Sunday, July 26, 2009

நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க வேண்டுமானால்...

மனம், உடல் சோர்வில் இருந்து விடுபட மனிதனுக்கு தூக்கம் என்ற ஒன்று அவசியமாகிறது. நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க வேண்டுமானால் இரவில், நமக்கு நல்ல தூக்கம் தேவை.

அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் பொதுவானதாக இருந்தாலும், மனிதன் மட்டும்தான் இயற்கையிலிருந்து மாறுபட்டு தனது தேவைக்கேற்ப தூங்கும் நேரத்தை மாற்றிக் கொண்டு பின்னாளில் நோயுற்று அவதிப்படுகிறான்.

இரவில் நன்றாகத் தூங்கினால்தான் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் என்ற நிலையில், இன்றைய காலகட்டத்தில் 30 சத மக்கள் தூக்கம் சம்பந்தப்பட்ட கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர் என்கிறது மருத்துவக் குழுவினர் நடத்திய ஓர் ஆய்வு. நோயாளிகளில் 50 சதவீதப் பேருக்கு தூக்கமின்மை நோய் உள்ளது என்றும் மருத்துவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சரியான தூக்கமின்மைக்கு சுற்றுப்புறச் சூழல், பதற்ற நிலை, கவலை, நடுக்கம் போன்ற பல பொதுவான காரணங்கள் உள்ளன. ரத்த அழுத்தம், இருமல், மனச் சோர்வு முதலியவற்றுக்காகப் பயன்படுத்தும் மருந்துகளால்கூட தூக்கமின்மை ஏற்படலாம்.

உலக மக்களையே மிரட்டிய ஹிட்லர் போர்க்காலத்தில் தூக்கம் வராமல் தடுக்க ஒருவகை மருந்தை கண்களில் ஊற்றி வந்ததாகவும், பின்னாளில் அந்த மருந்தால் அவருக்கு பல நோய்கள் ஏற்பட்டதாகவும் அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவரின் உறக்கம் கண் அசைவுள்ள தூக்கம், கண் அசைவற்ற தூக்கம் என்ற இரண்டு வகையான தூங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒருவர் தூங்கத் தொடங்கியவுடன் முதல் 90 முதல் 100 நிமிஷங்களுக்கு கண் அசைவு தூக்கம் ஏற்படுகிறது. பின்னர், கண் அசைவற்ற தூக்கம் பல நிலைகளில் ஏற்படுகிறது.

மொத்த தூக்கத்தில் கண் அசைவு தூக்கம் 20 சதமும், கண் அசைவற்ற தூக்கம் 80 சதமும் நிகழ்கின்றன. மூளைத் தண்டின் பான்ஸ் பகுதி சல்லடை நரம்பு இழைகள் தூக்கத்தைச் சீர்செய்வதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக, தூங்கும் அறையில் அதிக வெளிச்சமோ, அதிக சப்தமோ வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகைபிடித்தல் மற்றும் இதர நிக்கோடின் பொருள்களை படுக்கைக்குப் போகும் முன்பு அல்லது இரவின் நடுவே, தூக்கத்திலிருந்து விழித்திடும்போது பயன்படுத்தக் கூடாது.

இரவில் அதிகமான உணவை உள்கொள்வதால் தூக்கம் பாதிக்கப்படலாம். தூங்கச் செல்வதற்கு முன்பு காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுக்காக எந்நேரமும் தூங்கி வழிங்சி சோம்பேறினு பேர் எடுத்துராதீங்க! ஹி ஹி ஹி

0 பேரு சொன்னாங்க: