Wednesday, July 14, 2010

இந்தியாவின் இறையாண்மை!! அரசும் நாடும் ஒன்றா?

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றக் கட்டடத்தில் விடுமுறைக் கால குடும்ப நல நீதிமன்றத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசியபோது தமிழ்நாட்டின் சட்ட அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசியுள்ளார்.

“தமிழ்நாட்டில் சில பேர் வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். பேச்சுரிமை என்ற போர்வையில் அவர்கள் பேசுகின்றனர். இருப்பினும் அத்தகைய நபர்கள் விரைவில் புதிய சட்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களைத் தண்டிக்கத் தேவைப்பட்டால் கடுமையான புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்” என்று தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

‘இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது’ என்கிற இந்த சொற்றொடர் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும், ஏன் நாடாளுமன்றத்தில் கூட ஒலிக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான், அதுவும் கடந்த 4 ஆண்டுகளாக அதிகம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நாட்டின் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் உட்பட தமிழ்நாட்டின் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்தான் (ஏதோ இறையாண்மை என்பதும் காங்கிர‌ஸின் கண்டுபிடிப்பு, அதற்குத் தங்களுக்கு மட்டுமே அறிவுச் சொத்துரிமை உள்ளது என்பதுபோல்) தொடர்ந்து பேசிவந்தார்கள்.

அதுவும் எப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் வலிமையாக எழும்புகிறதோ, உடனே காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் படுகொலையை எழுப்புவார்கள். அந்த பூதத்திற்கு அடுத்தபடியாக அவர்கள் தட்டி எழுப்புவதுதான் இறையாண்மை. இந்த நாட்டின் இறையாண்மை மட்டுமல்ல, இலங்கையின் இறையாண்மை பற்றிக் கூட இவர்கள் மிகுந்த கவலையுடன் பேசுவார்கள். ஈழத் தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த முதலில் குரல் கொடுத்துவிட்டு பிறகு தன் அரசிய்ல வசதிக்காக தமிழக மக்கள் அதனை மறந்துவிட வேண்டும் என்று விரும்பிய தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி இறையாண்மை பற்றி பேசத் துவங்கினார். இவரும் இரண்டு நாடுகளின் (இந்தியா + இலங்கை) இறையாண்மையையும் பேசினார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறார் அல்லவா? பிறகு அதே பாணியில்தானே பேச வேண்டும்?

இப்போது அந்தக் கச்சேரியை அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்று, இருக்கிறாரா... இல்லையா என்ற சந்தேகத்திலிருந்த சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். எனவே இதில் துரைமுருகன் எந்த விதத்திலும் கட்சியின் கட்டுப்பாட்டையோ அல்லது முதல்வர் போட்ட கோட்டையோ தாண்டாதது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தொங்கிக் கொண்டிருக்கும் திராவிட அரசிற்கும் ஆபத்து எதையும் ஏற்படுத்தாமல் பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அரசும் நாடும் ஒன்றா?

துரைமுருகன் பேசியதில் கவனிக்கத்தக்க முக்கிய விடயம் என்னவெனில், “சில பேர் வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிவருகின்றனர்” என்று கூறியுள்ளார். அதுவும் ‘சில பேர்’ மட்டுமே பேசுவருகிறார்கள், அதற்கே இவ்வளவு பதட்டமாகி இவர் பேசியுள்ளார்.

இதில் ‘வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக’ என்று துரைமுருகன் பேசியிருப்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டுப் பிரச்சனை என்பது மாநில அரசு சம்மந்தப்பட்ட பிரச்சனை அல்ல, அது மத்திய அரசின் பொறுப்பின் கீழ் வரும் மிக முக்கியமான அமைச்சு. அவ்வாறிருக்க, ஒரு மாநில அமைச்சரான துரைமுருகன் ஏன் அதற்காக அலட்டிக் கொள்கிறார் என்று புரியவில்லை. சில பேர் பேசுவதால் இந்தியாவின் வெளிநாட்டு உறவிற்கு பங்கம் ஏற்படுகிறது என்றா‌ல் அது குறித்து இந்தியாவின் அயல் உறவு அமைச்சராக இருக்கிறத எஸ்.எம். கிருஷ்ணாதான் பேச வேண்டும், துரைமுருகன் ஏன் மருக வேண்டும் எ‌ன்று கே‌ட்க‌த் தோ‌ன்று‌கிறதா? அவசர‌ப்படா‌தீ‌ர்க‌ள்.

எஸ்.எம். கிருஷ்ணாதான் (அயலுறவுச் செயலர் நிரூபமா மேனன் ராவிற்குப் பிறகு) இந்தியாவின் அண்டை நாடுகள் குறித்து தகுதியுடன் அதிகம் பேசுபவர். இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று மனசாட்சியோடு அமைச்சர் கிருஷ்ணா பேசியதற்கு சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்தில் (லங்கா.எல்கே) கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது மட்டுமின்றி, இலங்கையின் இறையாண்மையில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து கட்டுரை வெளியிடப்பட்டது. இப்போதுதான் தெரிகிறது நமது தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராகவுள்ள துரைமுருகனுக்கு உள்ளத் தெளிவு நமது நாட்டின் அயலுறவு அமைச்சராக இருக்கும் கிருஷ்ணாவிற்கு இல்லை என்பது. இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சராகப் பெற்றதற்கு தமிழ்நாடு மாதவம் செய்திருக்க வேண்டும்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசாதே என்கிறார் துரைமுருகன். ஏன்? அது அவர்களுக்கும், காங்கிரசின் ஆதரவுடன் இன்னும் ஓராண்டு தள்ள வேண்டிய ஆட்சிக்கு ஆபத்து உண்டாகிவிடும் என்று (தனது தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சார்பாக) பொறுப்புணர்வுடன் பேசியுள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அது என்ன வெளிநாட்டுப் பிரச்சனை? எவ்வளவு அரசியல் சாதுரியம் துரைமுருகனுக்கு! அப்பப்பா புல் பயங்கரமாக அரிக்கிறது! இலங்கைப் பிரச்சனையைத்தான் குறிப்பிடுகிறார்... ஆனால் இலங்கைப் பிரச்சனை என்று பேசினால் அதுவே சிறிலங்க அதிபர் ராஜபக்சவிற்கு கோபத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? பிறகு அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி வைப்பது முடியுமா? அவரைச் சந்திப்பதால் ‘தமிழ் மக்களுக்கு’ பெற்றுத்தரக் கூடிய ‘அனுகூல’ங்களை பெறத்தான் முடியுமா? எனவேதான் அவர் இலங்கைப் பிரச்சனை என்று கூட சொல்லாமல், மிக இராஜதந்திரமாக ‘வெளிநாட்டுப் பிரச்சனை’ என்று சொல்லியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இலங்கைப் பிரச்சனை என்று கூறி, எதை மக்கள் மறைக்க வேண்டும் என்று தனது தானைத் தலைவர் விரும்புகிறாரோ அதனை ஏன் சொல்ல வேண்டும்? அதனைக் கேட்கும் மக்களுக்கு ஈழத் தமிழர் இனப் படுகொலையும், இன்றளவும் அவர்கள் அனுபவித்துவரும் துயரமும் நினைவுக்கு வந்துவிடாதா? பிறகு ரூ.380 கோடி செலவில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதன் நோக்கம் என்னாவது? இப்படி பல்வேறு விடயங்களை தன்னுள் அடக்கியவறாகவே துரைமுருகன் ‘வெளிநாட்டுப் பிரச்சனை’ என்று நாசூக்காக கூறியுள்ளார். எல்லாம் தமிழினத் தலைவரின் அமைச்சரவையில் தொடர்ந்து இருந்து பணியாற்றியதா‌ல் கற்றப் பாடமல்லவா?

எனவே, வெளிநாட்டுப் பிரச்சனையை மையப்படுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசக்கூடாது என்று அவர் கூறுவதில் ஒர் உன்னதமான உண்மையும் அடங்கியுள்ளதல்லவா? மத்திய மாநில அரசுகள் இணைந்துதானே அந்த வெளிநாட்டுப் பிரச்சனையில் செயல்பட்டன. உண்ணாவிரதம், மனித சங்கிலி என்றெல்லாம் நடத்தினாலும், அவையெல்லாம் மத்திய அரசிற்கு எதிரான நடவடிக்கை அல்லவே, தமிழர் அனுபவித்த துயரம் அந்த நிலைக்கு நம்மைத் தள்ளியது அவ்வளவுதான். எனவே அதிலுள்ள ஒற்றுமையை, தேச ஒற்றுமையை கருத்தில்கொள்ள வேண்டும், எதிர்த்து பேச‌க் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார். ராஜபக்ச அரசோடு இணைந்துதான் டெல்லி அரசு செயல்பட்டது என்பதையும், அந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு இரகசிய ஆதரவு அளித்தது என்பதையும் நன்கு புரிந்துகொண்டுள்ள அந்த ‘சில பேர்’ மட்டுமே பேசி வருகின்றனர். அவர்களுக்கே இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார் துரைமுருகன்.

அதுமட்டுமல்ல, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசுவது மட்டுமின்றி, அவர்கள் இந்திய இறையாண்மைக்கும் எதிராக பேசிவருகிறார்கள் என்பதையும் இனம் கண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளதற்கு பொருள் என்ன என்பது குறித்து பல்வேறு வழக்குளில் விளக்கமளித்துள்ள இந்தியாவின் உச்ச நீதிமன்றம், அது நாட்டின் எல்லைகளைக் காப்பதற்கும், விரிவுபடுத்துவதற்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசிற்கு மக்கள் அளித்துள்ள அதிகாரம் என்று கூறியுள்ளது. அதாவது எல்லைகளைக் காப்பதன்மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் இறையாண்மை என்பது. இதனை மன்னராட்சிக் காலத்து ‘அளவு கடந்த அதிகாரம்’ என்று பொருளில், அதாவது மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அரசன் நிர்ணயிக்கும் அதிகாரம் என்பதற்கு ஒப்பாக நமது அரசியல்வாதிகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் எப்போதெல்லாம் அரசின் தவறான நடவடிக்கையை சுட்டிக்காட்டினாலும், இந்த இன்பத் தமிழ்நாட்டில் அது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று பேசப்படுகிறது.

இந்தியாவின் கடல் எல்லைகளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் மீனவர்கள், அண்டை நாடான சிறிலங்காவின் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும்போது இந்தியா ஏன் அமைதி காக்கிறது என்று அந்தச் ‘சிலர்’ கேள்வி எழுப்புவதோடு நின்றுவிடாமல், தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய கடமை இந்திய அரசிற்கு இல்லையா? நமது கடற்பகுதிக்குள் அத்துமீறி வந்து நமது நாட்டு மீனவர்களை சுட்டுத் தள்ளிவிட்டுப் போகிறானே இது நமது நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கல்லவா? என்றும் கேட்கிறார்கள். இதுதான் (மத்திய, மாநில) ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. எல்லையென்றால் பாதுகாக்க வேண்டும் என்று யார் சொன்னது? எல்லைகளைச் சரியாக பாதுகாத்தால் பாகிஸ்தானில் இருந்து எப்படி பயங்கரவாதிகள் ஊடுருவ முடியும்? அவர்கள் ஊடுருவாவிட்டால் எதை வைத்து அயல் நாட்டு அரசியல் நடத்துவது? எல்லைகளை நன்கு பாதுகாத்தால், சீன இராணுவம் எப்படி நமது நாட்டின் பகுதிகளை கைப்பற்றும்? அப்படி நடக்காவிட்டால் அண்டை நாட்டுடன் எப்படி எல்லைப் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது? எனவே இறையாண்மை என்பது எல்லையைக் காப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வது, மீன் பிடிக்கச் செல்லும் தமிழனைக் காப்பது என்பதெல்லாம் அல்ல, அது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வது என்பதே! இதனை அறிந்தவர் துரைமுருகன்.

இறையாண்மை என்பது ஒரு சட்ட ரீதியான மிரட்டல் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. இறையாண்மை என்னவென்று புரியாவிட்டாலும், அதனை எவ்வாறு அரசியல் அச்சுறுத்தல் ஆயுதமாக பயன்படுத்தவது என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ள சட்ட மேதையான துரைமுருகன், அந்தச் சிலரை இறையாண்மை வார்த்தை கூறி மிரட்டியுள்ளார். அந்த மிரட்டிலில் எதிர்கால தேர்தல் அரசியல் அடங்கியுள்ளது எனபதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பேச்சுரிமையாவது கீச்சுரிமையாவது....

“பேச்சுரிமை என்ற போர்வையில் இவர்கள் பேசுகின்றனர். இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன. இருப்பினும் அந்த நபர்கள் விரைவில் புதிய சட்டத்தை சந்திக்க நேரிடும். இவர்களைத் தண்டிக்க தேவைப்பட்டால் கடுமையான புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இரண்டே வரியில் எத்தனை சட்டங்கள்! அப்பப்பா அசத்திவிட்டார். அங்கிருந்த நீதிபதிகள் கூட அரண்டுபோய் இருப்பார்கள். 1. இவர்களைத் தண்டிக்க சட்டங்கள் உள்ளன; 2. விரைவில் புதிய சட்டங்கள்; 3. தேவைப்பட்டால் கடுமையான சட்டங்கள்... அடடா... அடடா... எங்கோ போய்விட்டார் துரைமுருகன்! மீண்டும் பயங்கரமாக புல் அரிக்கிறது. அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களு‌க்கு எவ்வளவு அரித்திருக்கும்? எப்படி சொரிந்திருப்பார்கள்? வடிவேலு ஜோக்கைப் போல உடம்பு ரணகளமாகியிருக்குமே!

தண்டிக்க சட்டம் உள்ளது... தண்டிக்க வேண்டியதுதானே, புதிய சட்டம் எதற்கு என்று கேட்கிறீர்களா? அந்தச் சில நபர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் தருகிறார். அதற்காகவே புதிய சட்டத்தைத் தேடியிருக்கிறார். அது புதிதாக மட்டுமே இருந்தால் போதுமா? சடுதியில் ஒரு ஐடியா பிறக்கிறது அவருடைய அபார சட்ட மூளையில், உடனே கூறுகிறார்... கடுமையான சட்டம் என்று. அதுவும் நிறைவெற்றப்படும் என்று கூறவில்லை துரைமுருகன். ‘கொண்டு வரப்படும்’ என்று கூறுகிறார். அவர் ஏற்கனவே வெளிநாட்டுப் பிரச்சனை என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பதால்... அயல் நாட்டில் இருந்தே கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்று தெரிகிறது.

ஏனென்றால் சிறிலங்க அரசு பல வருடங்களாக அவசர நிலைச் சட்டத்தை பிரகடனம் செய்து, அதனை ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு புதுப்பித்துக் கொண்டிருக்கிறது அல்லவா? அதை வைத்துதானே அங்குள்ள பத்திரிக்கையாளர்களில் இருந்து அரசிற்கு எதிரான (அதாவது இறையாண்மைக்கு எதிரான) அனைவரையும் ‘உள்ளே’ தள்ளிக்கொண்டிருக்கிறது. அதைக் கொண்டுவருவோம் என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறார். கொண்டு வருவோம் என்று கூறியிருப்பதால், அதில் காங்கிரஸும் உள்ளது எனபதையும், அப்படிப்பட்ட சட்டம் இயற்றும் ஐடியா மத்திய அரசிற்கும் இருக்கலாம், அதைத்தான் கூட்டணி சூட்சமத்துடன் துரைமுருகன் கூறியுள்ளார் என்றும் கொள்ள வேண்டும்.

ஏன் அவசர கால சட்டத்தை மனதில் வைத்து துரைமுருகன் பேசுகிறார் என்றால், அதை 1975வது ஆண்டு ஜூன் மாதம் முதல் 20 மாதங்களுக்கு ‘நன்கு’ அனுபவித்த கட்சியைச் சேர்ந்தவர் அல்லவா, எனவே அந்த அனுபவத்தை குறைந்தது தமிழ்நாட்டிற்காவது தனது தலைவன் ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார். எல்லாம் அந்தச் சில பேருக்காகத்தான்.

‘பேச்சுரிமை என்ற போர்வையில்’ என்று அரசமைப்புச் சட்டம் நமக்களித்துள்ள அடிப்படை உரிமை குறித்துப் பேசியுள்ளார். பேச்சுரிமை குறித்தும் அதிகம் அறிந்தவர் துரைமுருகன் என்பது இளைஞர்கள் அதிகம் பேருக்குத் தெரியாது. தமிழக சட்டப் பேரவையில் மிக ஜாலியாக பேசக் கூடியவர் துரைமுருகன். பொருள் பொதிந்த அவருடைய வார்த்தைகள் பலமுறை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பெருமையைப் பெற்றவர். எனவே பேச்சுரிமைப் போர்வை எவ்வளவு ஆபத்தானது என்பது அவருக்குத் தெரியும்தானே?

இந்த நாட்டை வழிநடத்த துரைமுருகன் போன்ற சட்ட மேதைகள் நிச்சயம் தேவையே. ஏனென்றால் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரும் இல்லையே, நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த மகாத்மா காந்தியும் இல்லையே. நமக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த தலைவர்கள் ஒருவரும் இல்லையே.

Monday, April 19, 2010

IPL - சென்னை அணிக்கு தினமலரில் எச்சரிக்கை!

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் (ஏப்.,22), சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோதுகிறது. லீக் ஆட்டங்களில் இரண்டு முறையும் டெக்கானிடம் தோற்றுவிட்டது. இதற்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

மூன்றாவது ஐ.பி.எல்., ஆட்டங்களில் ஆரம்பத்திலிருந்தே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் மாத்யூ ஹைடன் சொதப்பி வருகிறார். ஒரு சில ஆட்டங்களில் அவர்சிறப்பாக பீல்டிங் செய்வதன் மூலம், தப்பித்துவருகிறார். அரையிறுதிக்கு வந்துள்ள மற்றஅணிகளில் எல்லாம் சொதப்பிய வீரர்களை களை எடுப்பதில் தயக்கம் காட்டவில்லை. ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களே இருக்க வேண்டும் என்பதால், ஹைடனுக்கு வாய்ப்பு அளிக்க போய், முரளிதரன் போன்றவர்களையும் இன்னும் சில வீரர்களை வெளியே நிறுத்த வேண்டியிருக்கிறது. மும்பை, பெங்களூரு, டெக்கான் அணிகளில், லீக் ஆட்டங்களில் சொதப்பிய வீரர்களை, அவர்கள் மூத்த வீரர்களாக இருந்தாலும், ஓரங்கட்டி வைக்க தயங்கவில்லை. மும்பையில் துவக்க ஆட்டக்காரராக வந்த ஜெயசூர்யா அவ்வளவாக எடுபடவில்லை. அவரை ஓரங்கட்டினர். டெக்கான் அணியில் முன்னாள் கேப்டனாக இருந்தபோதும், லட்சுமண் சரியாக விளையாடாததால், முக்கிய போட்டிகளின் போது அவரை சேர்க்காமல் ஒதுக்கி வைத்தனர். பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த விக்கெட் கீப்பரான மார்க் பவுச்சரை ஒதுக்கிவைத்துவிட்டு உத்தப்பாவை சேர்த்துள்ளனர். முக்கிய கட்டங்களில் உத்தப்பா சரியான முறையில் கிப்பீங் செய்யாவிட்டாலும், அவரை வைத்து கொண்டே சமாளிக்கின்றனர்.

சென்னை அணியில் இப்போதைக்கு அதிரடி மாற்றம் தேவையானதுதான், டெக்கான் அணியுடனான போட்டியின் போது, தோனி ஆர்டர் மாறி இறங்கியும் பலன் இல்லாமல் போனது. வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர் மட்டுமே இடம்பெற முடியும். ஹைடனை பேட்டிங், பீல்டிங்கை மனதில் வைத்து சேர்த்தால், பேட்டிங்கின் போது அவர் எடுபடாமல் போய் பின்னால் வருபவர்களுக்கு சிக்கல் வருகிறது. எனவே, துவக்க ஆட்டக்காரராக மார்க்கல் அல்லது ஹசிக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம். இல்லையெனில் அனிருத் ஸ்ரீகாந்த் போன்ற இளம் இந்திய வீரருக்கு வாய்ப்பு அளிக்கலாம். சென்னை அணியை பொறுத்தவரை பலமும், பலவீனமும் பேட்டிங்தான். பந்துவீச்சை பொறுத்தவரை ஏதோ அன்றைய சூழ்நிலையும், பிட்சும் சாதகமாக அமைந்தால் நன்றாக இருக்கிறது. இல்லையெனில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடுகிறது. இரண்டு லீக் ஆட்டங்களில் டெக்கானுடன் மோதி தோல்வியை தழுவியுள்ளோம்.சென்னையில் நடந்த போட்டியில் டெக்கான் முதலில் பேட் செய்து 190 ரன் எடுத்தது. இரண்டாவதாக சேஸ் செய்த சென்னை அணி 159 ரன் மட்டுமே எடுத்தது. நாக்பூரில் நடந்த போட்டியில் சென்னை டாஸில் வென்று முதலில் பேட்டிங் எடுத்து138 ரன் மட்டுமே எடுத்தது. இதை டெக்கான் எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. ஆக சென்னையை பொறுத்தவரை, அரையிறுதியில் அனைத்து வியூகங்களையும் கையாள வேண்டுமாம்.

மூன்று ஐ.பி.எல்., தொடர்களில் இரு அணிகளும் இதுவரை ஆறு முறை மோதியுள்ளன. இதில் சென்னை 2 முறை வெற்றிபெற்றுள்ளது. டெக்கான் அணி 4 முறை வென்றுள்ளது. இந்தாண்டு சென்னை அணி 7 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், முதல் பேட்டிங் செய்ததில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கிட்டியுள்ளது. சேஸ் செய்து நான்கு முறை வென்றுள்ளது. டெக்கான் அணியை பொறுத்தவரை, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் சென்னை அணியோ சூழ்நிலையை நம்பி இருக்கிறது. பைனலுக்கு முன்னேற வேண்டுமானால், இதையே எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு களம் இறங்க வேண்டுமாம்.

Thursday, March 25, 2010

லெளகீக வாழ்க்கையில் இன்னொரு சாமியார்!

திருச்சியிலுள்ள வழிவிடு முருகன் கோவிலின் பூசாரிதான் நான் கடந்த 10 ஆண்டுகளாக சபரிமலை செல்லும்போதும் எனக்கு இருமுடி கட்டி மலைக்கனுப்பும் குருசாமி. மண்ணச்சநல்லூர் அவரது சொந்தவூர், வருடம் முழுவதுமே மாலை போட்டிருக்கும் தீவிர பக்தர் அவர். முதல்தடவை அவரைப் பார்த்ததும் பேசியதும் இன்னும் என் நினைவில்.......வத்தி சுத்திக்கோங்க!
பக்தர்கள் வராதபோது சாமியார் என்னைப் பார்த்து சினேக பாவத்துடன் புன்னகைத்தார். நானும் லேசாகச் சிரித்தேன்.

''தம்பி எந்த ஊரிலிருந்து வர்றீங்க?'' என்று கேட்டார்.

''சென்னையிலிருந்து வர்றேங்க''.

''எத்தனாவது தடவை இது?''.

''முதல் தடவையாக இப்பத்தான் வர்றேன்''.

''சென்னையில் என்ன வேலை செய்றீங்க?''

''தேடிகிட்டிருக்கிறேன்''

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையிடையே பக்தர்கள் வரும்போது பேச்சு தடைப்படும். பக்தர்கள் வராதபோது பேச்சு மீண்டும் தொடரும். கொஞ்சம் ஆருடம் தெரிந்த அவர் என் பிறந்த நாளைக் கேட்டார். அமாவாசை என்றேன். நீங்க தினம் கோயிலுக்குப் போகாட்டியும் பரவாயில்லை. வருடாவருடம் சபரிமலையையாவது சென்று வாருங்கள் என்றார்.

"தம்பி மலை இயற்கை நமக்களித்த மிகப் பெரிய கொடை. மனிதர்கள், கோயில் கட்டலாம். குளம் வெட்டலாம், மாட மாளிகை கட்டலாம். விஞ்ஞானத்தினால் எதை, எதையெல்லாமோ கண்டுபிடிக்கலாம். ஆனால் ஒரு மலையை மனிதன் சிருஷ்டிக்க முடியாது. அதிலும் இந்த மலை நெருப்பை உள்வாங்கி, உள்வாங்கிக் கந்தக மலையாகயிருக்கிறது. மலை, இயற்கை, மரம், இதையெல்லாம் ரசிக்கின்ற மனம், சக மனிதன் மேல் இரக்கம் கொள்வது, மதிப்பது இதெல்லாம் இப்போது தமிழ்க் கவிதைகளில்தான் இருக்கிறது. நானும் நவீன இலக்கியம் படிச்சவன்தான். ரெம்பப் படிச்சதினாலதான் இந்தச் சாதாரண மனிதர்களோடு என்னால் அதிகமாக ஒட்ட முடியலை'' என்றார் சாமியார்.

சாமியாரை நான் இப்போது பார்க்கும் பார்வையில் மதிப்பு அதிகமாகயிருந்தது.

''சரி நேரமாகி விட்டது. நான் அடுத்த முறை வரும்போது அவசியம் உங்களை வந்து பார்க்கிறேன்'' என்று கூறி விடை பெற்றேன்.

அடுத்த வருடம் போகும்போது சாமியாரைப் போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் சாமியாரின் முகம் பெளர்ணமியானது.

''என்ன தம்பி இப்பத்தான் வர்றீங்களா?''

''ஆமாம் சாமி நேற்று வேலையிருந்தது. அதுதான் லேட்''

''பரவாயில்லை. இன்று மாலை முடிகட்டி இரவே கிளம்பிடலாம்.''

''ஐயா! நீங்க எப்படி சாமியாரானீர்கள்.''

சாமியார் சொன்னதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். சென்னையில் பெரிய தொழிலதிபர் பெயரைச் சொல்லி, (தமிழ்நாடு பூராவும் அவருக்கு நல்ல பெயரிருக்கிறது) அவரிடம்தான் பதினைந்து வருஷமாக உதவியாளராகப் பணியாற்றினாராம். இந்தத் சபரிமலைக்கு முதல் முதலாக அவரோடதான் வந்தாராம். தனக்கு அவர் பெரிசாக எதுவுமே செய்யலை என்றார். கொஞ்சம், கொஞ்சமாக வாழ்வின் மீது வெறுப்பு வந்து சாமியாரானாராம்.

''அந்தப் பெரிய மனிதர் ரொம்ப நல்லவர் என்று ஊருக்குள்ளே ஒரு பெயரிருக்கிறது. அவர் உங்களுக்கு ஏன் ஒன்றும் செய்யவில்லை?'' என்றேன்.

''இதைப் போய் நீ அவரிடம்தான் கேட்கணும். தம்பி, வாழ்க்கையில் எல்லா மனிதனுமே தன்னைச் சுற்றி ஒரு மாயத் தோற்றத்தைக் கட்டி எழுப்பி வைத்திருக்கிறான். அதை ஒவ்வொரு நிமிடமும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறான். அது உடைந்து போனால் வாழ்க்கையே அவனுக்கு நிர்மூலமாகி விடும். ஒரு மனிதனைப் பற்றி உருவாகியிருக்கும் வெளித் தோற்றத்திற்கும் அவன் உள்ளத்துக்கும் சம்பந்தமே கிடையாது. இது நான் அனுபவத்தில் கண்டது.''

கேட்ட எனக்கு ஆச்சரியமாகயிருந்தது.

''ஒரு தடவை சபரிமலை வரும்போது திரும்ப சென்னைக்குப் போக மனமில்லை. இங்கேயே சுற்றித் திரிந்தேன். எனக்கு இந்த ஊர், இந்த மலை, இங்குள்ள மக்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். இந்த கோவிலிலேயே தங்க ஆரம்பித்தேன். முதலில் என்னைப் பரதேசியாக நினைத்துக் காசு போட்டார்கள். அப்புறம்தான் கெளரவமாகப் பிச்சையெடுப்போம் என்று இதையெல்லாம் வாங்கி வந்தேன். இப்போது நான் சாமியார். மழை, பனி காலமானாலும் இங்கேயேதான் தங்குவேன்'' சொல்லி முடித்தார் சாமியார்.

இப்படித்தான் எனக்கும் அந்தச் சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

போனவருடம் போகும்போது அந்த கோவிலுக்குப் போனேன். சாமியாரைக் காணவில்லை. அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. "என்னாச்சி சாமியாரக் காணவில்லை. உடம்பு எதுவும் சரியில்லாமல் போச்சா?" அருகிலிருந்த இளநீர்க் கடைக்காரனிடம் விசாரித்தேன்.

''அந்தச் சாமியார் ஓடிப் போய்ட்டார் சார்'' என்றான்.

என்னது சாமியார் ஓடிட்டாரா? சாமியாருக்கு யார் மேல கோபம். எதுக்கு ஓடினார். வியாபாரம் நல்லா நடந்துகிட்டிருக்கும்போது கடையை இழுத்து மூடினது மாதிரியிருக்கே. எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கொஞ்ச நேரம் அந்த இடத்திலே இருந்து விட்டு வந்து விட்டேன்.

பிறகு சென்னையில் நண்பர்களுடன் ஒரு நாள் இரவு வேளச்சேரியில் உள்ள ஒயின்ஷாப்பில்...................சாமியா கும்பிட? சரக்குதான்!

நான் குடிச்சுக்கிட்டிருக்கும்போது அங்கு ஒரு ஆள் குவார்ட்டர் பாட்டிலோட வந்தார். அவரும் என்னைப் பார்த்தார். நானும் அவரைப் பார்த்தேன். இவரை எங்கேயோ பார்த்தது மாதிரி எனக்குத் தோன்றியது.

குடித்துக் கொண்டே யோசனை பண்ணினேன். அவ்வப்போது நானும் பார்ப்பேன், அவரும் பார்ப்பார்.

''உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் சார். எங்க என்று ஞாபகமில்லை'' என்றேன்.

''திருச்சி வழிவிடு முருகன் கோவில் சாமியார்'' என்றார்.

எனக்கு ஒரே ஆச்சரியம்!

''நீங்க எப்படி சார் மறுபடியும் லெளகீக வாழ்க்கைக்கு திரும்பினீர்கள்?'' என்றேன்.

''எங்கம்மாவுக்கு மூன்று ஆண் குழந்தைகள். நான்தான் மூத்தவன். அப்பா சிறு வயதிலேயே தவறிட்டார். அந்தப் பெரிய மனிதரிடம் நான் வேலை பார்க்கும்போது என் தம்பிகள் இரண்டு பேர்களையும் நல்லா படிக்க வைத்து, வேலையும் வாங்கிக் கொடுத்து திருமணம் பண்ணி வைத்தேன். இவனுக ரெண்டு பேர்களும் என் தாயை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வார்கள் என்று நினைத்துதான் பதினைந்து வருட போக வாழ்வைத் துறந்து மோன வாழ்க்கைக்குப் போனேன். ஒரு மனிதன் வாழும் தெய்வம் என்று இந்த உலகில் அடையாளம் காட்டணும் என்றால் அவனுடைய தாயைத்தான் அவன் காட்ட முடியும். தாயை விடப் பெரிய தெய்வம் இந்த உலகத்தில் கிடையாது. என் தம்பிகள் இரண்டு பேர்களும் என் தாயை நல்லபடியாகக் கவனிக்காமல் வீட்டை விட்டே துரத்திட்டார்கள். என் தாய் ரோட்டில் பிச்சையெடுக்கிறாள் என்று கேள்விப்பட்ட நான், எப்படி கோயிலில் சாமியாராக இருக்க முடியும். சொல்லுங்க பார்ப்போம்'' என்று சொல்லியபடியே கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

''அந்தப் பெரிய மனிதரைப் போய்ப் பார்த்தீர்களா?''

''தேவையில்லை. இப்போ ஒரு வீடு வாடகைக்கு எடுத்து என் அம்மாவோடு இருக்கிறேன். ஒரு பிரஸ்ல வேலை பார்க்கிறேன். என் அம்மா இறந்த பிறகுதான் லெளகீக வாழ்வைத் துறந்துட்டு சாமியாராகப் போவேன்'' என்றார். ''வர்றேன் சா(மி!)ர். மீண்டும் சந்திப்போம்'' என்று கூறி விடை பெற்றேன்.

வீட்டுக்கு கார் ஓட்டிட்டு வரும்போது யோசனை பண்ணினேன். இவருக்கு இவர் தாய் மேலிருக்கும் பாசம் ஏன்? இவர் தம்பிகளுக்கில்லாமல் போனது. வாழ்க்கைக்கு இன்னொரு பெண் துணை வந்ததும் பெற்ற தாய் மேல் உள்ள பாசம் குறைந்து விடுகிறதே. இவரும் திருமணம் பண்ணாமலே இருக்கட்டும் என்று அந்த ஐய்யப்பனை வேண்டிக் கொண்டேன்.

Wednesday, March 24, 2010

ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

ஒரு ஊருல ராஜா இருந்தாராம், நல்ல ஆட்சி செய்தாராம்.ஆனால் அவரது அமைச்சரைப் பற்றி அவ்வப்போது அரசால் புரசலாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர் காதில் விழுந்தனவாம். எந்த அரசாங்கக் காரியமானாலும் அவருக்கு 'வெட்டு' உண்டு என்றார்கள். ஊரெல்லாம், நாடெல்லாம் நிலம் வாங்கி குவித்து வருகிறார் என்றார்கள். அவரிடம் தனிக் கருவூலமே இருக்கிறது என்றார்கள். இந்தக் குரல் மெல்ல வலுவடைந்து அரண்மனைப் பக்கம் நகர்ந்து, அரசவையின் அத்தாணி மண்டபத்தையே அடைந்தது ஒரு நாள். ராஜா இனியும் தாமதிப்பது தமக்கே தீங்கு என உணர்ந்து 'விசாரணைக் கமிஷன்' போட்டார்.

கமிஷனின் தீர்ப்பு அமைச்சருக்கு எதிராக அமைந்தது. கடும் சிறை வாசமே தண்டனை என்றாயிற்று. ராஜாவோ பார்த்தார். அந்த அமைச்சர் பரம்பரை, பரம்பரையாக அமைச்சுப் பணியில் இருப்பவர். ஆகவே, அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று யோசித்தார். 'பளிச்'சென்று ஒரு கருத்து மின்னலிட்டது . அரசவையைக் கூட்டினார். தண்டனையை அறிவித்தார். தண்டனையின்படி மறுநாளே அமைச்சர் இரு உதவியாளர்களுடன் கடற்கரைக்குச் சென்று கூடாரம் அமைத்துக் கொண்டு, கடல் அலைகளைக் கணக்கிட்டு நாள் தோறும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பது ஆணை.

"கடல் அலைகளைக் கணக்கிடுவதா. மாட்டிக்கொண்டார் அமைச்சர்" என்று அனைவரும் மகிழ்ந்தனர். அவையே திடுக்கிடும் வகையில் அமைச்சர் உடனே ஒப்புக்கொண்டார். சொன்னபடி மறுநாள் முதல் தனது பணியை நிறைவேற்றத் தொடங்கினார்.

சில நாட்கள் ஆயின. கணக்கு வந்த வண்ணம் இருந்தது. ராஜாவுக்கு சரிவர ஆராயாமல் தண்டனை தந்துவிட்டோமோ என்ற கவலை சூழ்ந்தது. அதே நேரத்தில் 'கிசு கிசு' எந்திரம் 'க்றீ'ச்சிடத் தொடங்கியது. அமைச்சர் முன்பு இருந்ததை விட அதிகமாக லஞ்சம் வாங்குகிறார் என்று வதந்தி பரவியது. உளவுத் துறையைக் கேட்டார். தயக்கத்துடன் 'ஆமாம் 'என்றார்கள். ராஜா யோசித்தார். மாறு வேடம் புனைந்து நேரில் பார்த்து விடுவது என்று முடிவு செய்தார்.

மறுநாள் காலையில் மாறுவேடம் பூண்ட ராஜா கடற்கரை சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது.

ஏன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

Tuesday, March 23, 2010

கதை கதையாம் காரணமாம்....

கங்கைக் கரை ஓரமாக உள்ள ஒரு கிராமத்தில் வாழும் யாதவகுலப் பெண்கள் சிலர் தினமும் தலையில் மோர், தயிர் மற்றும் வெண்ணெயைக் கலயங்களில் சுமந்து கொண்டு கங்கையின் மறுகரையிலுள்ள கிராமங்களில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தனராம். தினம்தோறும் காலையில் ஓடத்தில் கங்கையைக் கடப்பதும், சாயங்காலம் அதேபோல ஓடத்தில் ஏறித் தங்கள் கிராமத்துக்குத் திரும்புவதும் வழக்கமாம்.

ஒருநாள் மாலையில் மறுகரையில் இருந்த ஓடத்துக்காகக் காத்திருந்த அந்த யாதவப் பெண்களை அருகிலிருந்த கிருஷ்ணன் கோயிலில் நடந்து கொண்டிருந்த உபந்நியாசம் கவர்ந்திழுத்தது. அந்தப் பெண்களும், பக்தர்கள் கூட்டத்துடன் அமர்ந்து கேட்டனர். ஓடத்தில் ஏறித் தங்களது வீட்டுக்கு வந்த பிறகும், அந்தப் பெண்களின் மனதிலிருந்து உபந்நியாசகர் சொன்ன ஒரு கருத்து அகலவில்லை. நமது பக்தி அப்பழுக்கில்லாததாகவும், முழுமையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்குமேயானால், நமக்கு அளப்பரிய சக்தி ஏற்பட்டுவிடும். உதாரணத்துக்கு, "கிருஷ்ணா" என்று மனதை ஒருமுகப்படுத்தி வேண்டினால், கங்கையைக்கூட நடந்து கடந்து விடலாம் என்பதுதான் அந்த மோர் விற்கும் யாதவப் பெண்களை மிகவும் பாதித்த கருத்து.

அடுத்த நாள் அதிகாலையில் கங்கைக்கரையில் கூடிய அந்தப் பெண்கள் தாங்கள் ஏன் உபந்நியாசகர் சொன்னதைச் செய்து பார்க்கக்கூடாது என்று நினைத்தனர். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண்கள் கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்திக் கண்ணனை நினைத்தபடி, தயிர்க் கலயங்களுடன் நடக்கத் தொடங்கினர். என்ன அதிசயம்? நிஜமாகவே அவர்கள் கங்கையை நடந்து கடந்துவிட்டனர்.

அன்றுமுதல் தினமும் கண்ணனை நினைத்தபடி கங்கையை நடந்து கடக்கத் தொடங்கிய அந்தப் பெண்கள் ஓடக்காரனுக்குக் கொடுத்து வந்த கூலியை ஓர் உண்டியலில் சேர்த்து வைத்தனர். தங்களுக்கு இறையுணர்வை ஏற்படுத்திய, கங்கையை நடந்து கடக்க வழிவகை செய்த மகானான உபந்நியாசகரைத் தங்களது கிராமத்துக்கு அழைத்து வந்து கௌரவிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசையை கிராமத்தவர்களும் ஆமோதித்தனர்.

உபந்நியாசகரும் ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அந்தப் பெண்கள் உபந்நியாசகரை அழைத்துக் கொண்டு கங்கைக் கரைக்கு வந்தனர். மறுகரையில் தெரிவதுதான் தங்களது கிராமம் என்று உபந்நியாசகருக்குக் காட்டினார்கள். உபந்நியாசகர் கேட்டார்-"எங்கே ஓடம்?"

"ஓடமா?, நீங்கள் சொல்வதுபோல நாங்கள் "கிருஷ்ணா" என்றபடி நடந்துதான் போகிறோம்" என்றபடி அந்தப் பெண்கள் கங்கையின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் நடக்கத் தொடங்கினர். உபந்நியாசகர் விட்டால் போதும் என்று பிடித்தார் ஓட்டம். எதற்கு இப்போ இந்த கதை என யோசிக்கிறீர்களா? ஊருக்கு உபதேசம் செய்யும் சிலபல பிரபல பதிவர்களுக்கு!

Tuesday, March 16, 2010

உள்ளூர பயம்!

என் விடலைப்பருவத்தில்
வெறித்துப்பார்த்து சிரித்த
வில்லங்க ஆண்களை
விவரமறியாமல் விட்டுவைத்தேன்
உள்ளூர பயம்!

பருவம் வந்தபின்
பள்ளி-கல்லூரி போகவர
பாதகர்களென்னை பார்வையிலேயே
அளவெடுக்க, கண்டும் காணாமலும்
விட்டேன், உள்ளூர பயம்!

எப்படியெல்லாமோ நூல்விட்டு
யாரையெல்லாமோ தூதனுப்பிய
கலிகால காந்தர்வர்கள்! - காதலை
எதிர்க்கவும் ஏற்கவுமியலாமல்
உற்றார் உறவிடமும் சொல்லாமல்
புதைந்தவை, உள்ளூர பயம்!

இரவு நேர பேருந்து
பயணத்தின் அரை உறக்கத்தினூடே...
ரகசியமாய் இடை வருடும்
பின் இருக்கை மிருகம்...
காமமும் கோபமும் ஒருசேர கிளர்ந்தெழ,
வருடலின் சுகம் மீறியும்
பளாரென அறைகிறேன்...
என் வருகையை எதிர்நோக்கி
தலையணை கட்டித்தூங்கும்
கணவன் முகம் நினைத்து...

Sunday, March 14, 2010

பேசாம கிரிக்கெட் வெளையாட கத்துக்கோங்க!

கிரிக்கெட் வருமானத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக, ஐ.பி.எல்., என்ற அமைப்பு துவக்கப்பட்டு, பல ஆயிரம் கோடிகளை குவித்து வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், கடந்த 12ம் தேதி துவங்கி, 45 நாட்கள் நடக்க உள்ளன. இந்த காலகட்டம், மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடக்கும் சமயம். இரவு 12 மணி வரை, மாணவர்களை டிவி-முன் உட்கார வைத்து ஐ.பி.எல்., சம்பாதிப்பதால், மாணவர்களது படிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமா? ஐ.பி.எல்., அமைப்பில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம், அடுத்த ஆண்டு 90க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுமாம். இந்த அணியை வாங்க, குறைந்தபட்ச கேட்புத் தொகை 1,100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், ஏலம் கேட்டு அணியை வாங்க வேண்டும். ஓர் அணிக்கு 1,100 கோடி ரூபாய் என்றால், மொத்தமுள்ள 10 அணிகள் மூலம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் இந்த ஐ.பி.எல்.,? இந்த சம்பாத்தியத்தின் மூலம் மக்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு கிடைத்தது ஒன்றுமில்லை. கிரிக்கெட் போட்டிகளைக் கூட, டிவி-யில் இலவசமாக பார்க்க முடியாது. கட்டணச் சேனல்கள் மூலம் ஒளிபரப்பப்படுவதால், ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு, டிவி-சேனலுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.

இந்தியாவில் உள்ளது போன்ற கிரிக்கெட் மோகம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. கிரிக்கெட் மட்டைகளோடு திரியும் சிறுவர்களை, நாடு முழுவதும் காணலாம். சிறிய காலியிடம் இருந்தால் கூட அங்கு நான்கு பேர், குச்சியை நட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிறுவனும், தான் சச்சினாக வேண்டும் என்று கனவு கொண்டிருக்கிறான். ஆனால், நிஜத்தில் அதற்கான வாய்ப்பு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது, மிகப் பெரிய கேள்விக்குறி. தேசிய அணியில் அதிகபட்சம் 15 பேர் தான் இடம்பிடிக்க முடியும். சரி, மாநில அணியிலாவது வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினாலும், அதில் பெரிய இடத்து பிள்ளைகள் மற்றும் கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டப்பட்டவர்கள் தான், எளிதாக நுழைய முடிகிறது.

தென்மாநிலங்களை சுனாமி தாக்கியபோது, கிரிக்கெட் வாரியம் முன்வந்து ஒரு பைசாவாவது செலவிட்டதா? அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல், பூகம்பம் தாக்கியபோதெல்லாம் இந்த கிரிக்கெட் ஹீரோக்களும், வாரியமும் எங்கு இருந்தனர் என்பதே தெரியாது. தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் இங்கு ஓடோடி வந்து, மக்களோடு மக்களாக தங்கியிருந்து, வீடு கட்டித் தர உதவினார். அதே நேரத்தில், இங்குள்ள ஹீரோக்களும், கிரிக்கெட் மூலம் கோடிகளை சம்பாதித்த ஹீரோக்களும் எட்டிப் பார்க்கவில்லை. இந்தியாவில், "டிவி' மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதிகள் வருவதற்கு முன், அதாவது, 30 ஆண்டுகளுக்கு முன், மேல்தட்டு பிரமுகர்களின் விளையாட்டாகவே கிரிக்கெட் இருந்தது. "டிவி' நேரடி ஒளிபரப்புடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தலைதூக்கியதும், மற்ற விளையாட்டுகளை நம் மக்கள் மறந்தே போய்விட்டனர். ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான். போட்டி துவங்கும் முன், இடைவேளை மற்றும் போட்டி முடிந்த பின் என, மூன்று சமயங்களில் மட்டுமே விளம்பரங்கள் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட்டில் ஓவர் முடிந்ததும், விக்கெட் விழுந்ததும், பந்து பவுண்டரி தாண்டும்போது, என, நிமிடத்துக்கு நிமிடம் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானமோ, பல கோடி ரூபாய்.

நிலைமை இப்படி இருந்தும், தங்களது குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற பெற்றோர், அவர்களுக்குத் தேவையான கிரிக்கெட் சாதனங்களை பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கித் தருகின்றனர். அதுமட்டுமா, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பயிற்சி அளிப்பதாகக் கூறி, பள்ளிகளில் பணம் கறக்கும் நிலைமையும் உள்ளது. குறிப்பாக, கோடைக்கால பயிற்சி முகாம் எனக் கூறி, சிறுவர்களிடம் ஆயிரக்கணக்கில் பறித்து விடுகின்றனர். ஆனால், உருப்படியான பயிற்சி எதையும் அளிப்பதாகத் தகவல் இல்லை. மக்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி, இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிகளை குவித்து வருகிறது. போதாத குறைக்கு, ஆடு, மாடுகள் போல கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். உதாரணமாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சென்னையைத் தவிர சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கான மைதானம் ஏதும் இல்லை. உலகக் கோப்பைக்காக, சென்னையை ஒட்டி மிகப் பிரமாண்டமான மைதானம் கட்ட, தமிழக அரசிடம் இருந்து நிலம் வாங்கிய கிரிக்கெட் வாரியம், அதை கட்டும் திட்டத்தை கைவிட்டது.

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பெராரி கார், பரிசுப் பொருளாய் கிடைத்தது. வெளிநாட்டு காரை நேரடியாக இறக்குமதி செய்யும்போது, 100 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அவர் கட்ட வேண்டிய வரி, ஒரு கோடி ரூபாய். புண்ணியவான் என்ன செய்தார் தெரியுமா? காரே ஓசி; அதற்கான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுதிக் கேட்டு, வாங்கியும் விட்டார். இப்படி வழங்கப்பட்ட கோடிகள், அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நாட்டிலேயே அதிகமான வரியை கிரிக்கெட் வாரியத்துக்கு விதிக்க வேண்டும். அதன் மூலம் வசூலாகும் தொகையை, ஏழை மக்களுக்குப் பயன்படுத்தாவிட்டாலும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காவது பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, கிரிக்கெட்டைப் பயன்படுத்தி, ஏதோ ஒரு சில தனி நபர்கள் பண முதலைகளாவதை அனுமதிப்பது, மக்களை முட்டாளாக்கும் செயல்.

இப்போதுள்ள கிரிக்கெட் வாரியம், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொண்டு, தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறது. வாரியத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான். மாநில மற்றும் தேசிய அளவில் கிரிக்கெட் வாரியத்துக்கான உறுப்பினர், தலைவர் தேர்தலின்போது நடக்கும் அடாவடிகள், வாய் பிளக்க வைப்பவை. கை மாறும் கோடிகள், ஆள் பிடிக்கும் குதிரை பேரங்கள், கோர்ட் படியேறும் கூத்துக்கள் என, அத்தனையும் தடாலடி தான். இப்படி பதவியைப் பிடிக்கும் நபர்கள் யாரும், கிரிக்கெட் வாரியம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது, கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிகளை, நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு செலவழிக்கலாம் அல்லது ரசிகர் பயனடையும் வகையில், அவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்தல், இலவச பயிற்சிகள், இலவசமாக போட்டிகளை, டிவி-யில் பார்க்கும் வசதி போன்றவற்றை வழங்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகள் தான். வீரர்கள், வாரியம் என, இவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரியைப் போட்டுத் தாளிக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு வரி விலக்கு அளித்து, சாமானிய மக்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டுகின்றன.

Wednesday, March 10, 2010

காதற்போயின் சாதல்!

ஒரு நிமிஷம் கவியென மெல்லிய தாய் ஒலித்த குரல் கேட்டு திரும்பினாள் கவி.

அவளின் முகம் பார்த்த நிலையில் அடுத்த வார்த்தை வராதவனாய் அப்படியே ஸ்தம்பித்து மௌனமாய் சில நொடிகள் நின்றான் பிரபா!

ஏன் கவி, என்னை நீ என்னைக்கும் புரிஞ்சுக்க மாட்டியா, நா . உன்னை உண்மையிலே நா மனசார விரும்புறேன். என் மனசு எல்லாம் நீ தானியிருக்கிறாய்.

நீ மட்டும் எனக்கு கிடைக்கலைன்னா நா கண்டிப்பா சூசைட் பண்ணிக்குவேன் அதில எந்தவித மாற்றமும் இல்லையென அவன் பேசியதில் கண்களில் ஒருவித வெறி தெரிந்தது.

ஒரு நிமிடம் கவி ஆடி போய் விட்டாள். உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்காயென்னா? இப்படி கண்டபடி பேசற.

நீ நல்ல பையன் தான். அழகாகவும் அடக்கமாகவும் தானிருக்கிற. ஆனா, நீ சின்ன கிராமத்துல பொறந்தாலும் பல மைல் தூரமுள்ள பக்கத்து ஊருக்கு கஷ்டப்பட்டு பல நாட்கள் நடந்தே ஸ்கூலுக்குப் போயி நல்லபடியா 12 வது வகுப்பு வரை விடாத முயற்சியோடு படிச்சு முதல் மாணவனா எக்ஸாம்ல வெற்றி பெற்று வந்திருக்கிற.

உன்னுடைய கஷ்டத்தோட பலனா நல்ல மார்க்குபெற்று காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருச்சு என்ன, என்னை அப்படி ஆச்சர்யமா பாக்குற. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்ன்னு யோசிக்கிற அப்படித்தானே அவளின் கேள்விக்கு அவன் தலையசைத்தான் ஆமாம்யென்பது போல்.

பற்கள் பளிச்சிட அவள் சிரித்தாள். இதெல்லாம் பர்ஸ்ட் டே நாம காலேஜ்க்கு வந்தன்னைக்கு நாம நம்மளை அறிமுகப்படுத்திக்கிட்டப்போ நீ சொன்னது. இதுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு யோசிக்கிறியா? இருக்கு! உன்னுடைய குடும்பம் ஏழைக் குடும்பமாயிருந்தாலும் உன்னை எப்படியாவது ஒரு பட்டதாரியா ஆக்கிடணும்னு உங்கப்பாவும் அம்மாவும் வயக்காட்டுல வெயில் மழைன்னு பாக்காம உடம்பை கூட சரியா கவனிச்சுக்காம உழைச்சு ஓடாய் ஒவ்வொரு நாளும் தேஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒண்ணுக்கு பத்தா வட்டிக்கு கடன் வாங்கியாவது உனக்கு எப்படியாவது ஒரு நல்ல வாழ்க்கைப்பாதையை அமைக்க தங்களோட சுய கவுரவத்தையும், உயிருக்கும் மேலான குடும்ப மானத்தையும் அடமானம் வைக்கிறாங்க.

அண்ணன் படிச்சு வந்து நல்ல வேலைக்கு போயி கைநிறைய சம்பாரிச்சு தனக்காக வரன் தேடி தன்னை வாழ வைப்பான்னு கல்யாணக் கனவு கண்டுக்கொண்டிருப்பாள் உன் தங்கை. இப்படிப்பட்ட ஆசைகளை அழிக்கப் போகும் இந்த காதலை நான் ஏற்கவா சொல்லு பிரபா?

நாம இப்பதான் காலேஜ் வாசலை அடியெடுத்து வச்சிருக்கிறோம். அதுக்குள்ள நமக்கு இந்த காதல் தேவையா? காதல் வேண்டாம்ன்னு சொல்லலை ஆனா அது இப்ப வேணாம். உன்னை பெத்தவங்களுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் இந்த காதலால இழந்து விடாதே! திரும்ப பெற முடியாது.

கடமையை நிறைவேற்ற நல்லா படி பிரபா. நல்ல மார்க். வாங்கி ரேங்க் ஹோல்டரா வா. அப்புறம் நல்ல வேலையை தேடிக்கிட்டு எல்லா கடமையையும் நிறைவேத்திட்டு வா! அப்ப நம்ம காதல் பற்றி பேசுவோம் என இத்தனை நாள் மனதில் பூட்டி வைத்திருந்த எண்ணத்தை வெளிப்படுத்திய நிறைவோடு தோளிலிருந்து இறங்க காத்திருந்த துப்பட்டாவை புத்தகங்களை பிடித்திருந்த இரு கரங்களின் ஒன்றில் அதனை தோளுக்கே உயர்த்தி அவனுடைய பதிலுக்கு காத்திராமல் நடை போட்டாள் அவள்.

பிரபா கிளாஸை விட்டு வெளியேறிய புரொபசரை நோக்கி நடையில் வேகத்தை கூட்டினான். நடையில் மட்டுமல்ல மனதிலும். தவற விட்ட முன் பீரியடை பற்றிய குறிப்பு வாங்க!

பிரபா நானுமில்லை! அந்த கவி என் மனைவியுமல்ல!!

Tuesday, March 9, 2010

மகிழ்வித்து மகிழ்

மகிழ்வித்து மகிழ்
அங்கொன்றும் இங்கொன்றுமாயில்லாமல்
நல்ல நண்பனை...
பரபரப்பில்லாத மனதை...
இனம் புரிந்த மனைவியை...
கலவர பூமியில்
மகிழ்வித்து மகிழ் எங்கும்.

பிரபஞ்சப் பெருவெளியில்
ஜனனக் குரலாய்
பல திசை இரைச்சல்கள்.
அண்ட சராசரத்தின்
சவ்வு கிழிய
நெரிசல் வாழ்க்கையின்
ஈரக்கசிவுகள்
வழிநெடுகத்
மகிழ்வித்து மகிழ் எங்கும்.

காய்ந்த தலையும்
வெறித்த பார்வையும்
இளமையில் முதிர்ச்சியும்.
நம்
சந்ததியர்களுக்கு விட்டுச்
செல்வது
அமில நீரும்...
விஷக்காற்றும்...
மகிழ்வித்து மகிழ் எங்கும்!

Wednesday, March 3, 2010

தி(.மு.க)ட்டமிட்ட செயல்! - சுவாமிஜி-ரஞ்சிதா!!சன்-நக்கீரன் மற்றும் பிரபல பதிவர்களுக்கு

பிரபலபதிவர்களே, படித்துவிட்டு உங்கள் கருத்தையும் எழுதிவிட்டு செல்லுங்கள்! உங்களைப்போல் நான் கூட்டம் சேர்த்து கும்மியடிக்க முடியாது! நடிகை ரஞ்சிதா, சுவாமிஜி நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து ஆசிரம வட்டாரம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தாவின் இயற்பெயர் ராஜசேகரன். இவருக்கு தமிழகத்திலும், கர்நாடகாவிலும் ஆசிரமங்கள் உள்ளன. பெங்களூருவில் மைசூர் சாலையில் உள்ள பிடுதி பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் உள்ளது. இதுதான் நித்தியானந்தாவின் ‌தலைமையகம். 32 வயதே நிரம்பிய நித்தியானந்தா, கதவை திற காற்று வரும் என்ற தலைப்பில் போதனைகளை கூறி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டிருக்கும் அவர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அவரது பக்தர்களை பெரும் கடுப்பேற்றியுள்ளது.

பெங்களூருலிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் பிடுதி என்னும் ஊரில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் நித்யானந்தர் ஆசிரமம் அமைந்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் திமுக-வின் பணயுதவியில் ஜெய் கர்நாடகா அமைப்பினர் 100 பேரும், பிரவீன் குமார் ஷெட்டியின் ரக்ஷன வேதிகே அமைப்பினர் 15 பேரும் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை ஆசிரமத்திற்குள் நுழைய போலீசார் அனுமதிக்க வில்லை. ஆசிரமத்தின் பின் பக்கம் வழியாக உள்ளே நுழைந்தனர். வாசல் பகுதியில் இருந்த நித்யானந்தரின் பேனர்கள், படங்களை கிழித்தெறிந்தனர். அப்பகுதியில் இருந்த கண்ணாடி கூண்டிலான போலீஸ் அவுட் போஸ்ட்டை அடித்து நொறுக்கினர். அந்த இடத்தில் போலீசார் அதிகமாக இருந்ததால், அதற்கு மேல் யாரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இரண்டு மணி நேரம் அங்கிருந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, நித்யானந்தர் படத்திற்கு செருப்பு மாலைகளை அணிவித்தும், செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆசிரம காம்பவுண்ட் சுவர் அருகிலுள்ள ஆசிரம குடிசைகள் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் நான்கு குடிசைகளும், அப்பகுதியிலுள்ள மரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. தீப்பிடித்து எரிந்த குடிசை வீடுகளில் எரிந்த நிலையில் படுக்கைகள் காணப்பட்டன. ஒவ்வொரு குடிசையிலும் இதுபோன்ற படுக்கைகள் எரிந்து சாம்பலாகியிருந்தது. தீப்பிடித்த பகுதிகளில் பாம்புகள் கருகிக் கிடந்தது தெரியவந்தது.

சேலத்தில், நித்யானந்தாவுக்கு எதிராக திமுகவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர அமைப்பாளர் பிரவீண் குமார் தலைமையில் பெரியபுத்தூர் பகுதியில் உள்ள நித்யானந்தா தியான மடத்துக்கு 15க்கும் மேற்பட்டவர்கள் நேற்று சென்றனர். தியான மடத்தின் போர்டை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உடைத்து நொறுக்கினர். மடத்துக்குள் புக முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அங்கு திமுக-வினர் திரளாக வரத்துவங்கினர். அதனால், அங்கு அசம்பாவிதம் ஏற்படும் என்ற பீதியில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை கலைந்து செல்லுமாறு கூறி கலைத்தனர். அப்போது, இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சிவபாபு அங்கு வந்து ஆசிரமத்தை மூடிவிட்டு, "ஆசிரமத்துக்குள் இருப்பவர்கள் அனைவரும் வெளியே செல்லுங்கள்” என கூறி கூச்சலிட்டார். போலீசார் அவரை மடக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின், அவரை பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி கைது செய்திருக்கலாம், செய்யவில்லை!

இந்நிலையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.

சுவாமி நித்யானந்தா தொடர்பான காட்சிகளை ஒளிபரப்புவதையும், செய்திகள் பிரசுரிப்பதையும் தடை செய்யக் கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சன் தொலைக்காட்சியில் சுவாமி நித்யானந்தா நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையிலுள்ள சிவில் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு விவரம்: உலகம் முழுவதும் 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் எனக்கு உள்ளனர். ஏழைகளுக்கு இலவச கல்வி, மருத்துவ உதவி போன்ற பல்வேறு சேவைகளை அளித்து வருகிறேன்.

எனது ஆசிரமத்தில் பணிபுரிந்த திமுக-வின் கையாள் பிரேமானந்தா (எ) லெனின் கருப்பன் என்பவர் என் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த விடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். இதில் எனது உருவம் "மார்ஃபிங்” முறையில் பொருத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகளை தொடர்ந்து வெளியிட்டால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படும்.

எனவே, இந்தக் காட்சிகளை வெளியிடுவதற்கும், இதுதொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கவும் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. சென்னை நகர 15-வது உதவி நீதிபதி மாணிக்கவாசகர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, வழக்கை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

வழக்காடிப் பார்ப்போம்! கண்ணால் கண்டது பொய்யா, காதால் கேட்டது பொய்யா?எனத்தெரியும்!!! அதுவரை நாட்டின் நல்லது கெட்டது அலசிப்பார்க்க நிறையவுள்ளது.... அதைப்பற்றி பேசுங்கள் எழுதுங்கள்...சன்-நக்கீரன் மற்றும் பிரபல பதிவர்களே.

Friday, February 26, 2010

வழக்கம்போல சிகரெட், புகையிலை பெட்ரோல் டீசல் வரி உயர்வு!!

இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்து பட்ஜெட் உரையைப் படிக்கத் துவங்கினார். முன்னதாக மத்திய அமைச்சரவை கூடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது. ‌சிகரெட், புகையிலை , பெட்ரோல், டீசல் சுங்க வரி உயர்வு அறிவிக்கப்பட்டதும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வெளிநடப்பு செய்தனர்.

* ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி இல்லையாம்;
* 1.60 லட்சம் முதல் 5 லட்சம் வரை 10 சதவீதம் வரி; 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை 20 சதவீதம்;
* 8 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம்
* விவசாயிகள் கடனைத் திருப்ச் செலுத்த அவகாசம்
* குறித்த காலத்தில் பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்தினால் வட்டிக்குறைப்பு
* மின்சார உற்பத்திக்கு கூடுதல் நிதி
* திருப்பூர் ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு 200 கோடி ரூபாய்
* பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரத்து 36 கோடி
* 25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு நீடிப்பாம்!
* பாதுகாப்புத்துறைக்கு ஒரு ‌லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ஒதுக்கீடு
* எதிர்பார்க்கப்படும் வரி வருவாய்- ரூ.7,46,656 கோடி; இதர வருவாய்- 1,48,118 கோடி
* எதிர்பார்க்கப்படும் செலவு: 11.8 லட்சம் ‌கோடி
* அரசின் மொத்தக் கடன் 3 லட்சத்து 45 ஆயிரத்து 10 கோடி
* சிகரெட் மற்றும் புகையிலை மீதான வரி அதிகரிப்பு
* கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதமாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 7.5 சதவீதமாகவும் அதிகரிப்பு
* பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி லிட்டருக்கு 1 ரூபாய் அதிகரிப்பு
* டி.வி., குளிர்சாதான பெட்டிக்கு வரி உயர்வு
* உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி குறைப்பு

சிகரெட், புகையிலை , பெட்ரோல் , டீசல் மீதான வரி அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டதும் சபையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதை ஆட்சேபிக்கும் வகையில் கோஷம் எழுப்பியதால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் பா.ஜ., சமாஜ்வாடி, இடதுசாரி உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். இன்று தாக்கலான பட்ஜெட் சமானிய மக்ளுக்கு எதிரானது என பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.

ஒட்டு மொத்த உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் லட்சியம். விலைவாசி உயர்வு குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. அதைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரும் பொருளாதார நிச்சயமற்ற நிலையிலிருந்து இந்தியா மீண்டுள்ளது. பொது விநியாக முறை நவீனப்படுத்தப்படும் ஏற்றுமதி நிலைமை ஊக்கம் அளிப்பதாக உள்ளது. பருவ மழை தவறியதால் வறட்சி ஏற்பட்டு, உணவுப் பொருள் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டு, பணவீக்கம் அதிகரித்தது.

