Saturday, August 29, 2009

சிறைகளில் தமிழ் இளைஞர்கள்? - சட்ட அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், சந்தேகத்தின் பேரிலும் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பாக ஒரு விசாரணைத் திட்டத்தை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்க சட்ட அமைச்சகத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே கொலைத் தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக காவலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த ஜே.ஏ. பிரான்சிஸ் என்பவர் தொடர்ந்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த சிறிலங்க உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம், சந்தேகத்தின் பேரில் கைது என்று சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பின், அவர்கள் மீது வழக்குத் தொடரவோ, சாட்சிகள் இல்லாத பட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத் திட்டத்தை நீதியமைச்சகத்தின் செயலருடன் சேர்ந்து தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு சட்ட அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரான்சிஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அசோக என்.டி. சில்வா, “பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் எதுவுமின்றிச் சிறைப்படுத்தியிருப்பது நீதியற்றச் செயல்” என்று கூறியுள்ளார்.

சிறிலங்க அரசின் இப்படிப்பட்ட கைதுகள், சிறைப்படுத்தல்கள் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், அதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை நீதிபதி அசோக டி.என்.சில்வா கூறியுள்ளார்.

கொழும்புவில் உள்ள சிறைகளில் மட்டும் இப்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் 90 பேர் தங்களை விடுவிக்கக் கோரி சமீபத்தில் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 பேரு சொன்னாங்க: