Sunday, October 4, 2009

பாலியல் தொழில்! இந்தியாவில் பெண்கள், சிறுமிகளை கடத்தும் அவலம்!!

பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்தச் சமூக அவலநிலையானது தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகமாக அரங்கேறுகிறது. கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் நிலை தொடர்கிறது.

இதையடுத்து தமிழகத்தில்தான் பெண்களும், சிறுமிகளும் அதிகம் கடத்தப்படுகின்றனர். இங்கு 93.33 சதவீத மாவட்டப் பகுதிகளில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் சப்தமில்லாமல் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஒரிசாவில் 86.66 சதவீத மாவட்டப் பகுதிகளிலும், பிகாரில் 86.48 சதவீத மாவட்டப் பகுதிகளிலும் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் அவலம் நீடிக்கிறது.

இதுதவிர்த்து, பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்திலான பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் கொடுமை நடந்தேறுகிறது.இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் ஈடுபடும் பெண்களில் 2.4 சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள்.

இந்தத் தொழிலில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றால், மற்றொரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்களது குடும்ப நபர்களாலேயே வலுக்கட்டாயமாக இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.அந்தவகையில், 22 சதவீதப் பெண்கள் தங்களது குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 8 சதவீதம் பெண்கள் தங்களது கணவரின் நெருக்குதலின் பேரிலும் 18 சதவீதம் பேர் தங்களது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் சூழ்ச்சி வலையிலும் சிக்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலும் பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது. வறுமையும், ஏழ்மையும்தான் அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் முக்கியக் காரணிகளாக உள்ளன.பின்தங்கிய வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு எதிராகப் பிற அநீதிகளும் அதிகம் அரங்கேறுகின்றன. பெண்களுக்கு எதிரான அநீதிக்கு பாலினப் பாகுபாடும் முக்கியக் காரணமாக உள்ளது.

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. இதுவும் பெண்களுக்கு எதிராக துணிச்சலாக அநீதி இழைக்கப்படுவதற்கு காரணம்.தீர்வு என்ன?பெண்கள் இதுபோன்று பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு பொருளாதாரச் சூழ்நிலைதான் முக்கியக் காரணம். இதனால் அவர்களை முதலில் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக்க வேண்டும்.

அதேபோல, பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க நடைமுறையில் உள்ள சட்டத்தைத் திறன்படச் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்கத் தயங்கக்கூடாது.இதையெல்லாம்விட பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனநிலையை அனைவர் மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும்.

இவ்வாறு செய்தாலே பெண்களுக்கு எதிராக நடக்கும் 99 சதவீதக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று தேசிய பெண்கள் ஆணையத்தின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் பெண்களுக்கு எதிரான அநீதியை மட்டும் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வியாபாரப் பொருள்களாய் பெண்கள் கருதப்படும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது. இந்த நிலை என்று மாறும்?

3 பேரு சொன்னாங்க:

Anonymous said...

படிக்கவே கொடுமையா இருக்கு :(

said...

சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் திருப்பூரில் நடக்கிறது, இதற்கு நானே கண் கண்ட சாட்சி

said...

கொடுமைங்க :-0