நேரடி வரிவிதிப்பு முறையையும் பொதுவான விற்பனை வரி முறையையும் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. நிதி நிலையை ஸ்திரமாக்கவும் மேம்படுத்தவும் ஒரு உயர்மட்டக் குழு ஏற்படுத்தப்படும். கைவினைப் பொருட்கள், தரை விரிப்புகள், கைத்தறி மற்றும் சிறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வரிச் சலுகை மேலும் ஓராண்டிற்கு தொடரும்.

சிறப்பு பொருளாதார மண்டலஙக்ளின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். வற்ட்சி காரணமாக விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் தரப்படும். பயிர்க்கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் அதற்கான வட்டி விகிதம் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும். ரயில்வேக்கு வரும் நிதி ஆண்டில் 16 ஆயிரத்து 752 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுளள்ளது, குறைந்த செலவில் மின்சாரம் உற்ப்த்தி செய்யும் வகையில் கொள்கை மாற்றி அமைக்கப்படும்.

மின்சாரத் துறைக்கு 5 ஆயிரத்து 130 கோடி ஒதுக்கப்படும். திருப்பூர் ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதில் தனியார் பங்களி்ப்பும் ஏற்கப்படும். பள்ளிக் கல்விக்கு 31 ஆயிரத்து 36 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சுகாதார மற்றும் குடும்ப நலத்திற்கான திட்ட ஒதுக்கீடு 22 ஆயிரத்து 300 கோடியாக இருக்கும். கிராமப்புற மேம்பாட்டிற்கு 66 ஆயிரத்து 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்திற்கான ஒதுக்கீடு 19 ஆயிரத்து 894 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டிற்கு 5 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்படும். 25 லட்சம் ரூபாய் வரையான வீடுகளைக் கட்டுவதற்கான ஒரு சதவீத வரிக்குறைப்பு 2011ம் ஆண்டு மார்ச்31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. சேரி மேம்பாட்டிற்கு ஆயிரத்து 270 கோடி ஒதுக்கப்படும் என்றாராம்.

பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி காலை 10.10 மணி அளவில் பார்லி.,க்கு வந்தார். அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். அவருடன் நிதிதுறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் இணைந்து வந்தார்.

பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல்- டீசல் உற்பத்தி வரி உயர்ந்தத‌ை அடுத்து பெட்ரால் விலை லிட்டருக்கு ரூ. 2.67 ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.58 ம் உயர்கிறது. இந்த விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதாம்.

Monday, February 22, 2010

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

போலி ரயில் டிக்கெட் தயாரித்து நாடு முழுவதும் பயணம் செய்த வட மாநில ஆசாமிகள் மூவர், கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல வங்கிகளின் பெயரைக் கொண்ட போலி செக்குகளை அச்சடித்து, வினியோகித்த கும்பல் பற்றி, சி.பி.ஐ., கண்டறிந்துள்ளது. அக்கும்பலோடு தொடர்புடைய ஒருவனை, சி.பி.ஐ., கைது செய்து, அவனிடமிருந்து, 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான போலி செக்குகள் கைப்பற்றப்பட்டன.

தமிழகம், கர்நாடகா, கேரளா (திராவிட நாட்டில்) ஆகிய மாநிலங்களில், 2007ம் ஆண்டு முதல், போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். இப்படி எல்லாக் குற்றங்களையும், நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த போலி ரயில் டிக்கெட்டுகள் விவகாரத்தைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில், தென்னக ரயில்வேயைப் பொறுத்தவரை, அதன் பணியாளர்கள் கில்லாடிகள். சலுகைக் கட்டணத்தில் ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களை, "போதுமான சான்றுகள் இல்லை” என்று, வழியிலேயே இறக்கி விடுவர் அல்லது அபராதக் கட்டணம் என்று, ஒரு பெரும் தொகையைக் கறந்து விடுவர். அதேபோல, ஈ-டிக்கெட், தத்கல் போன்றவை மூலம் பயணம் செய்யும் பயணிகளும், ஒரிஜினல் சான்று இல்லாது பயணித்தால், டிக்கெட் இல்லாப் பயணிகளாகவே கருதப்பட்டு, அபராதத் தொகையைப் போட்டுத் தாளித்து விடுவர்.

அது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள எந்த ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட்டு முன்பதிவு செய்தால், நீங்கள் விரும்பும் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காது. இங்கிருந்து புறப்படும் அத்தனை ரயில்களுமே, முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் முழுமையாக நிறைந்தே புறப்படுகின்றன. இந்த நிலையில், போலி ரயில் டிக்கெட்டுகள் எப்படி சாத்தியமாகும்? நமக்குத் தெரிந்து, முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களுக்கு மட்டுமே, கேன்சல் செய்யும்போது, கால அளவுக்குத் தக்கவாறு, 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை கழித்துக் கொண்டு திருப்பி வழங்குவர். ஒதுக்கீடற்ற டிக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்து பணம் பெறும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆக, கோளாறு எங்கேயோ உள்ளது என்பது தான், மம்தா கண்டுபிடிக்க வேண்டிய விஷயம்.

அடுத்து என்ன பஸ் டிக்கெட்டா?

Sunday, February 21, 2010

தே.மு.தி.க. எங்கே போகிறது?

தமிழகத்தில் கடைசியாக நடந்த திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, விஜயகாந்த் கட்சியின் பலம் என்னவென்பது வெட்ட வெளிச்சமானது. அதன்பிறகு, பல கட்சிகளில் இருந்து தே.மு.தி.க.,விற்கு தாவிய பலரும், சத்தமின்றி கழன்று வருகின்றனர். பத்து சதவீத மாற்று கட்சியினர் மட்டுமே தற்போது கட்சியில் எஞ்சியுள்ளனர். தீவிர விசுவாசிகள் தற்போது கட்டம் கட்டப்பட்டு, 10 சதவீதமுள்ள மாற்று கட்சியினரை தக்க வைப்பதற்காக அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தீவிர ஆதரவாளர்களுக்கு, தி.மு.க., பாணியில் இதயத்தில் மட்டுமே இடம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநிலம் முழுவதுமுள்ள அதிருப்தியாளர்களின் ஒட்டு மொத்த குமுறல்கள், கடந்த 16ம் தேதி நாகை மாவட்ட நிர்வாகிகள் மூலம் வெளிப்பட்டது.

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள் தான்; வரும் 2011ம் ஆண்டு கோட்டையை ஆளப் போவது எங்கள் கட்சி தான் என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த தே.மு.தி.க.,வின் அஸ்திவாரம் சமீபகாலமாக ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.

நாகை மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் திரண்டு வந்த அவர்கள் அ.தி.மு.க.,வினர் பாணியில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டை முற்றுகையிட்டனர். அவர்களை சந்தித்து பேசுவதற்கு விஜயகாந்த் முன்வரவில்லை. விஜயகாந்த் உத்தரவுப்படி, அவர்களை கட்சி அலுவலகம் வரவழைத்து மாநில நிர்வாகிகள் சிலர் சந்தித்து பேசினர். பிரச்னையை பெரிதாக்கிவிட வேண்டாம் என்பதற்காக, இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால், நாங்கள் கொட்டி தீர்த்த குமுறல் களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்ற புலம்பல் சத்தம், விஜயகாந்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தானே இயக்கி நடிக்கும் விருதகிரி பட வேலையில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக விஜயகாந்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாவட்டச் செயலர், ஒன்றியச் செயலர் போன்ற பதவிகளில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டது. இதனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக மன்ற பணியில் இருந்து கட்சி பணி வரை தங்களை கட்சிக்கு அர்ப்பணித்த மூத்த நிர்வாகிகள் ஒதுக்கப்பட்டு, மாற்று கட்சியில் இருந்து வரும் வசதி, செல்வாக்கு படைத்தவர்களுக்கு "சிவப்பு கம்பளம் விரித்து" பதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்டச் செயலராக பொறுப்பேற் றுள்ள, பால அருள்செல்வன் என்பவர் தன்னை கவனிப்பவர்களுக்கு மட்டும் பதவிகளை வழங்கியுள்ளார். இதனால் கோபமான தொண்டர்கள், "கேப்டன்" வீட்டை முற்றுகையிடும் நிலை ஏற்பட்டது. "ஊழலை வேரோடு அழிக்க வந்துள்ளோம்" என்று களம் இறங்கிய தே.மு.தி.க. கட்சிக்குள்ளேயே, மாவட்ட அளவிலான பதவிகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கட்சியின் செயல்பாடு இப்படியே போனால், தொண்டர்கள் எதிர்காலம், குடும்பத்தினரின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.

கட்சியினரிடம் கேப்டன், "கூடி கலைவது கும்பல்; கூடி நிலைப்பது கூட்டம்" என அடிக்கடி பேசுவார். ஆனால் கூட்டமாக இருந்த தே.மு.தி.க.,வினர் இப்போது கும்பலமாக மாறி வருகின்றனர். இதை எப்போது தான் கேப்டன் புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை. சினிமா தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு இனியாவது அவர் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும். தனித்து போட்டி பார்முலாவால் இருள் சூழ்ந்து கிடக்கும் எங்கள் வாழ்க்கையில் கூட்டணி பார்முலா மூலம் அவர் ஒளி ஏற்ற வேண்டும். வரும் 24ம் தேதி அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வருகிறது. அன்று அவருக்கு மரியாதை நிமித்தமாக கேப்டன், போன் மூலமாவது வாழ்த்து சொல்லி கூட்டணிக்கு அச்சாரமிடுவார் என என்னை போன்ற தீவிர விசுவாசிகள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தே.மு.தி.க.,வினரின் இந்த எதிர்பார்ப்புக்கு விடை காணும் நாள் நெருங்கி வருவதால் அக்கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பு எழுந்துள்ளது.

Wednesday, February 3, 2010

வங்கம் தந்த வரலாற்று நாயகன்

இந்தியத் திருநாட்டின் இருள்படர்ந்த ஆங்கிலேய அன்னிய ஆட்சிக்காலக்கட்டத்தில், அதே பிரிட்டிஷ் நாட்டுக்கு உயர்கல்வி பயில்வதற்காகச் சென்று, அங்கிருந்தே காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கிற உத்வேகத்தோடு திரும்பி வந்து, விடுதலைப் போராட்ட வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு தலைமுறையே உண்டு. அதில் ஒருவராக இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் நம்மிடையே கலங்கரை விளக்கமாய் நின்று இலங்கிய வரலாற்று நாயகர்களின் வரிசையில் எஞ்சி நின்ற ஒருவர்தான் ஜோதிபாசு.


இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைமை, விடுதலைப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து செயலாற்றித்தான் தங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கியது என்பது வரலாற்றுப் பதிவு. அந்தப் பாரம்பரியத்துக்கும் சொந்தக்காரர்தான் 96 வயதுவரை வாழ்ந்து வழிகாட்டிய ஜோதிபாசு.


சட்டப்படிப்புக்காக ஜோதிபாசு 1935-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். ஜோதிபாசு லண்டன் சென்ற காலத்திற்கு முன்பாகவே மகாத்மா காந்தி தனது பாரிஸ்டர் பட்டப்படிப்பை முடித்துத் திரும்பி விட்டிருந்தார். அங்கு இந்திய மாணவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கிய இந்தியா லீகின் தலைவராக இருந்தவர் சுதந்திர இந்தியாவின் நேரு அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இடம்பெற்ற வி.கே.கிருஷ்ண மேனன். இவரையும் உள்ளிட்டு இங்கிலாந்தில் ஜோதிபாசுவுடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் பட்டியல் மிக நீண்டது.


ஹிரேன் முகர்ஜி, புபேஷ் குப்தா, ரஜனி படேல், பி.என்.ஹக்சர், மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, நிகில் சக்ரவர்த்தி, என்.கே.கிருஷ்ணன், அருண் போஸ், பெரோஸ் காந்தி போன்றவர்கள் பின்னாளில் இந்திய அரசியல் சமூக அரங்கில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர்கள். இவர்களில் பலர் ஒன்றாகச் சேர்ந்து இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பிரிட்டிஷ் மண்ணிலேயே ஆதரவும், நிதியும் திரட்டும் பணியில் முனைந்து லண்டன் மஜ்லிகள் அமைப்பைத் தொடங்கினர். அந்த அமைப்பின் முதல் செயலாளராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜோதிபாசு.

அந்த நாள்களில் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஓர் ஆதர்ச சக்தியாகத் திகழ்ந்தவர் ஜவாஹர்லால் நேரு. நேரு இங்கிலாந்துக்குச் சென்ற இரு சந்தர்ப்பங்களில் லண்டன் மஜ்லிகள் சார்பாக ஜோதிபாசு அவருக்கு வரவேற்பு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தாய்நாட்டின் விடுதலைக்கான வேட்கை ஆர்த்தெழுந்த அந்த இளமைப் பருவத்தில் ஜோதிபாசு உள்ளிட்ட இந்திய இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எதிரான உணர்வுகளும் பற்றிப் படர்ந்தன. இதன் தொடர்ச்சியாக அவர்களிடையே மார்க்சியம் மற்றும் இடதுசாரி அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் வளரலானது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களாக விளங்கிய ஹரி பாலிட், ரஜனி பாமி தத், பென் ப்ராட்லி போன்றோரோடு ஜோதிபாசுவுக்கு ஏற்பட்ட தொடர்பும் நெருக்கமும் அவரை ஒரு கம்யூனிஸ்டாகப் பரிணமிக்கச் செய்தது. அதன் விளைவாக லண்டனிலிருந்து நாடு திரும்பிய சில நாள்களிலேயே கட்சியின் முழுநேர ஊழியராக ஜோதிபாசுவின் வாழ்க்கை தொடங்கி விட்டது.


ஆரம்பநாள் கம்யூனிஸ்டுகள் அனைவரையும் போலவே ஜோதிபாசுவும், கட்சியின் முடிவுக்கிணங்க தொழிற்சங்கப் பணியில் ஈடுபட்டார். முதலில் துறைமுகத் தொழிலாளர்களின் மத்தியிலும், அடுத்து ரயில்வே தொழிற்சங்க இயக்கத்திலும் தன்னைப் பிணைத்துக் கொண்ட ஜோதிபாசுவுக்கு, அதன் வாயிலாகவே சட்டமன்ற நுழைவுக்கும் வழி திறந்தது. அன்றைய வங்காள மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ரயில்வே தொழிலாளர்களை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதி ஒன்றில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு ஜோதிபாசு முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினரானார். அந்த வெற்றியின் பின்னணி முக்கியமானது.


1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் தலைமை அறிவித்தது. மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழலில், ஒரு கட்டத்தில் அது பாசிச எதிர்ப்பு யுத்தமாக உருவெடுத்தது. அப்போது கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாடு, சர்வதேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சரியானதே என்றாலும், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. இது இன்றளவும் இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் விவாதப் பொருளாக ஆக்கப்பட்டு வந்துள்ள ஒரு பிரச்னை. 1946-ல் மாகாண சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜோதிபாசு உள்ளிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு எதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டு பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அதையும் எதிர்கொண்டுதான் ஜோதிபாசுவின் சட்டமன்றப் பிரவேசம் நிகழ்ந்தது.


சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பெறும் சம்பளத்தைக் கட்சிக்குக் கொடுத்து விடுவேன், கட்சி எனக்கு ஊதியம் வழங்கும் என்று ஜோதிபாசு தனது சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது இன்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றப்படும் நடைமுறை.


நாடு சுதந்திரமடைந்து, புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற 1952-ம் ஆண்டின் முதல் பொதுத் தேர்தலிலும் ஜோதிபாசு கோல்கத்தாவின் பாராநகர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். 1972-ல் மேற்கு வங்கத்தில் அரங்கேறிய அரை பாசிச அடக்குமுறைக்கு இடையிலான மோசடித் தேர்தல் ஒன்றைத்தவிர, ஜோதிபாசு இத்தொகுதியிலிருந்தே வெற்றி பெற்று வந்தார். பின்னர் அவர் முதலமைச்சரான 1977-ம் ஆண்டுத் தேர்தலில் சத்கர்ச்சியா தொகுதிக்கு மாறினார். ஜனநாயக இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 23 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக நீடித்த பெருமைக்குரிய ஒரே தலைவராக ஜோதிபாசு முத்திரை பதித்துள்ளார். இது அவரது நீண்ட நெடிய பொது வாழ்க்கையின் ஒரு சிறப்பம்சம் மட்டுமே. ஜோதிபாசுவின் வாழ்க்கைப் பயணம் இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஈட்டுத் தந்துள்ள பயன்களும், படிப்பினைகளும் பன்முகப்பட்டவை என்பதை நினைவு கூர வேண்டும்.


ஜோதிபாசு தன்னுடைய அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்ய முற்பட்டபோது அதற்கு அவரிட்ட தலைப்பு "மக்களோடு மக்களாக' என்பதே. அந்த நினைவலைகளை அறிமுகப்படுத்துகையில் அவர் குறிப்பிட்டார்: மக்களின் விடுதலையையே மையமாகக் கொண்ட எனது அரசியல் வாழ்வின்போது பல சிக்கலான பிரச்னைகளை நான் எதிர்நோக்கியிருக்கிறேன். மக்கள் வெற்றிக்கொடியை நாட்டியதையும் பார்த்திருக்கிறேன். அதேபோன்று, சில நேரங்களில் அவர்களின் தோல்விக்கு ஒரு சாட்சியமாகவும் விளங்கியிருக்கிறேன். மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஏராளமான சோதனைகளுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் மக்களே இறுதியில் வெற்றியடையப் போகிறார்கள். இந்த உறுதியான நம்பிக்கைதான் ஜோதிபாசுவை நாட்டு மக்களும் குறிப்பாக மேற்கு வங்க மக்களும் ஆழமாக நேசித்ததற்கும், அவர் மக்களை நேசித்ததற்கும் அடிப்படையாக இருந்தது.


ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்ற முறையில் ஜோதிபாசுவின் அரசியல் போராட்டம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருந்தது. ஆனால் கட்சி மாச்சரியங்களைக் கடந்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் பலரிடத்தில் அவர் நட்பும் மரியாதையும் பாராட்டி வந்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, இந்திய வரலாற்றில் வகித்த முக்கியமான பாத்திரத்தை அங்கீகரித்துப் பாராட்ட ஜோதிபாசு தவறியதேயில்லை. தேசிய விடுதலை லட்சியத்தில் தனக்கிருந்த உறுதிப்பாட்டை உலக அரசியலின் இதர முற்போக்கு சக்திகளோடு இணைக்கும் அறிவுத்திறனை நேரு பெற்றிருந்தார் என்று மனந்திறந்து புகழாரம் சூட்டியவர் ஜோதிபாசு. ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதில் நேரு தீவிர ஆர்வமும், நம்பிக்கையும் கொண்டவராக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கிய நிறுவனர் என்ற முறையில் அவர் சர்வதேச அரசியலில் எந்தச் சவாலையும் சந்திக்கும் நாடாக இந்தியாவை ஆக்கினார் என்று ஜோதிபாசு குறிப்பிட்டது, நேருவின் வரலாற்றுப் பங்களிப்பு பற்றிய துல்லியமான மதிப்பீடாகும்.


கூட்டாட்சிக் கோட்பாட்டை அங்கீகரிக்காத மத்திய காங்கிரஸ் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள் 1975-ம் ஆண்டின் அவசர நிலைமையின்போது உச்சகட்டத்தை எட்டியது.


இதுபற்றி இந்திரா காந்தியிடமே ஜோதிபாசு கேட்டபோது, அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்கும் மனோநிலையில் மக்கள் இல்லை. மக்களைச் சரியான பாதைக்குக் கொண்டு வர ஓர் அதிர்ச்சி வைத்தியம் தேவைப்பட்டது என்று அவர் பதிலளித்தாராம். ஆனால், இரண்டாண்டுகளுக்குள்ளாக சர்வாதிகாரத்தை நிராகரித்து, அவசர நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்திய ஜனநாயகப் பாரம்பரியம் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டதை ஜோதிபாசு வியந்து போற்றினார்.


மத்திய, மாநில உறவுகளை ஓர் ஆரோக்கியமான அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்பதற்காக ஜோதிபாசு காங்கிரசல்லாத மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி இது தொடர்பான ஒரு பிரகடனத்தை நாட்டு மக்கள் முன்வைக்க முயற்சி மேற்கொண்டது இன்றும் கூடப் பொருத்தமானதொரு சீரிய நடவடிக்கையாகும். கூடவே மாநிலத்திற்குள்ளேயே எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது என்பதையும், மாநில அரசின் அதிகாரங்களைப் பரவலாக்கி உள்ளாட்சி அமைப்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் முழுமை பெறும் என்பதையும் நடைமுறைப்படுத்திக் காட்டியவரும் அவரே. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஜோதிபாசுவின் ஆட்சிக்காலத்தில்தான் மேற்குவங்கம் பெற்றது. பின்னர் அது அகில இந்திய அளவில் விரிவாக்கம் பெற்றது.


வகுப்புவாத-அடிப்படைவாத அரசியல் என்பது இந்தியாவின் நீண்டகாலப் பாரம்பரியத்துக்கே எதிரானது என்று உறுதியான கருத்தின் அடிப்படையில், ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்திய, வேற்றுமையில் ஒற்றுமை என்ற லட்சியத்தையும், மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடிப்பதில் ஜோதிபாசு தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டவர்.


உலகப் போக்குகளிலிருந்து இந்தியா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது என்கிறபோதே, 1991-ல் நம்நாடு உள்நாட்டுப் பொருளாதாரத்தைத் தயார்படுத்திக் கொள்ளாமலேயே தாராளமயத்துக்கு இ ட்டுச் செல்லப்பட்டது என்று ஜோதிபாசு கருதினார். அறுபத்தி இரண்டு ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், மக்கள்தொகையில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் மட்டுமே பயன் அடைந்திருக்கக்கூடிய ஒரு சமூகத்தைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம். புறக்கணிக்கப்பட்டுள்ள 85 முதல் 90 சதவிகிதம் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நிலை இன்றில்லையே என்பது குறித்துத் தன் வேதனையை வெளிப்படுத்தியவர் ஜோதிபாசு.

÷1998-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று தில்லியில் ஜவாஹர்லால் நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றியபோது ஜோதிபாசு கூறியது, இன்றைய இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவாலும் அறைகூவலுமாகும். அவர் சொன்னார்: நம்முடைய சமூக-அரசியல் சூழலில் உள்ள மாசுபடுத்தும் கறைகளைப் போக்குவது அவசியமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொது வாழ்வில் ஒழுக்கம் என்பது பலியாகி வருகிறது.


இத்தகைய நிலைமைக்கு அரசியல்வாதிகளே பிரதானப் பொறுப்பாளியாவார்கள். இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கான மக்களுடைய உணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அழுகிப்போன இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்துவதில் ஒரு தலையாய பங்கை வகிக்கப் பொறுப்புணர்வு கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வர வேண்டும்.


வங்கம் தந்த வரலாற்று நாயகனின் இந்த வைரவரிகள் சமூகப் பிரக்ஞை கொண்ட அனைத்துத் தரப்பினரும் நெஞ்சில் பதித்து நிறைவேற்ற வேண்டிய கடமைச் சாசனம்!

Tuesday, January 12, 2010

திருப்பத்தை ஏற்படுத்துவாய் தையே!

சிங்கள இனவெறியும்
இந்திய ஆதிக்க வெறியும்
இணைத்து வன்னியில்
அழித்திட்ட தமிழினத்திற்கு
துக்கம் விசாரிக்க வருகிறாயா
தையே நீ

12 திங்களுக்கு முன்
தையே நீ பிறந்த அன்று
பாதுகாப்பு வலயத்திற்குள்
சிதறி அழிந்துக்கொண்டிருந்தது
ஈழ‌த் தமிழனின் மானமும்
தமிழீழ மாந்தரின் கற்பும்
இளந்தளிர் குழந்தைகளின் உயிரும்

இன்று பிறக்கின்றாய்
வாழும் நடைபிணங்காய்
வற்றிய கண்களுடன்
வாழ்ந்த வீடிழந்து
வரலாற்று அடையாளமிழந்து
உயிர்காத்த தேசமிழந்து
உணவளித்த காணியிழந்து
சிங்களவன் கொடுத்த ரேஷனை
மானத்தை விட்டு கையில் வாங்கி
வாழ வழிதேடி திக்கற்று
ஈழத் தமிழினம் நிற்கையில்
நீயும் மீ்ண்டும் பிறக்கிறாய்

என்ன கொண்டு வந்தாய்?
தையே நீ தமிழருக்கு
என்ன கொண்டு வந்தாய்?
இரக்கமற்ற உலகில் வாழ
பொருளேதும் உண்டா உன்வரவில்?
இருந்தால் கொடு இல்லையேல் போ

(உலகில்) எங்கு திரும்பினும் துரோகம்
எதை நோக்கினும் வணிகம்
இலங்கையில் தேர்தல் வியாபாரம்
ஏக்கத்தில் தவிக்கும் (தமிழர்) தலைவர்கள்
தமிழ்நாட்டில் எல்லாமே வார்த்தைதான்
வீர‌ஞ்சொரிந்த வார்த்தைகள்
சொரி நாய் கூட மதிப்பதில்லை
முகவரியற்று போய்விடுவோமோ
தத்தளிக்கிறது தமிழினம்
வழிகாட்டுவாயே தையே நீ

தமிழினமே கலங்காதே என்று கூறாதே
தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் கதைக்காதே
எல்லாவற்றிற்கும் முடிவுண்டு என்றும் பேசாதே
எதைச் செய்ய வேண்டும் என்று கூறு
மறந்துபோன (எம்) வீரத்தை ஊட்டு
எதையும் ஏற்கும் துணிவைக் கொடு
விடுதலை வேள்விக்குத் தயாராக்கு
எம்மை எதற்கும் துணிந்த இனமாக்கு

அதுபோது தையே உன்வரவை யாம் போற்றுவோம்
என்றென்றும் போற்றுவோம் பொங்கலிடுவோம்

நன்றி: வெப்துனியா

Saturday, January 9, 2010

"தெரியும்;​ ஆனால் தெரியாது" என்பது போல்தான் இது!

