Sunday, June 7, 2009

அரசு வழங்கிய ஆவணம் செல்லாததாகி விட காரணம் ஆட்சியாளர்களே!

தமிழகத்தில் போலி ரேஷன் அட்டைகள் உள்ளதாக தமிழக அரசே அறிவித்துள்ளதால், அதை ஆவணமாகக் கருதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கவில்லை' என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் நரேஷ்குப்தா கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கிக் கணக்குகளைத் தொடங்க ரேஷன் அட்டையை ஆவணமாகக் கருதுவதில்லை என்பது பலரும் அறிந்த ஒன்று. இந் நிலையில், இன்று ரேஷன் அட்டையை ஆவணமாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மக்கள் தொகையைவிட ரேஷன் அட்டைகளில் இடம் பெற்றிருக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதும், பல லட்சம் போலி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சொந்த ஊரில் ஒரு ரேஷன் அட்டை, பணிபுரியும் இடத்தில் ஓர் அட்டை வைத்துள்ளவர்களும் உண்டு. அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்காக ஒரே ஊரில் பல முகவரிகளில் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பவர்களும், ரேஷன் கடையை நம்பி பிழைப்பு நடத்தும் "வியாபாரிகள்' பல ரேஷன் அட்டைகளை வைத்திருப்பதும் உண்டு.

போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கும் நோக்கத்தோடு, ரேஷன் கடைகளில் பொருள்களை குடும்பத் தலைவர் அல்லது குடும்ப அங்கத்தினர் மட்டுமே வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரிசி வாங்க கூப்பன் முறை கொண்டு வரப்பட்டது. கூப்பனை ரேஷன் அட்டையோடு கொண்டு வந்தால் மட்டுமே அரிசி வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. இதன் மூலம் போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, ரேஷன் அட்டைகளை புதுப்பிக்கவோ, புதிய ரேஷன் அட்டை வாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தவுடன், நிலைமையே மாறியது. கூப்பன் முறையும் நீக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரேஷன் அட்டைகள் "பல வழி'களின் மூலம் உயிர் பெற்றன. அங்கன்வாடி பணியாளர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பங்கள் கொடுத்தவர்களுக்கு உடனுக்குடன் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. முறையான விசாரணைக்குப் பின்னும், அரசு உத்தரவின்படியும்தான் இந்த ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதனால், புதிதாக லட்சக்கணக்கான அட்டைகள் புழக்கத்திற்கு வந்தன. இந் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் போலி ரேஷன் அட்டைகளை கண்டறிந்து, அவற்றைக் களைய வீடு, வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, ஆய்வு நடத்தப்பட்டு பல மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் முதல் 1 லட்சம் ரேஷன் அட்டைகள் "சந்தேகப்படும்படியான ரேஷன் அட்டைகள்' எனக் கூறி வருவாய்த் துறை ரத்து செய்தது.

தொடர்ந்து, இந்த அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்படாது என்றும் மேல்முறையீடு செய்ய வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், முறையான தணிக்கை நடக்கவில்லை என்றும் அரசு அலுவலர்கள் ஓரிடத்தில் அமர்ந்து சரிபார்த்ததன் விளைவாக உண்மையான அட்டைகள் ரத்து செய்யப்பட்டன என்று கூறி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"வாக்கு வங்கி' பாதிக்கும் என்ற அச்சம் காரணமாகவே போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும், உண்மையான அட்டைகளை முறைப்படுத்தவும் ஆளுங்கட்சிகள் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதே உண்மை. விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகளை "அள்ளி' வழங்கிய அரசு இப்போது புதிய நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.

"கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பதுபோல் இப்போது புதிய அட்டைகள் வாங்க பல்வேறு கெடுபிடிகள் உள்ளன. இந்த வகையில், உரிய ஆவணங்கள் அளித்து பல மாதங்களாக அட்டைக்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தேர்தல் ஆணையம்... என தொடர்ந்து மத்திய அரசின் துறைகள் ரேஷன் அட்டையை ஒரு ஆவணமாகக் கருதாமல் போகும் நிலை ஏற்படலாம்.

இதனால், வங்கிக் கணக்கு, பான் கார்டு... என அடையாளத்துக்காக ஆவணங்களைப் பெறுவதில் ஏழை, எளிய மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். மக்களுக்கு அரசு வழங்கும் ஓர் ஆவணம் இன்று செல்லாததாகி வரும் சூழ்நிலைக்குக் காரணம் ஆட்சியாளர்களே.

0 பேரு சொன்னாங்க: