ்ரீகாந்த் தம்மை கற்பழிக்க முயற்சித்தார் என்று தமது கணவர் நாசரிடம் கூறி, ஸ்ரீகாந்தை வேலையைவிட்டே தூக்குகிறார்.


ஸ்ரீகாந்த் தான் நிரபராதி என்றும், தனது வேலையை தமக்கு திருப்பி தரவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இதற்கிடையில், நமீதா-ஸ்ரீகாந்த் பேசிக்கொண்ட வீடியோவை வைத்திருக்கும் ரகசியா கொலை செய்யப்படுகிறார். இக்கொலை பழியும் ஸ்ரீகாந்தின் மேல் விழுகிறது. இதிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதே இறுதி காட்சி.


நமீதா, ஹேமமாலினி, ரகசியா மூன்று பேரையும் நீச்சல் உடையில் காண்பிப்பதாக இயக்குனர் வேண்டிக்கொண்டாரோ என்னவோ. ஹேமமாலினி நமீதாவிற்கு போட்டியோ என்ற அளவிற்கு அசத்தியிருக்கிறார். ஆனால் நமீதா வந்தவுடன், நமீதா மட்டும் போதும் என்ற அவரை ஒதுக்கிவிட்டார் இயக்குனர். நமீதா தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கணக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆறடி ஆல்கஹாலாக இருந்தாலும் நமீதாவினால் எந்த போதையும் ஏற்படவில்லை.


இந்திர விழாவில் இந்திரனுக்கு வேலை கொடுக்காமல், நாயகிகளின் அடாவடியில் அமைதியாக வந்து போகிறார் ஸ்ரீகாந்த். நாசர் ஜான் குமாரமங்கலம் என்ற கதாபாத்திரத்தில், அவர் போடும் லாங்கோட்டின் அளவுக்கு கூட அவர் வரும் காட்சிகள் இல்லை. விவேக் காமெடி என்ற பெயரில் கடுப்பேத்துகிறார். பிறகு ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன் ஆகியோரின் கூட்டணியில் வரும் நீதிமன்ற காட்சிகள் ஓரளவு சிரிக்க வைக்கின்றன.


கவர்ச்சி ப்ளஸ் காமெடி என்று கணக்குப் போட்டு கதை எழுதியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ்வர். நமீதாவையே நம்பியிருக்கும் இயக்குனர், முதல் பாதியில் கவர்ச்சிக்கு முக்கியத்துவமும், இரண்டாம் பாதியில் காமெடிக்கு முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார். ஜெயித்தது என்னவோ கவர்ச்சிதான். இந்திரனுக்காக இல்லை என்றாலும், ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களுக்காக இவ்விழாவில் மக்கள் கலந்து கொள்வார்கள்.

2009ல் இதுவரை தமிழ்சினிமா

ஒரு படத்தின் வெற்றி இயக்குன‌ரின் கையில் இருக்கிறது. சிலர் நம்பிக் கொண்டிருப்பதுபோல் ஹீரோவோ, பிரமாண்டமோ அல்ல படத்தின் வெற்றியை தீர்மானிப்பது. எளிமையான கதையிலேயே எவரெஸ்டை தொடலாம். புதியவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். உணர்ந்து திருந்த வேண்டியது ஒவ்வொருவ‌ரின் கடமை. சென்ற வருடம் கிடைத்த பாடங்களிலிருந்து தமிழ் சினிமா எதையும் கற்றுக் கொண்டதாக‌த் தெ‌ரியவில்லை. 2008 வெளியான மொத்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 84. அதில் கரை சேர்ந்தவை ஏழே ஏழு. 2009ல் ஜூன் 30 வரை ஏறக்குறைய 51 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்தவை ஒன்பது. சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் நம்ப முடியாத முன்னேற்றம். ஆனால் இது போதுமா?

தமிழ் சினிமாவின் வியாபாரத்தை விஸ்த‌ரிக்கும் என்று எதிர்பார்த்த குசேலன், பீமா, குருவி, ஏகன், சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் அனைத்தும் பெருத்த நஷ்டத்தை சந்தித்தன. தமிழ் சினிமாவை ஓரளவு காப்பாற்றியவை என்றால் அது புதியவர்களின் சமரசமற்ற முயற்சிகளான சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, சரோஜா போன்ற பட்ஜெட் படங்கள் மட்டுமே.

சினிமாவின் முகத்தை ஹைடெக்காக மாற்றப் போவதாகக் கூறிய கார்ப்பரேட் ஜாம்பவான்கள் ஒருவர் பாக்கி இன்றி அனைவரும் மண்ணை கவ்வினர்.

எளிமையான கதை, சிறந்த திரைக்கதை, யதார்த்தத்தை மீறாத காட்சிகள். இவை இருந்தால் ஸ்டார் வேல்யூ இல்லாத படங்களும் வெற்றி பெறும் என்பது சென்ற வருடம் கிடைத்த பாடம். இந்த வருடத்தின் முதல் ஆறு மாத கால தமிழ் சினிமா வியாபாரம் அந்த பாடத்தை மீண்டும் உண்மையாக்கியிருக்கிறது.

பஞ்ச் டயலாக், பரபர சண்டைக் காட்சிகள், கால் மணிக்கு ஒரு குத்துப் பாட்டு என ஸ்டார் வேல்யூ ஃபார்முலாவில் வந்த ஏறக்குறைய அனைத்துப் படங்களும் இந்த வருடமும் பணால். விஜய்யின் வில்லு, விஷாலின் தோரணை சிறந்த உதாரணங்கள். பழைய ஃபார்முலாவில் வெளிவந்த ம‌ரியாதைக்கும் வரவேற்பில்லை.

இந்த ஆறு மாத காலத்தில் வெற்றியை அறுவடை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். முதலில் வெண்ணிலா கபடிக்குழு. ஸ்டார் வேல்யூ இல்லாத சராச‌ரி நடிகர்களால் உருவான படம். இயக்குனர் சுசீந்திரனுக்கும் இதுவே முதல் படம். எளிமையான கிராமத்து இளைஞர்களின் கபடி ஆசையின் வழியாக அவர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய இப்படம் அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. இதன் வெற்றி யதார்த்த சினிமாவுக்கான இருப்பை உறுதி செய்தது. ஆவி கதையுடன் வந்த யாவரும் நலம் இந்த வருடத்தின் எதிர்பாராத ஆச்ச‌ரியம். மாதவன் என்ற ஹீரோ நடித்திருந்தாலும் இயக்குன‌ரின் பழமை தவிர்த்த புதுமை சிந்தனையே படம் வெற்றியின் படிக்கட்டில் ஏற உதவியது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த சசிகுமா‌ரின் தயா‌ரிப்பில் வெளிவந்த படம் பசங்க. பதினாலு வயது சிறுவர்கள் நடித்த இந்தப் படம் ஸ்டார் வேல்யூ இல்லாமலே பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்தது.

பத்து இயக்குனர்கள் நடித்த மாயாண்டி குடும்பத்தார் பி அண்டு சி சென்டர்களில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. நஷ்டத்தை சந்திக்காத படங்களின் வ‌ரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். சமீபத்தில் வெளியான நாடோடிகளும் ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

நாம் மேலே பார்த்த ஐந்து படங்களும் இரண்டிலிருந்து நான்கு கோடிக்குள் தயாரானவை. பிரமாண்டமான அரங்குகள், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், தேவையற்ற சண்டைக் காட்சிகள் போன்ற தமிழ் சினிமாவின் சாபக் கேடுகள் ஏதுமற்றவை. எளிமையான கதையையும், யதார்த்தமான காட்சிகளையும், அ‌ரிதாரம் பூசாத நடிகர்களையும் நம்பி எடுக்கப்பட்டவை.

இந்த ஆறுமாத காலத்தில் வழக்கமான ஃபார்முலாவில் ஜெயித்த படங்கள் நான்கு. படிக்காதவன், சிவா மனசுல சக்தி, அயன், மாசிலாமணி. இவற்றில் படிக்காதவன், சிவா மனசுல சக்தி, மாசிலாமணி ஆகியவை வெற்றி பெற்றதில் அப்படத்தின் தயா‌ரிப்பாளர்கள் தண்ணியாக செலவழித்த விளம்பர பணத்துக்கு கணிசமான பங்குண்டு.

இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் என்றால் அது அயன். கே.வி.ஆனந்தின் இப்படம் தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கடத்தல் கதையை பிரமாண்டமாக காட்டியது. சூர்யாவின் நடிப்புக்கும், தொழில்நுட்பத்துக்கும் இந்த வெற்றியில் கணிசமான பங்குண்டு.

நல்லவனான ஹீரோ, கெட்டதை மட்டுமே செய்யும் வில்லன், டூயட்டுக்கு ஒரு ஹீரோயின் என்ற வழக்கமான அம்மாஞ்சித்தனங்கள் இந்த வருடம் வெற்றிபெற்ற படங்களில் இல்லை. விதிவிலக்குகள் படிக்காதவனும், மாசிலாமணியும்!