படிப்பனுபவம் வேறெந்த சுகானுபவத்தையும் விடச்சிறந்தது என்பது உய்த்துணர்ந்தவர்களுக்குப் புரியும்.

இசை,​​ நடனம்,​​ நாடகம்,​​ திரைப்படம்,​​ ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பும் ஓர் உயரனுபவம் என்பதோடு நில்லாது சிந்தனைக்குச் சாவி கொடுத்துச் செயலாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கும் அரும்பணி புரிகிறது.​ இந்தியச் சிந்தனை மரபு,​​ பல மொழிகளில் பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்தது-வருகிறது.

இன்று யந்திர கதியில் கோடுகளிடை ஓடும் சாரமற்ற வாழ்க்கையாக மாறிவரும் பரபரப்புச் சூழலில்,​​ நமது கலாசாரமும் கலைகளும் அருமருந்தாக உள்ளன.​ மக்கள் தொகைப் பெருக்கத்தாலும்,​​ சுய-புறக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் தகுதியற்ற போட்டிகளாலும் மாயமான் வேட்டையாகி வருகிற வாழ்க்கையில் வேரோடிய நமது நேற்றைய சிந்தனைகளும்,​​ சரித்திரமும்,​​ இலக்கியமும் இன்றைக்குப் புறந்தள்ளப்பட்டு விடுகிற அபாயம் தொடர்கிறது.​ இது நாளைய இந்தியாவுக்கு அபாயச் சங்கு ஊதும் தருணமாகி விட்டது.

வெறும் மதிப்பெண்தான் இன்றைய கல்வி.​ வெறும் வியாபாரமாகிவிட்ட கல்விச் சந்தையில் அறிவுதரும் கல்வியா கிடைக்கிறது?

"கல்வி அறிவு" என்பது பாமரர்க்கும்,எளியோர்க்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.​ ஆனால் கல்விதான் வழங்கப்படுகிறது இன்றிங்கே.​ அறிவு புகட்டப்படுவதில்லை.​ ​ ​ நிதியமைச்சர் அன்பழகன் அடிக்கடி கூறுவதுபோல,"படித்தவரெல்லாம் படிப்பவரல்ல"!

ஆம்.

​ ​ சற்று எளிதாகக் கூற முற்படின் வடிவேலு நகைச்சுவை போல்,​​

"தெரியும்;​ ஆனால் தெரியாது" என்பது போல்தான் இது!

வெறும் "பாடத்திட்டக் கல்வி' மட்டுமே முட்ட முட்டப் புகட்டப்படுகிறது.​ பொது அறிவும்,​​ பல்துறை தாகம் ஏற்படுத்தும் படைப்பாளுமைத் திறன் வளர் கல்வியறிவும் அறவே ஒதுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது கல்விக்கூடங்களில். அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கல்விக் கூடங்களில் நூலகமோ,​​ நூல்களோ காணக்கிடைக்காதவையே!​ ஆகவே நூலகரும் கிடையாது.

பள்ளிப் பாடத் திட்டத்தில் நூலக வகுப்பை மீண்டும் கொண்டு வந்து அதை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம்.​ ஆட்சி மாறுகிறது.​ ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.​ ஆனால் எக்காரணம் கருதியோ இக்கோரிக்கை உரிய கவனம் பெறுவதே இல்லை.

முன்பு தமிழகக் கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியும்,​​ உயர்நிலைப் பள்ளிகளில் வாரமொரு வகுப்பு-​ 45 நிமிடம் நூலக வகுப்பு,​​ கைத்தொழில் ஆகியவையும் பாடத்திட்டத்திலேயே நடைமுறையில் இருந்தன.

இதன்மூலம் பள்ளிப் பருவத்திலேயே பாடநூலைத் தாண்டி பொது அறிவுத் தேடல் மாணவரிடம் விதைக்கப்படுகிறது.​ வாழ்நாள் முழுவதும் இந்தப் படிப்பனுபவ சுகம் அவருக்கு ஒளிகாட்டுகிறது.

இதேபோல் கைத்தொழில் வகுப்பில் ஒரு வாரம் தச்சு வேலை,​​ ஒரு வாரம் தையல்,​​ ஒரு வாரம் தோட்ட வேலை,​​ ஒரு வாரம் சுற்றுச்சூழல் தூய்மை,​​ ஒரு வாரம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தருதல் போன்ற அடிப்படை விஷயங்கள் மூலம் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைச் சொந்த உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளத் தூண்டும் மனவலிவும் உழைப்பின் உயர்வும் ஊட்டப்பட்டு விடுகிறது.

இவையெல்லாம் நான் படித்த பள்ளி நாள்களில் எனக்குக் கிட்டிய அருமையான அஸ்திவாரங்கள்.

ஆனால் இன்று இவை பாடத்திட்டத்தில் இருந்து எங்கே விரட்டப்பட்டன?​ ஏன் விரட்டப்பட்டன?

இன்று பல பள்ளிகளில் விளையாட்டு உடற்பயிற்சி கூட,​​ மாணவர்களின் கவனத்திலிருந்து மறைந்து வருகிறதே என ஓர் ஆசிரியர் கவலையுடன் கூறினார். நமது அண்டை மாநிலங்களில் இன்றும் நூலக வகுப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசு,​​ தனியார் பள்ளிகளில் நூலகம்,​​ நூல்கள்,​​ நூலகர்,​​ நூலக வகுப்பு எனச் சீராகச் செல்கிறது.​

மாநிலம் முழுவதிலிருந்தும் பதிப்பாளர்களிடம் மாதிரிப் புத்தகங்கள் பெறப்பட்டு வகுப்பு-வயது வாரியான புத்தகங்கள் தேர்வு செய்யப் பெற்று பட்டியலிடப்படுகின்றன.​ இந்நூல்கள்தான் பள்ளி நூலகங்களில் வாங்கி மாணவர்களுக்கு மத்திய வாங்குகைத் திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பெறும் இம்முறையை ​(தமிழகத்தில் முன்னர் நிகழ்த்தப் பெற்றது)​ நாமும் மீண்டும் தொடர வேண்டும். வளரும் இளம் பருவத்திலேயே படிப்பனுபவம் விதைக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறையில் மனவளம் நிறைந்த ஆரோக்கியமான தமிழகத்தை வளர்த்தெடுக்க முடியும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

தமிழகம் முழுவதும் மாநகராட்சி,​​ நகராட்சி அமைப்புகள் மூலம் மக்களின் சொத்துவரி விதிப்பில் 10 சதவீதம் ​(முன்பு 5 சதவீதம்)​ நூலக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.​ ஆனால் ஆண்டுதோறும் விரட்டி விரட்டி வசூலிக்கப்படும் இவ் வரித் தொகை உடனுக்குடன் நிதித்துறை வழியாக நூல்கள் வாங்குவதற்கு வந்து சேருவதில்லை.

நூலகத் துறைச் சம்பளம்,​​ வாடகை,​​ நிர்வாகச் செலவுகள் அரசிடமிருந்து நேரடியாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது.​ ஆனால்,​​ மூலாதாரமான புத்தகங்கள் வாங்கும் தொகை இவற்றுடன் ஒப்பிட்டால் -​ எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் -​ ​ வேதனைதான் மிஞ்சும்.

நமது தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதும்,​​ வாங்காமல் தவிர்க்கப்படுவதும் ஒரு "பெரிய புராணம்".

அதற்கு மேல் விலை நிர்ணயம் என்பதும் விலை நிர்ணய உத்தரவைச் செயல்படுத்தும் விதமும் மிக மிக விநோதமானது;​ விசித்திரமானது.

நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகரித்து வந்தாலும் பொதுவாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை.​ சுமார் நான்கு,​​ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.​ விலை நிர்ணயம் செய்த பின்பும் அதைச் செயல்படுத்தத் தாராளமாக ஆண்டுகளைத் தள்ளிப்போடும் நிர்வாக யந்திரம் தங்களது சம்பளம்,​​ படிகளை எல்லாம் முன்தேதியிட்டுப் பெற்றுக் கொள்கிறது உயர்த்தப்படும்போது.

பதிப்பாளர்களுக்குப் பாராமுகமே காட்டப்படுகிறது.​ "கட்டாத விலை" ​ என்பதால் சமர்ப்பிக்கப்படுவதும் இல்லாமல்,​​ பெறப்பட்ட ஆணைக்கு நூல்கள் வழங்கப்படாமலும் தவிர்க்கப்படுகிறது.

இது இப்படியிருக்க,​​ "எமது நூல்களுக்கு ஆணை வழங்கப்படவில்லையே?" என முறையிடச் சென்றால் "ஆணை பற்றிப் பேசக்கூடாது" என்பதுபோல் நோட்டீஸ் ஒட்டிய கதவடைப்பு!

இவ்வருட அலொக்கேஷன்-​ ஒதுக்கீடு அவ்வளவுதான்.​ நீங்கள் எத்தனை புத்தகங்கள் சமர்ப்பித்தீர்கள்-​ எத்தனை நூலுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சதவீதம்தான் அளவுகோல்.

என்ன புத்தகம் வாங்கப்பட்டுள்ளது,​​ என்ன புத்தகம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

"நூல் தேர்வு" என்பது மர்மக்குகை இருட்டு ரகசியம்!

நூலகத் துறையால் புறக்கணிக்கப்படும் புத்தகங்கள் மக்களின் நேரடி கவனத்தில் ஈர்க்கப்பட்டு தொடர் பதிப்புகள் காண்கின்றன.​ ஆனால்,​​ பொது நூலகக் கிளை நூலகங்களை நாடும் வாசகருக்கு இக்கருத்துகள்-​ நூல்கள் சென்றடைய வேண்டுமென்கிற எழுத்தாளரின் சார்பில் பதிப்பாளர் முயல்கையில் இந்த சாரமற்ற பதில்களே கிடைக்கின்றன.

இவையெல்லாம் களையப்பட தமிழ்ப் பதிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது நூலகத் துறை மூலம் தமிழ் நூல்கள் வாங்குவதற்கென்றே-​ குறிப்பிடப்பட்ட 5 சதவீதம் மட்டுமாவது கல்வி நிதி ஒதுக்கீட்டில் வருடாந்திர நிதியாக வழங்கப்பட வேண்டும்.

நூல் தேர்வில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்-தவிர்க்கப்பட்ட -​ ஆணை வழங்கப்படாத நூல்களை -​ முதலில் உரிய அமைச்சரும் அதிகாரியும் ஆண்டுதோறும் கண்காணிக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட நூல்கள் தகுதியுடையவை என அறியப்பட்டால் அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்-மாவட்ட வாரியாக உடனுக்குடன் பதிப்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.​

​ மழை,​​ வெயில் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாகப் புத்தகக் காட்சி நடத்த ஊருக்குள் கண்காட்சி வளாகம் அமைத்துத்தர வேண்டும்.

தில்லியில் "பிரகதிமைதான்" போல் மாநகராட்சி,​​ நகராட்சிகளில் இக் "கண்காட்சி வளாகம்" கட்டப்பட்டு ஆண்டுதோறும் இருமுறை தலா பதினைந்து நாள்களுக்குப் புத்தகக் காட்சி நடத்த குறைந்த வாடகையில் இடம் தர வேண்டும்.​ மற்ற நாள்களில் ஆண்டு முழுவதும் வகைவகையான கண்காட்சிகள் நடத்தலாம் அங்கே.

மேலே குறிப்பிட்ட,​​ மூன்று கோரிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி தமிழ்ச் சமூகம் மீண்டும் தமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பாதையில் பீடு நடையிட்டுப் பயணிக்க தமிழக அரசு கடைக்கண் பார்வையைப் பதிக்க வேண்டும்.​ 33-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில்,​​ எழுத்தாளர்கள் சார்பிலும்,​​ பதிப்பகங்கள் சார்பிலும்,​​ புத்தகம் படிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இது.​ புத்தாண்டு நல்ல ஆண்டாகப் புலரும் என்கிற நம்பிக்கையுடன்...